PUBLISHED ON : ஜன 30, 2022

அன்புள்ள அம்மா -
நான், 35 வயது இளைஞன். பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் பணியை செய்து வருகிறேன். முகநுாலில் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன்.
எங்களுக்கு மூன்று வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அப்பாவும், அம்மாவும் மத்திய அரசு பணியில் இருந்தனர். அப்பா ஓய்வு பெற்று, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அம்மா, சென்ற ஆண்டுதான் ஓய்வு பெற்றார்.
என் அப்பாவுக்கு, அம்மா மீது காதல் அதிகம். 24 மணி நேரமும் அம்மாவையே சுற்றி வருவார். மனைவி சொல்லே மந்திரம். என் காதல் திருமணத்துக்கு, அம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பா தான், அம்மாவின் கால்களில் விழுந்து, சம்மதிக்க வைத்தார். என் அப்பா, சாப்பாட்டு பிரியர்.
எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அப்பாவை கவனித்து வருகிறேன். கோழியோ, ஆடோ அறுக்கும் இடத்தில் நிற்க மாட்டார். சாலை விபத்துகளில் அடிபட்டோரை வேடிக்கை பார்க்க மாட்டார். ஒருமுறை, எங்கள் தோட்டத்து மின்கம்பியில் மோதி, மைனா இறந்து விழுந்தது. அதை தற்செயலாக பார்த்து, நடுநடுங்கி விட்டார்.
எங்கள் உறவிலோ, நட்பிலோ யாராவது இறந்து விட்டால், இறந்தவர் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்க மாட்டார். இறந்தவர் பற்றி நாம் பேசினால், 'பேசாதே, அவரை பத்தி பேசாதே...' என, பதறுவார்.
கடந்த, 30 ஆண்டுகளில், 12க்கும் மேற்பட்ட மரணங்கள் எங்களது உறவு, நட்பு வட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இவர்களின் மரணங்களுக்கு எல்லாம் அப்பா ஒதுங்கி நின்றபோது பொறுத்துக் கொண்டேன். மூன்று மாதங்களுக்கு முன், 'மாசிவ் ஹார்ட் அட்டாக்'கில் இறந்து விட்டார், அம்மா. எங்கோ ஓடி ஒளிந்து கொண்டார், அப்பா.
ஊரெல்லாம் சல்லடை போட்டு தேடினோம்; கிடைக்கவில்லை. மூன்றாவது நாள் அவரே திரும்பி வந்தார்.
'சாவு... மரணம்... செத்து போறது... எனக்கும்... எல்லாருக்கும்...' இப்படி துண்டு துண்டாய் வார்த்தைகளை முணுமுணுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தார்.
அஸ்தி கலசத்தை தொட்டு பார்க்க மறுத்து விட்டார். துக்கம் விசாரிக்க வருபவர்களிடமிருந்து நழுவி ஓடினார்.
உயிருக்கு உயிராக காதலித்த அம்மாவின் இறுதி முகம் பார்க்காமல், காரியங்களை செய்யாமல் ஓடிவிட்ட சுயநல பேயான அப்பா மீது, எனக்கு வெறுப்பு வந்தது. மனைவியும், சம்பந்தி வீட்டாரும் அப்பாவின் துர்நடத்தை கண்டு காறி துப்பினர்.
தொடர்ந்து அப்பாவுக்கும், எனக்கும் வாய்சண்டையில், 'நாளைக்கு நான் செத்தாக் கூட நீ வந்து பார்க்க மாட்ட இல்லையா...' என, கேட்டதற்கு, பதில் சொல்லாமல் பம்முகிறார்.
இனி, நானும், அப்பாவும் ஒரே வீட்டில் இருக்க முடியாது. அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க தீர்மானித்து விட்டேன். யார் சாவை பற்றியும் கவலைப்படாமல், ஓய்வூதிய பணத்தில் ஒத்தை குரங்காய் வாழட்டும்.
