PUBLISHED ON : ஏப் 11, 2021

எம்.ஜி.ஆருக்கு சொன்ன ஜோதிடம்!
பன்மொழி வித்தகர், அசத்தலான பாடகி, தெலுங்கின் முதல் பெண் இயக்குனர் மற்றும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து, சிறந்த நடிகை என்று பிரபலமான காலகட்டத்தில், எம்.ஜி.ஆர்., ஜோடியாக, முதல் முறையாக, மலைக்கள்ளன் படத்தில் நடிக்க வந்தார்.
ஒரு பேட்டியில் பானுமதி, கூறியது...
'எம்.ஜி.ஆரின் முகத்தை முதன்முறை பார்த்தபோது, ஒரு காந்த சக்தி இருப்பதை கவனித்தேன். அதிலிருந்த ராஜ களை, நடை, உடை, பாவனையில் தெரிந்த ராஜ கம்பீரம் கண்டு வியந்தேன்.
'மலைக்கள்ளன் படப்பிடிப்பில் ஒருநாள், என்னுடன் பேசிக் கொண்டிருந்தார், எம்.ஜி.ஆர்., அப்போது, என் மாமியாரும் அருகில் இருந்தார்.
'எம்.ஜி.ஆர்., என்றால் என்ன தெரியுமா...' என்று கேட்டு விட்டு, 'மினிமம் கேரண்டி ராமச்சந்திரன்; இப்ப, மேக்சிமம் கேரண்டி ராமச்சந்திரன் ஆகி விட்டார்...' என்றேன், என் மாமியாரிடம்.
'எனக்குத் தெரிந்த வரையில், அகம்பாவம் இல்லாதவர், எல்லாரிடமும் அன்பாக பழகும் பண்புள்ளவர், எம்.ஜி.ஆர்.,
'ஒருநாள், படப்பிடிப்பின் இடைவேளையில், தலையில் கிரீடம் வைத்து, மன்னன் வேடத்தில் உட்கார்ந்திருந்தவரை கவனித்துக் கொண்டிருந்தேன். 'போன பிறவியில் இவர் ஒரு ராஜாவாக பிறந்து இருப்பார்...' என்று, மனதில் தோன்றியது.
'எனக்கு ஜாதகம், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் தெரியும்.
எம்.ஜி.ஆர்., சரித்திரம், உலக வரலாற்றில் இடம்பெறும். அப்படிப்பட்ட அபூர்வ ஜாதகம் அவருடையது. அவர் ஒரு அபூர்வப் பிறவி. 'மிஸ்டர் ராமச்சந்திரன், உங்கள் கையை காட்டுங்கள். எனக்கு, கைரேகை ஜோதிடம் தெரியும்...' என்றேன்.
'கூச்சத்துடன், 'வேண்டாம் அம்மா... அதில் எனக்கு நம்பிக்கையில்லை...' என்றார். அருகில் இருந்த, இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், 'கையை காட்டுங்கண்ணே...' என்று வற்புறுத்திய பிறகு, கையை காட்டினார்.
'அவரது கைரேகைகளை பார்த்து விட்டு, 'மிஸ்டர் ராமச்சந்திரன், நீங்கள், எதிர்காலத்தில் இன்னும் கூடுதலாக, பேரும், புகழும் பெறப் போகிறீர்கள். இந்தியாவே கொண்டாடும் உன்னத இடத்தை அடைவீர்கள். சினிமா துறையில் அல்ல...' என்று சொன்னதும், கை கூப்பி, 'நன்றியம்மா...' என்றார், புன்சிரிப்புடன்.
'அவர், முதல்வரான போது, திரையுலகம் சார்பாக, பாராட்டு விழா நடந்தது. மேடையில் பேசும்போது, 'இந்த நிலைக்கு வருவேன் என்று, நானே எதிர்பார்க்காத காலத்திலேயே, என் கைரேகையை பார்த்து, பானுமதி அம்மா கணித்துச் சொன்ன ஆரூடம் பலித்து விட்டது...' என்று, முதல்வர் எம்.ஜி.ஆர்., குறிப்பிட்டு பேசினார்...'
- இப்படி கூறியுள்ளார், பானுமதி.
எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, சில வி.ஐ.பி.,க்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
அப்போது, சிவகுமார், தன் திருமணத்திற்காக இரண்டு இடங்களுக்கு சென்று பெண் பார்த்தும், சம்பந்தம் அமையவில்லை. சிவகுமாரின் கைரேகை பார்த்து, 'சீக்கிரமே உங்களுக்கு வாழ்க்கைத் துணைவி வரப்போகிறார். இந்த தேதிக்குள் நடக்கத்தான் போகிறது...' என்று குறிப்பிட்டு சொன்னார், பானுமதி.
பானுமதி சொன்ன மாதிரியே நடந்தது.
நடிகை பத்மினி, தனக்கு பானுமதி ஆரூடம் சொன்ன அனுபவத்தை கூறுகையில்...
'நான் மிகவும் மதிக்கும் நட்சத்திரம், பானுமதியம்மா. அவர் தயாரித்து, நடித்த, லைலா மஜ்னு படத்தில், நடன காட்சிகளில், அப்போது, 13 வயதான நானும், லலிதாவும் நடனமாடினோம். எங்களை, அவங்க வீட்டிலேயே தங்க வைத்து, 'ரிகர்சல்' பண்ணி, நடிக்க கற்றுக் கொடுத்தார்.
'அவர் நடனமும் அருமையாக ஆடுவார், அழகாக பாடுவார். 'கிளாசிகல், வெஸ்டர்ன் மியூசிக்' அவருக்கு கை வந்த கலை. அந்த படப்பிடிப்பு சமயத்தில், என் கைரேகையை பார்த்து, 'நீ பெரிய நடிகை ஆகப் போகிறாய்...' என்று சொல்லி ஆசிர்வதித்தார், பானுமதி.
'அதற்கு, 'நீ பெரிய, 'டான்சர்' ஆவேன்னு சொன்னால் நம்பலாம். 'டான்சராய்' இருக்கிற நீ, எப்படி பெரிய நடிகையாக வரமுடியும்...' என்று கேட்டாள், லலிதா.
'ஆனால், பானுமதி அம்மா சொன்னது தான் நடந்தது...' என்றார், பத்மினி.
சரி, பானுமதிக்கு கைரேகை, சாஸ்திரம், ஜோதிடம் எப்படி தெரியும். அவரிடம் பழகியவர்கள் என்ன சொல்கின்றனர்...
அடுத்த வாரம்...
— தொடரும்
சபீதா ஜோசப்

