sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உயிர்த்துடிப்பு

/

உயிர்த்துடிப்பு

உயிர்த்துடிப்பு

உயிர்த்துடிப்பு


PUBLISHED ON : மே 31, 2015

Google News

PUBLISHED ON : மே 31, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''தாங்க முடியல மாமா... எங்கயாவது ஓடிப்போயிடலாமான்னு இருக்கு,'' என, இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்து, தன் வேதனையை வெளிப்படுத்தினான் ராகவ்.

''என்னாச்சு?'' என்றார் நாகப்பன்.

''நிம்மதியே இல்ல மாமா... தினமும் நியூசன்ஸ்; ஏண்டா வீட்டுக்கு வர்றோம்ன்னு இருக்கு...'' என்றான்.

''அப்படி என்ன நடந்துச்சு...''

''என்ன நடக்கலன்னு கேளுங்க. விடியறதே சச்சரவோட தான் விடியுது. அம்மாவுக்கும், மாலினிக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போக மாட்டேங்குது. எதையாவது காரணம் வச்சு, கச்சேரி ஆரம்பமாயிடுது. அப்பாவாவது சும்மா இருக்கலாம்ல்ல... அவரும் சண்டைக்கு துணை போறவராயிருக்காரு. இவங்க என்னைக்காவது அபூர்வமாய், அமைதியா இருந்தா அன்னக்கி அத்தை ஆரம்பிச்சுர்றா... என் முன்னாடியே, குழந்தைகளை போட்டு அடிக்கிறா...

''புள்ளைகளும் சாதாரணமானதுக இல்ல... வால் முளைக்காதது தான் குறை. வீட்டையே சூறையாடிடுதுக. கன்ட்ரோல் செய்ய வேண்டியவங்களே, கைகட்டி வேடிக்கை பாக்குறாங்க. நான் சத்தம் போட்டா, சண்டையாயிடுது. இப்படி, தினமும் அதகளம் நடக்கும் வீட்டில, விருந்தினருக்கும் குறையில்ல; வந்தவங்களும் தின்னுட்டு சும்மா போறாங்களா... எதையாவது சொல்லி மூட்டி விட்டு போயிடறாங்க. அது, மாதக்கணக்குல புகைய ஆரம்பிச்சுடுது,'' என்றான் ராகவ்.

''இது எப்பவும் உள்ளது தானே...'' என்றார்.

''எவ்வளவு நாளைக்கு சகிச்சுக்கறதுங்கறது தான் கேள்வி... வாழ்நாள் பூராவும் இப்படியே போராடிக்கிட்டு இருந்தா வாழ்க்கையில என்ன ரசம் இருக்கு... இன்னிக்கு பாருங்க... அம்மாவோ ஜாக்கெட்ல கிழிசல். யாரோ அவளுக்கு எதிரா சதி செய்த மாதிரி, 'யார் செய்த வேலை இது... இப்படி எங்கும் நடக்குமா... பிளேடு வச்சு அறுத்திருக்காங்களே... இப்படிப்பட்டவங்க, தூங்கும் போது, கழுத்தை அறுக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்... கடவுளே... என்ன செய்வதுன்னு தெரு வாசலுக்கு வந்து கூப்பாடு போடுறாங்க. 'உங்கம்மா என்னை பழிகாரியாக்கறாங்களே... நான் என்ன அப்படி செய்யறவளா'ன்னு ஒப்பாரி வைக்கிறா மாலினி.

''சமாதானப்படுத்த வேண்டிய அத்தையோ ஓடிப் போய், தன் ஜாக்கெட்டெல்லாம் சரியா இருக்கான்னு பாக்குறாங்க. எதுவும் நடக்காதது போல அப்பா காபி குடிக்கிறாரு. ராட்சச குழந்தைங்க சண்டை போட்டு உருளுதுக. இந்த எரிச்சலோடு ஆபிஸ் போனா, வேலையே ஓட மாட்டேங்குது. வீட்டுல அமைதி இல்லாததால நிம்மதியே இல்ல. கவிதை கூட எழுத முடியல மாமா,'' என்றான் அழும் குரலில்!