அம்மா உயிரோடு இருக்கும்போதே, வீடு மற்றும் சொத்துகளை எல்லாம் என் பெயரில் எழுதி வைத்து விட்டார். அம்மாவின் ஓய்வூதியம், அப்பாவுக்கு கிடைக்காமலிருக்க, சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன்.
முதியோர் இல்லம் போக தயாராகி விட்டார், அப்பா. முதியோர் இல்லத்துக்கு செல்லும் அப்பாவுக்கு கண்டித்தும், தண்டித்தும் அறிவுரை கூறி வழியனுப்புங்கள், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு—
பிணம், சவப்பெட்டி, இறுதி சடங்கு மற்றும் கல்லறையை பார்த்து பயப்படுவதை, 'நெக்ரோபோபியா' என்பர்.
மரணத்தை, மரணம் பரிசளிக்கும் நஷ்டங்களை, உயிருக்கு உயிராய் நேசிக்கும் உறவுகளை விட்டு செல்கிறோமே என்ற பதைபதைப்பை கண்டு திகிலுறுவதை, 'தானேட்டோபோபியா' என்பர்.
இந்த இருவகை மனநோய்களும் அப்பாவுக்கு இருக்கிறது. நோயாளி அப்பாவை அன்பாய், பரிவாய் கவனித்து குணப்படுத்துவதுதானே, மகனின் கடமை. சுயநலப் பேய் என பட்டம் சுமத்தி, முதியோர் இல்லத்துக்கு, அப்பாவை விரட்டலாமா...
தமிழக ஜனத்தொகையில் குறைந்தபட்சம், 30 சதவீத பேராவது மேற்சொன்ன போபியாக்களில் ஒன்றால் பீடிக்கப்பட்டிருப்பர். ஏன், உனக்கு மரண பயம் இல்லையா?
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே ஆன காதல் மிகவும் அந்தரங்கமானது. மனைவியின் மரணம் எவ்வளவு துாரம் அப்பாவை பாதித்திருக்கிறது என்பதை, அம்மாவின் ஆன்மா துல்லியமாக உணர்ந்திருக்கும். அம்மாவின் பிரேதத்தை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தால்தான், அப்பாவை உண்மையானவர் என நம்புவாயா?
பெற்றோரின் சொத்தை நீ அனுபவிக்கலாம். ஆனால், மனைவியின் ஓய்வூதியத்தை, அவளது கணவன் வாங்க விடமாட்டாய். எவ்வளவு சுயநல மனிதன் நீ.
அப்பாவை உன்னருகே வைத்து, அவரின் மனக்காயத்துக்கு மருந்திடு. அவரை, மனநல மருத்துவரிடம் அழைத்து போ.
அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, உரையாடல் சிகிச்சை, வெளிப்பாடு சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை மூலம் அப்பாவை குணப்படுத்துவார், மருத்துவர்.
ஆன்மிக ரீதியான தத்துவார்த்தமான மரண பயம் பற்றிய மனபக்குவத்தை, கதாகாலட்சேபங்களுக்கு கூட்டி போய் ஊட்டு.
என்று பிறந்தோமோ அன்றே நம் மரண தேதியை குறித்தாகி விட்டது என்பதை நீயும் உணர்ந்து, அப்பாவுக்கும் உணர்த்து. மரணம், உடலுக்கான முடிவு, ஆத்மாவுக்கு அழிவே இல்லை என்ற நம்பிக்கையை அப்பாவுக்கு புகட்டு.
அப்பா இருக்கும் வரை ஆரோக்கியமாய் இருந்து ஆயுளை நீட்டிப்போம் என்ற உணர்வுடன், சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு உடற்பயிற்சிகள் மேற்கொண்டு மரணத்தை தள்ளிப் போட வை.
மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய, 10 பிரதான ஆசைகளை பட்டியலிட்டு, அப்பா நிறைவேற்றட்டும்.
'போபியா'களிலிருந்து அப்பா குணமான பின், அம்மாவின் புகைப்படம் முன் விழுந்து கதறி அழுவார் பார்... அன்று, அம்மாவின் மீதான அப்பாவின் காதலை அதே பரிமாணத்துடன் உணர்வாய்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
