sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/பணி ஓய்வு!

பணி ஓய்வு!

பணி ஓய்வு!


PUBLISHED ON : அக் 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நான் பல்கலை பணியிலிருந்து ஓய்வுபெற, இன்னும், 100 நாட்களே உள்ளன...' என்கிற 'கவுன்ட் டவுனு'டன், என் பணி ஓய்வு நாளுக்காக காத்திருந்தேன்.

என், 35 ஆண்டு பல்கலைக் கழக பணி பல திடுக்கிடும் சம்பவங்கள் அடங்கியது.

'அமுதசுரபி' இதழில், நான் எழுதிய, 'முத்தமாள் ஓய்வு பெறுகிறாள்' சிறுகதைக்காக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டேன். குங்குமம் இதழில் எழுதிய, 'பச்சை இலை பழுத்த இலை' சிறுகதைக்காக, 47 நாட்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டேன். தினமலர் - வாரமலர் இதழில் எழுதிய, 'நசுக்கு' என்கிற சிறுகதைக்காக, 90 நாட்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டேன்.

எத்தனையோ முறை பல்கலை பணியை விட்டுவிட, நான் துடித்திருக்கிறேன். வாரமலர் இதழ், அந்துமணியின் அறிவுரையில் பணி தொடர்ந்து, சில நாட்களில் ஓய்வுபெறப் போகிறேன்.

பணி ஓய்வு பெறப் போவதில் எனக்கு சிறு துளி வருத்தமும் இல்லை. முதல் பந்தி சாப்பிட்டு முடித்தவன், இரண்டாம் பந்தி நபருக்கு வழி விடுவது தானே நியாயம்... ரயில் பயணத்தில், இறங்க வேண்டிய இடம் வந்தால், புதியவர் அமர வழிவிட்டு இறங்குவதுதானே சிறப்பு!

பணி ஓய்வு பற்றி, பல்கலை நண்பர்கள் பலவிதமாய் பயமுறுத்த ஆரம்பித்தனர்.

'கடந்த, ஐந்து ஆண்டுகளாக, ஓய்வூதியர்களுக்கான பணப் பயனை பல்கலை கொடுக்கவே இல்லை. கடைசி மாத சம்பளத்தை கூட சில மாதங்கள் கழித்துதான் தருகின்றனர். ஓய்வூதியம், 70 சதவீதம் தான். அதுவும் கிடைக்க, ஆறு மாதம் ஆகிவிடுகிறது. ஓய்வு பெறும் அன்று, ஒரு பொன்னாடை, காபி, கட்லெட், இரண்டு பிஸ்கெட் தான் மிச்சம். எந்த பணப் பலனையும் பார்க்காமல், பல ஓய்வூதியர்கள் இறந்தும் போயிருக்கின்றனர். பல ஓய்வூதியர்கள், தங்கள் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை நிரூபித்து காட்டாமல் இருக்கின்றனர்.

'சில ஓய்வூதியர்கள், பல்கலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, காலி செய்யாமல் இருக்கின்றனர். ஓய்வூதியர்களை, கனிவுடனும், பரிவுடனும் கவனிக்க தயங்குகிறது, நிர்வாகம்...' என்றனர்.

சமீபத்தில், இந்தியன் வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு, ஆவின் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியை சந்தித்தேன்.

''சார்... நான் பணியில் இருக்கும்போது, 24 மணி நேரமும், 'பிசி' தான். ஒருநாளைக்கு, 200க்கும் மேற்பட்ட, 'இன்கமிங் கால்கள், மீட்டிங், இன்ஸ்பெக் ஷன், விசிட்' போய்க் கொண்டே இருப்பேன். ஓய்வுபெற்ற பின், ஒரு, 'இன்கமிங் கால்' கூட கிடையாது. யாருக்கும் தேவைப்படாதவனாகி விட்டேன்.