''என்ன செய்ய முடியும்... வீடுன்னா அப்படித்தான் நாலும் நடக்கும். நாம தான் கண்டும் காணாம ஒதுங்கிக்கணும். வீட்டுக்குள்ளே சத்தமா இருந்தா மொட்டை மாடிக்கு போ. தலையிட்டு சரி செய்ய முடிஞ்சதை சரி செய்; முடியாததை அப்படியே விட்ரு. நாளா வட்டத்துல சரியாகிடும். என் வீட்ல எட்டு உருப்படிகள். தினமும், கார்கில் யுத்தம். காலத்தை தள்ளிகிட்டு போகலியா...'' என்றார்.

''இல்ல மாமா... இது சரிவராது. நிறைய பேர் சொன்னாங்க... 'கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் போயிடு; கூட்டுக்குடும்பம் சரி வராது'ன்னு! பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தான் இத்தனை காலமும் பொறுத்துப் போனேன். ஓய்வே இல்லாத பிரச்னைகள் தான் கூட்டுக்குடித்தனம்ன்னா அது தேவையே இல்ல. தயவு செய்து இதுக்கொரு வழி சொல்லுங்க. வீடு இப்படியே அமைதி இல்லாம இருந்தா வெளியில தான் ரூம் எடுத்து தங்க வேண்டி வரும்; இல்லன்னா வடக்கே எங்கயாவது டிரான்ஸ்பர் வாங்கிட்டு சொல்லாம போயிடுவேன்,'' என்றான் ராகவ்.

இந்த அளவுக்கு வந்துவிட்டவனை வார்த்தைகளால் சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்தார் நாகப்பன். ராகவ் குடும்பத்திற்கு ரொம்ப நெருக்கமானவர் நாகப்பன். அவர்கள் குடும்பத்து நல்லது, கெட்டதுகளில் அவரோட பங்களிப்பும் இருக்கும்.

ராகவ் அப்பா ரயில்வேயில் கலாசி வேலை பார்த்தே, காலத்தை ஓட்டி விட்டார். காபியும், பீடியும் மட்டுமே அவர் உலகம். அம்மாவோ பலகார பித்து. தின்னுகிறாளோ இல்லையோ, ஓயாமல் பலகாரம் செய்து, வினியோகம் செய்து கொண்டிருப்பாள். யார் வீட்டிலாவது விசேஷம் என்றால் ஓடி விடுவாள்.

கட்டிக் கொடுத்த இடத்தில் சில ஆண்டுகளே வாழ்ந்து, மூட்டை, முடிச்சோடு திரும்பிய அத்தைக்கு, யார் நிறைவாய் வாழ்ந்தாலும் பிடிக்காது. அது, இது என்று வம்பு பேசி, அவர் வாழ்க்கையை ரிப்பேராக்கி விடுவாள். இச்சூழலில் தான் ராகவ்வும், அவன் அக்காவும் வளர்ந்தனர்.

ராகவ் தலையெடுத்து சம்பாதித்து, அக்காவை கட்டிக் கொடுத்தான். அக்காவுக்கு மாப்பிள்ளையை தேடி வைத்ததுடன், தனிக்கட்டையாய் இருந்து விடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்த ராகவ்யையும், மாலினி கழுத்தில் மூணு முடிச்சு போட வைத்ததும் நாகப்பன் தான்.

ராகவ் ஒரு தனித்தீவு. ஒதுங்கியே இருப்பான்; அதனால், நண்பர்களும் இல்லை. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும், பேப்பர் பேனாவுடன் உட்கார்ந்து, கவிதை எழுத ஆரம்பித்து விடுவான். அவையும் வெளியாகி, பரிசும் வாங்கியிருக்கிறான். ஆனால், பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளும் குடும்பம், கவிதையை பற்றிப் பேசாது. 'குறுக்கெழுத்து போட்டி, குலுக்கல் போட்டியில் எல்லாம் கூட பணம் கிடைக்குமே... நீ அதற்கும் எழுதிப் போடேன்...' என்று அவன் படைப்பாற்றலை புறக்கணிக்கும்.

அவனது ஆற்றாமைகளைக் கொட்டிக் கொள்ள, நாகப்பன் தான் அடைக்கலம். சிறு வயதிலிருந்து அவனுக்கு பகிர்ந்து கொள்ள, புரிந்து கொள்ள அவரிடம் தான் வந்து நிற்பான். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லி, அனுப்புவார்.

