தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு—

என் வயது, 25. கணவர் வயது, 35. திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. காதல் திருமணம் தான். இன்னும் குழந்தை இல்லை.

என் பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம். ஏனெனில், கணவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக, அவரது சொந்த உறவு முறை அத்தையுடன், தகாத உறவு வைத்துள்ளார் என்ற பேச்சு, ஊர் முழுக்க எழுந்தது.

என்னை காதலிக்கும்போது, அக்கம் பக்கத்தில் அனைவரும், 'வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாதே...' என்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, 'அதெல்லாம் ஒன்றும் இல்லை...' என்றார். அவர் சொன்ன வார்த்தையை நம்பினேன். திருமணம் ஆன பின்தான், எல்லாம் உண்மை என்று அறிந்தேன்.

அதுமட்டுமின்றி, அவரது அம்மா வீட்டுக்கு அருகில் இருக்கும் திருமணம் ஆன பெண் ஒருவருடன் பழக்கம் உள்ளது. அதையும் நான் கண்டுபிடித்தேன்.

அதை கேட்டதற்கு, எனக்கு தினமும் அடி, உதை தான். 18 வயதில் இதெல்லாம் அனுபவித்தேன். போதாதற்கு வரதட்சணை கேட்டு அசிங்கமாக பேசுவார், அடிப்பார்.

அவருக்கு, சூதாடும் பழக்கம் உண்டு. மகனுக்கே உறுதுணையாக இருப்பார், மாமியார். நாத்தனார் மூவரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். நான் கோபித்து, அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து விடுவேன்.

என் தம்பிக்கு திருமணமாகி, ஒரு மகன் உள்ளான். நான், அம்மா வீட்டில் இருப்பது, தம்பி மனைவிக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவளுக்கு எல்லாமே நான் செய்ய வேண்டும். அவளும் அடிக்கடி அம்மா வீட்டிற்கு சென்று விடுவாள். நான் அம்மா வீட்டில் இருந்தாலும், கணவர் அடிக்கடி என்னை வந்து பார்த்து செல்வார்.

இப்போது, நான் அரசு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இதையறிந்த தம்பியின் மனைவி, கல்விச் சான்றிதழ் அனைத்தையும் எடுத்து, எங்கோ மறைத்து விட்டாள்.

எனக்கு அவள் மீது தான் சந்தேகம். ஏற்கனவே கை கடிகாரத்தை துாக்கி வீசி விட்டாள். அதனாலேயே, நான் அவளிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்தேன். எனக்கு ஒரு நல்ல தீர்வை சொல்லுங்க அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு,

திருமணமான ஆண்களில் மூன்று வகை உள்ளனர்.

முதல் வகையினர், திருமணபந்தம் மீறிய உறவுகளை தேடி அலைவர். ஆனால், அப்படி எந்த உறவும் சிக்காது.

இரண்டாவது வகை, பணத்தாலும், அதிகாரத்தாலும், ஆண்மையாலும், வசீகர பேச்சாலும் மற்றும் புகழாலும் பெண்களை கவர்ந்து, ஏகப்பட்ட பத்தினி விரதனாய் இருப்பர்.

மூன்றாம் வகையினர், வாய்ப்பு வசதிகள் இருந்தும், சீதாராமனாய், உத்தம புருஷனாய் இருப்போர். இவர்கள் இறந்து விட்டனர் அல்லது இன்னும் பிறக்கவே இல்லை.

உன் கணவன், இரண்டாம் வகை. திருமணபந்தம் மீறிய ஆண்கள், பெரும்பாலும் குடிப்பர், புகைபிடிப்பர், சூதாடுவர்.

உனக்கு குழந்தை இல்லாதது, கணவனுக்கு ஒரு நொண்டி சாக்கு. பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆண்கள் தான், பெரும்பாலும் குழந்தையின்மைக்கு பிரதான காரணமாய் இருப்பர். அதை மறைக்க, வீட்டு வன்முறையில் ஈடுபடுவர்.

அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* பொறுத்தது போதும் மகளே, பொங்கி எழு. 'திருமண பந்தம் மீறிய உறவுகளை உதறி தள்ளி, எனக்கு மட்டும் கணவனாய் இரு. நான் உன்னைப் போல் ஊர் பொறுக்கினால் சகிப்பாயா... உன்னை நம்பி காதலித்து மணந்ததற்கு, தண்டனை தருகிறாயா

'திருந்து அல்லது என்னை விட்டு விலகிப் போ. உனக்கு மூன்று மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் தவறான உறவுகளை கத்தரித்து, எனக்கானவனாக வந்து சேர். இல்லையெனில், சட்டப்படி விவாகரத்து செய்து கொள்வோம். என் வழி எனக்கு, உன் வழி உனக்கு...' என, தீயாய் கொதி

* உன் தம்பி மனைவியிடம், 'என் கல்வி சான்றிதழை ஒழுங்காக என்னிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால், உன் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்வேன். அங்கு, உன்னை முட்டிக்கு முட்டி தட்டுவர்...' என, அச்சுறுத்து

அவள், அதற்கு அசராவிட்டால், கவலைப்படாதே. கல்வி சான்றிதழ்கள் தொலைந்து விட்டதாக தாசில்தாரிடமோ, காவல்துறையிடமோ அறிக்கை பெறு. அதை வைத்து நீ படித்த பள்ளி, கல்லுாரிகளில் நகல் கல்வி சான்றிதழ் பெறலாம்

* நீ என்ன படித்திருக்கிறாய் என, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. நகல் சான்றிதழ் பெறும் அதே வேளையில், ஏதாவது ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படி. ஆறு மாத பயிற்சிக்கு பிறகு, 'குரூப் - 4' தேர்வு எழுது

* உனக்கு வயது, 25 தான் ஆகிறது. தோல்விகரமான திருமணத்துடன், உன் வாழ்க்கை முற்று பெறாது. உன் வாழ்வில், சில கதவுகள் மூடினால், சில கதவுகள் திறக்கும். கோழையாய், வெகுளியாய், பத்தாம்பசலியாய் வாழ்ந்து பயனில்லை. வாழ்க்கை என்பது போர்க்களம். புறமுதுகு காட்டி ஓடுவதில் அர்த்தமில்லை. வாளை சுழற்று; எதிரிகளை வீழ்த்து

* முழு உடல் பரிசோதனை செய்து கொள். குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல் தகுதி முழுமையாக உள்ளதா என, ஆதாரபூர்வமாய் தெரிந்து கொள். கணவனிடம் விவாகரத்து பெற்று, அரசு பணியிலும் அமர்ந்து விட்டால், மறுமணம் செய்துகொள்ளும் யோசனைக்கு தாவு. மறுமணத்தில் அவசரப்படாதே. சரியான நபரை தேர்ந்தெடுத்து, மறுமணம் செய்து கொள்

* பூட்டுகள் தயாரிக்கும் நிறுவனம், கட்டாயம், அதற்குரிய சாவிகளையும் உருவாக்கவே செய்யும். பிரச்னைகளுக்கான தீர்வு, உன் விவேகமான செயல்பாடுகளில் ஒளிந்திருக்கிறது. தாழ்வுமனப்பான்மை உன்னை அழிக்கும் சத்ரு. சுயபச்சாதாபம் மெல்ல கொல்லும் விஷம்

ஆண்கள், எதிரிகள் அல்ல; ஆனால், உனக்கு வாய்க்கும் ஆண், எதிரியானால் அவனை ஈவு இரக்கம் காட்டாது ஒழித்து கட்டு. கரப்பான்களிடமிருந்தும், பெருச்சாளிகளிடமிருந்தும் உன் மாளிகையை காப்பாற்று. வெற்றி உனதே மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us