
புரட்டாசி மாதத்தில், மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி பிறந்ததாக ஐதீகம். மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் வேளையில், அவள் தோன்றுகிறாள்.
மூலம் என்ற சொல்லுக்கு, அடிப்படை என்று பொருள். வாழ்க்கைக்கு அடிப்படை, கல்வி. அதனால் தான் சரஸ்வதி பிறந்தநாளில் பூஜையைத் துவங்கி, மூன்று நாட்கள் பூஜை செய்து, நான்காவது நாளாக வரும் விஜயதசமி அன்று கல்வியை துவங்க வேண்டும் என்கின்றனர்.
சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்!
தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபாடு செய்வர். அதேபோன்று, சரஸ்வதிக்கு, கொண்டைக்கடலை நைவேத்யம் செய்வர்.
ஏனெனில், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே, ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச் சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத் துாய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர்.
உயிர் காக்கும் சத்துக்களை கொண்டது, கொண்டைக் கடலை. ஒருவரது ஜாதகத்தில், குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து, தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.
மனித வாழ்வின் உயிர் நாடி கல்வி. அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்கிறோம்.
ஜப்பானில் கலைமகள் கோவில்!
ஜப்பானியர்கள் கொண்டாடும் ஏழு தெய்வங்களில், 'பெண்டன்' என்பது மட்டும், பெண் தெய்வமாகும். இந்த பெண் தெய்வத்தின் கையில், நம்மூர் கலைமகள் போல் வீணையும், புத்தகமும் உள்ளன. இவர்கள் கொலு விழாவை, நம்மைப் போலவே நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ம் தேதி, இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த தேவிக்கு பெரும்பாலும் கடற்கரை ஓரமாகவே கோவில்கள் அமைந்துள்ளன.
கலைமகளின் மறு பெயர்கள்!
நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞானவடிவு, பனுவலாட்டி, பிராமி, பூரவாகினி, அயன்மனைவி, வெண்டாமரையாள், சாவித்திரி மற்றும் வாக்குதேவி.

