தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எல்லா மொழிகளையும் படியுங்கள்!

எல்லா மொழிகளையும் படியுங்கள்!

எல்லா மொழிகளையும் படியுங்கள்!


PUBLISHED ON : மே 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 24, குமரகுருபரர் குருபூஜை

பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரத்தை கொண்டுள்ள நம் பாரத நாட்டில், பிற மாநிலங்களுக்கு சென்று பிழைப்பதற்கு, தடையாக இருப்பது, மொழி. அந்த தடையை, 350 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்தெறிந்தவர், குமரகுருபர சுவாமிகள்.

திருநெல்வேலியில் இருந்து செல்லும்-திருச்செந்தூர் சாலையிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் சிற்றூரில் வசித்த, சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாமி சுந்தரியம்மையின் புதல்வர், குமரகுருபரர். இவருக்கு ஐந்து வயது வரை பேச்சு வரவில்லை. தன் மகனுக்கு பேசும் திறன் வேண்டி, திருச்செந்தூர் சென்று தங்கி, கடும் விரதமிருந்தனர், அவரின் பெற்றோர். முருகப்பெருமானின் அருளால் குமரகுருபரருக்கு பேசும் சக்தி மட்டுமல்ல, செய்யுட்களை புனையும் அறிவும் ஏற்பட்டது.

இதன் காரணமாக, 'கந்தர்கலி வெண்பா' எனும் புகழ் மிக்க நூலை இயற்றினார். ஸ்ரீவைகுண்டத்தில், நவகைலாயத் தலங்களில் ஒன்றான, கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள கைலாசநாதரைப் புகழ்ந்து, அவர் பாடிய நூலின் பெயர், 'கயிலை கலம்பகம்!'

துறவு மீது நாட்டம் ஏற்பட்டு, மதுரை வந்த குமரகுருபரர், மீனாட்சியம்மையைப் புகழ்ந்து, வண்டாற் குழற்கண்ணி மலையத்துவஜன் பெற்ற மாமதுரை இளங்குயிலே வருகவே என, துவங்கி அவர் பாடிய பாடல்களின் தொகுப்பே 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்!'

இந்தப் பாடல்களின் நடுவே, மீனாட்சியம்மை சிறுமி வடிவில் தோன்றி, குமரகுருபரரிடம் பல கேள்விகளை கேட்டாள்; அதற்கு தக்க பதிலை குமரகுருபரர் அளிக்கவே, அவரை பாராட்டி, முத்துமாலையை பரிசாக அளித்தாள்.

செய்யுள் புனைவதில் மட்டுமல்ல, உறுதியான உள்ளமிக்கவர், குமரகுருபரர்.

துறவு வேண்டி தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிகரை அணுகிய போது, அவர், 'காசி சென்று வருவோருக்கே துறவுநிலை தரப்படும்...' என்று கூற, 'அதற்கு நீண்ட நாளாகுமே...' என்றார் குமரகுருபரர். 'அப்படியானால் சிதம்பரம் சென்று வா...' என்று கூறினார். அங்கு சென்ற குமரகுருபரர், 'சிதம்பர மும்மணி கோவை'யை பாடினார்.

பின், துறவு ஏற்று காசி சென்றார். அங்கே டில்லி பாதுஷாவின் ஆட்சி நடந்தது. இந்துஸ்தானி மொழியைக் கற்று, அவரை சந்தித்து, தன் ஆன்மிகப் பணிக்கு இடம் ஒதுக்க கேட்டார்; பாதுஷாவும் இடம் கொடுத்தார். அங்கே குமாரசாமி மடத்தை நிறுவினார்.

தமிழில் பாக்களை இயற்றும் திறமை பெற்றிருப்பினும், பிறமொழி கற்றதால் தான், இன்றும் குமாரசாமி மடம், காசியில் புகழ்பெற்று விளங்குகிறது. அவர் வைகாசி மாதம், தேய்பிறை திரிதியை திதியில் இறைவனுடன் கலந்தார்.

குமரகுருபரரின் வாழ்க்கை வரலாற்றை படிப்போர், பிறமொழி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்; தமிழைத் தவிர மற்றதைப் படிக்காதே என்ற கோஷங்களை நம்பி, வாழ்வின் முன்னேற்றத்துக்கு தடை போட்டு விடக் கூடாது!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us