இன்று, ராகவ் பொறுமையின் எல்லைக்கு வந்து விட்டதை உணர்ந்தவர், 'வெறும் சமாதானம் இனியும் எடுபடாது. எதையாவது செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால் டிரான்ஸ்பர் கிடைக்காவிட்டாலும் வடக்கே ஓடினாலும் ஓடிவிடுவான்...' என்று யோசித்தவர், ஒரு முடிவுக்கு வந்து, ''வீட்டில் அமைதியை கொண்டு வருவது சுலபம்தான். ஆனால், கொஞ்சம் அறுவை சிகிச்சை செய்தாகணும்; பரவாயில்லையா...'' என்றார்.

''என்ன வேணும்ன்னாலும் செய்யுங்க. வீட்ல அமைதி இருக்கணும்,'' என்றான்.

அடுத்து வந்த நாட்களில் காரியத்தில் இறங்கினார் நாகப்பன்.

ராகவின் பூர்வீக வீட்டை கொஞ்சம் மராமத்து செய்யச் சொல்லி, அவன் பெற்றோரை அங்கே போகச் சொன்னார். அவர்கள் சுலபத்தில் சம்மதிக்கவில்லை. 'மாலினி சொல்லி தான் இப்பிரிவினை வேலைய செய்யற... எங்கள துரத்திட்டு, அவ எத்தனை நாள் நல்லா வாழ்ந்திடுவா...' என்று சபித்தனர்.

அத்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கச் சொன்னார்.

'அண்ணன் தயவு இல்லன்னாலும், அண்ணன் மகன் தயவுல, கவுரவமா வாழ்ந்துட்டு போகலாம்ன்னு இருந்தேனே... இந்த நாகப்பன் அதுல மண்ணைப் போட்டானே...' என்று புலம்பியபடியே மூட்டை முடிச்சுகளை கட்டினாள் அத்தை.

இரு குழந்தைகளில் ஒன்றை, தொலைவில் ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்க, விண்ணப்ப படிவங்களோடு வந்த போது ராகவுக்கே மனமில்லை.

''யோசிக்காதே ராகவ்... உன் நிம்மதிய குறைக்கிறதுல இந்த ரெண்டு வாலுகளுக்கும், கணிசமான பங்கு இருக்கு. கொஞ்சம் பிரிச்சு வச்சா தான் இதுக கொட்டம் அடங்கும்,'' என்று வற்புறுத்தி கையெழுத்தும், காசும் வாங்கிப் போய் சேர்த்தார்.

அவர் ஒவ்வொருவராக அகற்ற அகற்ற, வீட்டில் சந்தடி படிப்படியாக குறைந்தது.

அவன் எதிர்பார்த்த அமைதி கிடைத்தது.

''ரொம்ப நன்றி மாமா... என்னை உங்களால மட்டும் தான் புரிஞ்சுக்க முடியுது. அவுங்கள வெளியில அனுப்ப, எனக்கும் கஷ்டமாகத் தான் இருந்துச்சு. ஆனா, நீங்க சொன்ன மாதிரி, இது அறுவை சிகிச்சை தான். வலி இருக்கு; ஆனாலும், நிரந்தர தீர்வுக்காக இதை நான் சகிச்சுக்கத் தான் வேணும்,'' என்றான்.

ராகவ் எதிர்பார்த்தது போல் சந்தடி இல்லாத காலைப்பொழுது, கலாட்டா இல்லாத பகல் பொழுது, பிரச்னைகள் இல்லாத இரவு என, வீடு எப்போதும் அமைதியுடன் இருந்தது.

வீட்டு உறுப்பினர்கள் குறைந்ததால், வீட்டுக்கு வரும் உறவுகளும் குறைந்தனர். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருந்தாள் மாலினி. அழைத்தால் வருவாள், சொன்னதை செய்வாள். குழந்தைக்கு கலாட்டா செய்ய துணை இல்லாததால், அதுவும், 'தேமே'ன்னு அமைதியாக இருந்தது. அவனுக்கான தனிமை தாராளமாக கிடைத்தது. அவனும் கவிதை எழுதினான்; எல்லாம் சில தினங்கள் மட்டும் தான்.