''என்னிடம் பணிபுரிந்தவர்கள், எங்காவது என்னை பார்க்க நேர்ந்தால், பார்க்காதது போல் போய் விடுகின்றனர். பணி ஓய்வுபெற்ற பலர், மன நோயாளி ஆகி விடுகின்றனர். அவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை தேவைப்படுகிறது,'' என்றார்.

டார்ஜிலிங், 'டூர்' முடித்து, நானும், என் மனைவி வகிதாவும், ரயிலில், சிதம்பரம் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுடன் பயணம் செய்த ஒருவர், 'சார்... உங்களை பார்த்தா, சீக்கிரம் பணி ஓய்வுபெறப் போகிறவர் மாதிரி தெரிகிறீர். உங்களுக்கு எந்த பணம் கிடைத்தாலும், வங்கியில், 'பிக்ஸட் டிபாசிட்' செய்யுங்கள். பணத்தையும், சொத்தையும், மகன், மகளுக்கு முழுவதும் பிரித்துக் கொடுத்து விட்டு, ரோட்டில் பிச்சைக்காரர்களாக நிற்காதீர்...' என்றார்.

புலம்பல்களையும், பயமுறுத்தல்களையும், அறிவுரைகளையும், எவ்வித பாதிப்பும் இல்லாமல், உள் வாங்கிக் கொண்டேன்.

நாட்கள் கரைய ஆரம்பித்தன.

பெங்களூருவில், முதுகலை பல் மருத்துவம் படிக்கும் என் மகன், நிலாமகன்.

'அப்பா... 'ரிட்டையர்' ஆன உடனே, சும்மா இருக்க வேண்டாம். ஏதாவது ஒரு பத்திரிகை பணி அல்லது ஏதாவது ஒரு மருத்துவமனையில் நிர்வாக பணிக்கோ போகச் சொல்...' என்றான், அம்மாவிடம்.

அவன் படிப்பை முடித்து, வேலைக்கு போய் திருமணம் செய்து கொள்ளும் வரை, நான் சம்பாதிக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறான். பதில் சொல்லாமல் சிரித்தேன்.

மெக்சிகோவில் இருக்கும் என் மகள், அப்பா ஓய்வு பெற்றால், 30 - 40 லட்சம் கிடைக்கும், தம்பி படிப்புக்காக, அவர் வாங்கிய, 6 லட்சம் கடன், பேத்திக்கு போட வேண்டிய நகை, தவிர, கூடுதலாய் என்ன தருவார் என, கணக்கு போட ஆரம்பித்தாள்.

பணி ஓய்வுபெற, 45 நாட்கள் பாக்கி இருக்கும்போது, பல்கலை குடியிருப்பை காலி செய்தேன். பல்கலை மருத்துவமனையிலிருந்து, 1 கி.மீ., துாரத்தில், மகள் கட்டியிருக்கும் வீட்டுக்கு இடம் மாற முடிவு செய்தேன். மகள் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த, ருவாண்டா மாணவியை பகீரத பிரயத்தனம் செய்து, காலி செய்ய வைத்தேன். வீட்டின் உள்ளும், புறமும், 'பெயின்ட்' செய்தேன். சிறு சிறு பூச்சு வேலைகள் முடித்தேன். வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி, வாழை கன்றுகளும், தென்னம் பிள்ளை கன்றுகளையும் நட்டேன். மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க, காய்கறி செடிகளுக்கான விதைகளை, தொட்டியில் துாவினேன்.

மூன்று மாதங்களுக்கான மளிகை சாமான்களை வாங்கிப் போட்டேன். சென்னைக்கும், பூண்டி புஷ்பம் கல்லுாரிக்கும் அலைந்து, என் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபித்துக் காட்டினேன். பல்கலையின், 40க்கும் மேற்பட்ட இடங்களில், 'நில் அரியர்ஸ்' வாங்கி சமர்ப்பித்தேன். ஓய்வூதியத்துக்காக, நானும், என் மனைவியும் சேர்ந்து, நான் தனியாக, என் மனைவி தனியாக புகைப்படங்கள் எடுத்தோம். ஓய்வூதிய விண்ணப்பத்தில் புகைப்படங்களை ஒட்டி, பூர்த்தி செய்து, அதற்கான பிரிவில் ஒப்படைத்தேன்.

மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறு விடுப்பு எக்கச்சக்கமாய் இருந்தாலும், எவ்வித விடுப்பும் போடாமல், பணியை முழுமையாக செய்து மகிழ்ந்தேன்.

நான் ஓய்வு பெறப் போவது, பெரும்பாலான ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான விஷயம். பட்டாசு வெடித்து கொண்டாடாதது தான் குறை. கண்டிப்பான தந்தையை, கறாரான ஆசிரியரை, மற்றும் பத்தியம் கூறும் மருத்துவமனை யாருக்கு பிடிக்கும்?

'மஸ்டர்ரோல்' அலுவலக பொருட்களை கணக்கெடுத்து, சரியான முறையில் ஒப்படைத்தேன். எனக்கு பின் வருபவருக்கு வசதியாக, ஒவ்வொரு ஊழியரின் பணிகளை வரையறுத்து, அவர்களிடம் கையொப்பம் பெற்று, 'பைல்' செய்து வைத்தேன்.

புதுச்சேரி, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று, நானும், என் மனைவியும், கண் பரிசோதனை செய்து, புது மூக்கு கண்ணாடிகளை வாங்கினோம்.

பழைய, டி.வி.எஸ்.50ஐ விற்று, வங்கி கடனில், 'ஸ்கூட்டி ஜெஸ்ட்' வாங்கினேன். பழைய, 'டிவி'யை, டிவிடி பார்க்க வைத்துக் கொண்டு, புதிய, எல்.ஜி., - எல்.ஈ.டி., 'டிவி' வாங்கி சுவரில் பொருத்தினோம்.

கணினியை பழுது பார்த்தோம். குளிர்சாதன பெட்டியை, 'சர்வீஸ்' செய்தோம். மகள் வீட்டில் எங்குமே ஆணி அடிக்காமல், 'செல்ப்'களில் கேடயங்களை அடுக்கினோம்.

'செப்டிக் டேங்'கை, சுத்தம் செய்தோம். 'ஓவர்ஹெட்' தண்ணீர், 'டேங்'கை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தினோம்.

சக ஊழியர், சிவராஜபதியுடன், பரங்கிப்பேட்டை அன்னக்கோவிலில், மீன் விற்பவர்களை அறிமுகம் செய்து வைக்க சொன்னோம். எங்காவது நான்கைந்து நாள் சுற்றுலா சென்றால், எங்கள் வளர்ப்பு நாய் மூசியை கவனித்துக் கொள்ள தகுந்த ஏற்பாடு செய்தோம்.

பணி ஓய்வு விழாவில் அணிய, எனக்கு, என் மனைவிக்கு, மகனுக்கு புத்தாடைகள் வாங்கினோம். வகிதாவின் அக்காள், அண்ணன் மகன் குடும்பங்களை மட்டும், விழாவுக்கு அழைத்தோம்.

பணி ஓய்வு நாள் வந்தது —

பொறியியல் புலத்தின் இரு இடங்களில் இரு விழாக்களும், துணைவேந்தர் அலுவலகத்தில் ஒரு விழாவும், பல்கலை விருந்தினர் மாளிகையில் ஒரு விழாவும் நடந்தன.

என், 35 ஆண்டு பணி, அனைவராலும் பாராட்டைப் பெற்றது. ஏற்புரைகள் வழங்கினேன்.

பணி ஓய்வுபெற்ற இரு நாட்களுக்கு பின், வகிதாவும், நானும் கலந்தாலோசனையில் ஈடுபட்டோம்.

''மகனின் கல்விக் கடன் மூன்றாவது தவணை, பி.எப்., - எஸ்.பி.பி.எப்., பணம் வைத்து மகளின் கடன் அடைப்போம். பணி ஓய்வு பாராட்டு விழாவில் வழங்கப்பட்ட, 7 கிராம் தங்க நாணயத்துடன், 10 கிராம் சேர்த்து, பேத்திக்கு நகை வாங்குவோம். ஓய்வூதியம், சென்னை வீட்டு வாடகை, பத்திரிகை சன்மானம் வைத்து குடும்பத்தை எளிமையாக நடத்துவோம். உங்களுக்கு வேறு பணி கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டாலும் சந்தோஷம்,'' என்றாள், வகிதா.

