தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது: 34, கணவர் வயது: 38; நடுத்தர குடும்பம்.

கணவரின் சிறு வயதிலேயே, அவருடைய பெற்றோர் இறந்து விட, மூத்த அண்ணன் தான் இவரை வளர்த்து ஆளாக்கினார். திருமணமான புதிதில், கூட்டுக் குடும்பமாக தான் வசித்தோம். அண்ணனின் மனைவி, வீட்டில் உள்ள அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவார்.

அண்ணனுக்காக பொறுத்துக் கொள்வோம். அப்போது தான், தொழிலில் நஷ்டமடைய, கணவருக்கு வேறு வேலை வாங்கி தந்து உதவினார். அதன்பின், தனிக்குடித்தனம் போய் விட்டோம்.

கணவரின் கடின உழைப்பால் முன்னேறி, இன்று நல்ல நிலையில் உள்ளோம். இப்போதும், அண்ணனின் மனைவி வீடு தேடி வந்து, எல்லாருக்கும் கேட்கும் விதமாக, சத்தமாக, அசிங்க அசிங்கமாக பேசுகிறார்.

இதுபற்றி, அண்ணனிடம் முறையிட்டால், 'நான் என்ன செய்யட்டும், அவ மனநிலை பாதிப்புல இருக்கா. கொஞ்சம் பொறுத்துக்கோ...' என்று கெஞ்சுகிறார்.

வளர்த்து ஆளாக்கிய அவரது பேச்சுக்காக, அமைதியாக இருக்க வேண்டியுள்ளது.

இன்னும் எத்தனை காலம் தான் பொறுத்து போக முடியுமோ தெரியவில்லை. இதனால், என் இரு குழந்தைகளும் பாதிக்கின்றனர்.

நிலைமையை எப்படி சமாளிப்பது, வழி காட்டுங்கள், அம்மா!

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

ஒரு குடும்பத்தில், திருமணமான இரு மகன்கள், இரு மகள்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நால்வர் குடும்பத்தில், தலா ஒரு இரண்டு சக்கர வாகனம் இருக்கும். திடீரென்று நால்வரில் ஒருவர், கார் வாங்கி விட்டால், மீதி மூவர் குடும்பங்களிலும் பொறாமை அரக்கன், தலைவிரித்து ஆடுவான்.

முட்டல், மோதல், உரசல்கள் தீப்பொறி பறக்கும். அதே நால்வரின் குடும்ப அங்கத்தினர்களின் உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் இல்லாத ஒருவர், 'ஆடி' கார் வாங்கி விட்டால், அதைப்பற்றி நான்கு குடும்ப அங்கத்தினர்களும் சிறிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அது, அவர்களுக்கு ஒரு அனாவசிய தகவல். இதுதான் மனித இயல்பு. போட்டியும், பொறாமையும், ஒப்பீடுகளும் நெருங்கிய வட்டத்துக்குள் தான் நிகழும்.

அடுத்து, உன் மூத்தாரின் அல்லது அத்திம்பேரின் மனைவியை எடுத்துக்கொள்வோம். உன் கணவரின் அண்ணன் தான், பெற்றோர் ஸ்தானத்தில் நின்று வளர்த்து ஆளாக்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, உன்னையும், கணவரையும் கூட்டுக்குடும்பத்தில் இணைத்து பராமரித்துள்ளார்.

தொழிலில் நஷ்டமடைந்து, கையை சுட்டுக்கொண்ட பின்னும், உன் மூத்தார், கணவருக்கு வேலை வாங்கி தந்துள்ளார். தனிக்குடித்தனம் போன நீங்கள், பொருளாதார ரீதியாய் உயர்ந்து விட்டீர்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால், உன் மூத்தார், உங்களிடம் ஒரு கோழிக்குஞ்சை கொடுத்துள்ளார். அதை, நீங்கள் வளர்த்து, பெரிய கோழி ஆக்கி விட்டீர்கள். நிறைய முட்டைகள் இட்டது, கோழி. அடை வைத்து, கோழிகளை பெருக்கி, நீயும், கணவரும் கோழி பண்ணை அமைத்து விட்டீர்கள். இது, உன் மூத்தார் மனைவிக்கு பொறாமையையும், வயிற்றெரிச்சலையும் கிளப்புமா, கிளப்பாதா?