மீண்டும் அவன் மனதில் குறை! என்னவாக இருக்கும் என்று யோசித்தான். 'ஊரில் விட்ட பெற்றோரை மாதம் ஒரு முறை பார்ப்பது, இல்லத்தில் விட்ட அத்தையையும் அவ்வப்போது பார்த்து வருவது, ஹாஸ்டலில் இருக்கும் குழந்தையை விடுமுறையில் அழைத்து வருவது என, எல்லாம் திட்டமிட்டு, அதற்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டது. நாளும், கிழமையும் வந்தால், எல்லாம் ஒன்று சேர்வது, பின் கலைந்து அவரவரிடத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருந்து கொள்வது என்ற ஏற்பாடும் சரியாகத் தானே இருக்கிறது... அப்பறம் என்ன... வாயில் போட்ட உணவில் கல் இருந்து நிரடுவது போல, ஒரே இம்சையாக இருக்கு...' என்று நினைத்தான் ராகவ்.

என்னவென்று பிடிபடாமல் வளைய வந்தவனுக்கு, அது என்னவென்று பிடிபட்ட போது, ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தொட்ட அதிர்ச்சி!

மறுநாளே நாகப்பனிடம் வந்து, ''மாமா... நான் தப்பு கணக்கு போட்டுட்டேன்,'' என்று தலைகுனிந்தான்.

'என்ன...' என்பது போல பார்த்தார்.

''இப்ப இருக்கிற தனிமையும், அமைதியும் எனக்கு சந்தோஷத்துக்கு பதிலா, சங்கடத்தை தான் கொடுக்குது. எதையெல்லாம் சங்கடம்ன்னு நினைச்சேனோ, அதுல தான் சந்தோஷம் இருக்குதுன்னு இப்பத்தான் புரியுது. அம்மாவும், அப்பாவும், 'காபி குடிச்சியா, சாப்பிட்டியா, டல்லாயிருக்கியே உடம்புக்கு என்ன...' என, தினமும் என்னை விசாரிச்சுக்கிட்டே இருப்பாங்க.

''அத்தையோ, குடும்பத்துக்கு தேவையானதை பத்தி ஓயாம புலம்பும். குழந்தைகளை பிரிச்சதும் சரியில்ல மாமா... மாலினி தனிமரம் போல சோகம் காட்டுறா; இந்த அமைதி, எனக்கு நிம்மதிய தர்றதுக்கு பதில் என்னை மிரட்டும் அமைதியாகவே இருக்கு. ஓரோர் சமயம் சாரம் இல்லாத சக்கை போலவும், உயிர்த்துடிப்பு இல்லாத சவம் போல இருக்கு; எனக்கு கிடைத்த தனிமை. மன நிறைவை ஏற்படுத்தாத அமைதி எனக்கு வேணாம்,'' என்று படபடத்தான்.

''என்னதான்டா சொல்ல வர்றே?'' என்றார் நாகப்பன்.

''வெளியில் அனுப்பிய எல்லாரையும் மீண்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்ருங்க,'' என்றான் ராகவ்.

''இதுக்காடா இவ்வளவு மெனக்கெட்டது?'' என்றார்.

''தப்பு என்னோடது தான்... 'காடுன்னா சருகுகளோடு; வீடுன்னா சத்தங்களோடு தான்'ன்னு புரிஞ்சுக்கிட்டேன். அமைதியாயிருக்க வீடு ஒண்ணும் அரசாங்க மியூசியம் இல்ல. சண்டை, சச்சரவுகளுக்கு இடையில் கிடைத்த துளி அமைதி கொடுத்த நிம்மதி, இப்போது இந்த தாராளமான அமைதியில கிடைக்கல மாமா. அவங்களில்லாத தனிமையில, என்னால ஒண்ணும் செய்ய முடியல,'' என்றான்.

''எது உண்மையான அமைதின்னு இப்போதாவது புரிஞ்சுதே,'' என்றபடி எல்லாரையும் பழையபடி ஒன்று சேர்க்க எழுந்தார் நாகப்பன்.

படுதலம் சுகுமாரன்






      Dinamalar
      Follow us