''அடுத்த, 10 ஆண்டுகளுக்கான திட்ட வரைவை பார்ப்போம், வகிதா.''

''சரி!''

''முதலாவது, திருக்குர் ஆன் நீதி கதைகள் மீதி, 550ஐ எழுதி முடிப்பது. 2.இன்னும், 100 விஞ்ஞான சிறுகதைகளை எழுதி முடிப்பது. 3. பத்து சிறுவர் தொடர்கதைகள் எழுதுவது. 4.நாவல்கள், 50 எழுதுவது. 5.ஆண்டிற்கு, இரண்டு இடங்களுக்கு சுற்றுலா போவது. 6.மாதத்திற்கு ஒருமுறை மீன் வாரம். 7.மகனின் படிப்பை முடித்து, வேலை வாங்கி கொடுத்து, திருமணம் செய்து வைப்பது. 8.மகளின் ஆவலாதிகளை எல்லாம் பூர்த்தி செய்து, நல்ல தந்தை - தாய் என பெயர் வாங்குவது. 9.தினம், 100 பக்கம் வாசிப்பது, கதைகளை கணினியில் டைப் அடிக்க கற்றுக்கொள்வது. அரசியல் கட்டுரைகள் எழுதுவது, 'டிவி' விவாத மேடைகளில் கலந்து கொள்வது. 10.ஓய்வூதிய பணப்பயன் எவ்வளவு தாமதமாய் கிடைத்தாலும், அதில், 10 லட்சம் ரூபாயை மனைவி பெயரில், 'பிக்சட் டிபாசிட்' செய்வது!''

''குட்... நீங்கள், பள்ளிவாசலுக்கு தொழப் போவதையும், மேற்சொன்ன திட்ட வரைவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்!''

''பத்து ஆண்டுகள் நான் உயிருடன் இருந்து, மேற்சொன்னவற்றை நிறைவேற்றி முடித்தால், அதற்கடுத்த ஐந்து ஆண்டு, திட்ட வரைவை அப்போது வடிவமைப்போம்.''

''எந்த நம்பிக்கையில் இந்த திட்ட வரைவுகள்?''

''இறைவன் மீதுள்ள நம்பிக்கையாலும், டாக்டர் அர்த்தநாரியின் மருந்துகள் மீதான நம்பிக்கையாலும், இந்த திட்ட வரைவுகளை மேற்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, லட்சோப லட்ச வாசகர்களின் நல்வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் வீண் போகாது குட்டிம்மா.''

சூரியனித்தாள் வகிதா. 'கடந்த, 35 ஆண்டுகளில், எதை சம்பாதித்தோமோ இல்லையோ, டன் கணக்கில் வாசகர்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறோம். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...' என, இரு கைகளையும் வானத்துக்கு உயர்த்தி, ஆலாபித்தாள்.

கைபேசி சிணுங்கியது. காதில் இணைத்தேன். எதிர் முனையில் மருத்துவ புல முதல்வர், 'உங்க பிரிவுபசார பேச்சை கேட்டேன். தன்னம்பிக்கையூட்டும், வாழ்வின் வெளிச்ச பக்கத்தை மட்டும் காட்டும் பேச்சு. ஓய்வுபெறும் ஊழியர்களின் மன பதற்றத்தை, அழுத்தத்தை நீக்கும் வகையில், அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடியுமா... நீங்கள் எதிர்பார்க்கும் ஊதியத்தை தருகிறோம்... உங்களின் எழுத்துப்பணி பாதிக்காமல் இதை நீங்கள் செய்யலாம்...'

பேரானந்தமாய் ஆமோதித்தேன்.

ஆர்னிகா நாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us