மூத்தார் மனைவி, உன் வீட்டுக்கு வந்தால், அமைதியாக வரவேற்று, சிற்றுண்டியோ, காபியோ கொடுத்து உபசரி. அவர், தகாத வார்த்தைகள் பேசினால், 'அமைதிபடுங்கள் அக்கா. எதற்கு தேவையற்ற வார்த்தைகள் பேசுகிறீர்... மூத்தார் செய்த உதவிகளை, நானும், கணவரும் நன்றி மறக்கவில்லை. உங்களை, என் அம்மா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன்...

'நாங்கள், பொருளாதார ரீதியில் முன்னேறியதில், உங்களுக்கு என்ன பிரச்னை... எதாவது பண உதவி தேவைப்பட்டால், தயங்காமல் கேளுங்கள்; உதவ தயாராய் இருக்கிறோம். எங்கள் வீட்டு வாசலில் நின்று கத்தினால், உங்களுக்கும் சேர்த்து தான், அவமானம்.

'எங்கள் வீட்டுக்கு வந்தால், கத்ததான் தோன்றுகிறது என்றால், வீட்டுக்கு வருவதை தவிருங்கள்; பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கி நின்று உறவுகளை பாதுகாப்போம். ஏதாவது தகவல் சொல்லியே தீரவேண்டும் என்றால், மூத்தாரை, கணவரிடம் நேரடியாக பேச சொல்லுங்கள்...' என, சாந்தமாகக் கூறு.

'அக்காவுக்கு, உண்மையில் மனநிலை பாதிப்பா... எதனால் எங்களிடம் அதிருப்தியாக இருக்கிறார்... நாங்கள் என்ன செய்தால், அக்கா அமைதியாவார்... பணம் எதாவது தேவைப்பட்டால், சொல்லுங்கள் தருகிறோம். மேலும் மேலும், அக்கா எங்கள் மனங்களை புண்படுத்தாமல் இருக்க, எங்கள் வீட்டுக்கு வருவதை எப்படியாவது தடை செய்யுங்கள்...' என, மூத்தாரிடம் தெரிவி.

கணவரை, உன் மூத்தாரிடம் மனம் விட்டு பேச சொல். பிரச்னைகளின் ஆணி வேரை கண்டுபிடித்து அகற்றப்பார். எந்த சமாதான முயற்சிக்கும், மூத்தார் மனைவி அடங்காவிட்டால், மகளிர் காவல்நிலையத்தில், அவர் பற்றி புகார் செய்.

'அனுமதியின்றி என் வீட்டுக்குள் அத்துமீறுகிறார்; -தகாத வார்த்தைகள் பேசுகிறார். -தடுத்தால், உடல்ரீதியாக காயம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்-. என் வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்த பார்க்கிறார்-. கொலை மிரட்டல் விடுக்கிறார்...' என்ற விஷயங்கள், புகாரில் இருக்கட்டும்.

உன் வீட்டில் வந்து, அவர் கத்துவதை வீடியோ பதிவு செய். உன் புகாரை, பெண் காவல்துறை ஆய்வாளர் விசாரிப்பார். எதனால் கத்துகிறார் என்பதை, ஆய்வாளரிடம் ரகசியமாய் தெரிவிக்கக்கூடும், மூத்தார் மனைவி. ஆய்வாளர் முன், பண உதவி செய்து, 'இனி, உன் வீட்டில் வந்து கலாட்டா செய்ய மாட்டார்...' என்பதை, எழுதி வாங்கு.

இடைபட்ட காலத்தில், நீயோ, கணவரோ, நன்றி மறந்து பேசியிருந்தால், நிபந்தனையற்ற மன்னிப்பு கேள். எந்த பிரச்னைக்கும் தீர்வு, நம்மிடமே உள்ளது. உலகில் எந்த பூட்டுமே, சாவி இல்லாமல் உருவாக்கப்படவில்லை, கண்ணம்மா.

நிதானமாய் சகல விதங்களிலும் செயல்பட்டு, தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை அகற்று.

- -என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us