தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மூப்புத் துணை!

மூப்புத் துணை!

மூப்புத் துணை!


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து நடைக்கும், உள்ளுக்கும் இடையில் நடந்து தேய்ந்து விட்டார், நாராயணன். கண்கள் தன்னை மீறி பளபளத்துக் கொண்டே இருந்தது.

அவருடைய தவிப்பைப் பார்த்து, முகவாயை தோளில் மோதி, அலட்சியம் காட்டி நின்றாள், மருமகள் சாந்தி. இதுபோன்ற போராட்டங்களை உணர்ந்து கொள்ளும் வயசில்லை அவளுக்கு அல்லது இத்தனை நுட்பமான மனசில்லை என்று கூட கொள்ளலாம்.

குளித்து, தலை துவட்டியபடி வந்த சிவா, அப்பாவை அடிக்கண்ணால் பார்த்தான். அவருடைய பதற்றத்தை பார்க்க, பாவமாகத் தான் இருந்தது. ஆனால், அத்தனையும் அவர் இழுத்துப் போட்டுக் கொண்டு சுற்றுவது போல் தோன்றியது.

துவக்கமும், முடிவும் இல்லாத எதுவுமே கிடையாது. இத்தனை வயசில் அவர், அறியாத செய்தி இல்லை தான். அப்படியிருக்க, எதற்காக இத்தனை குமைகிறார் என்று வருத்தமாக இருந்தது. இதற்கு முன்னும் இதுபோல் பல விஷயங்களை கண்டவர், இந்த முறை ஏன் இத்தனை விசனப்படுகிறார் என்றும் புரிபடவில்லை.

உடை மாற்றி, சாப்பிட அமர்ந்தான், சிவா. இன்னும் அப்பாவின் தவிப்பு முழுசாய் மட்டுப்படவில்லை. கைகளை பிசைந்தபடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தார்.

''அப்பா, சாப்பிட வாங்க. மணி, 8:00க்கு மேல ஆகுது,'' என்றான்.

''சிவா, நான் ஒருநடை போய் பார்த்துட்டு வந்துடறனே... வந்து சாப்பிட்டா ஆகாதா... எனக்கு இங்கே தங்கவே மனசு ஒப்பலை,'' கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

சாந்தி, கணவனை முறைக்க,

அவனுடைய கண்கள், 'பொறு' என்று சொல்லி அடக்கியது.

''போயிட்டு வந்து எப்போ சாப்பிடறது. போகலாம்பா, இப்போ நீங்க போனதும், அவர் எழுந்திருச்சு உட்கார்ந்துக்க போறாரா... இன்னும் எல்லாத்துக்கும் நேரம் இருக்கு, பார்த்துக்கலாம். முதல்ல, இட்லியை பிய்ச்சு போட்டுட்டு, மாத்திரையைப் போடுங்க. அங்கே போய் மயக்கம் போட்டா, என்ன பண்ணுவீங்க... உங்களுக்கும் கஷ்டம், அவங்களுக்கும் கஷ்டம்,'' என, கனிவோடு கண்டிப்பாய் சொன்னான், சிவா.

அவரால் அதற்கு மேல் தர்க்கம் செய்ய இயலவில்லை. மகனுடைய வார்த்தைகளுக்கு தலையை ஆட்டினார். ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருந்தவர் என்று, இப்போது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

தந்தைக்கு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த கணவனை நினைத்து, எரிச்சல் மண்டியது சாந்திக்கு. அடுக்களையில் பாத்திரங்கள் அபஸ்வரங்களை இசைக்கத் துவங்க, திரும்பிப் பார்த்து, பார்வையால் அடக்கினான்.

மழை நின்றும், துாவானம் நிற்காதது போல், முணுமுணுப்பு கேட்டுக் கொண்டே இருந்தது.

மூன்று இட்லிகளை தட்டில் எடுத்து வைத்தார். கையில் லேசான நடுக்கம் இருந்தது.

''நேத்து சாயங்காலம் சேர்ந்து தான், 'வாக்கிங்' போனோம், சிவா... ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு. வங்கியில மேனேஜரா இருந்தவரு. 'பையன்கள் அனுசரணை இல்லை'ன்னு சொல்லி வருத்தப்பட்டாரு. மனசுக்குள்ள நெருடலோடவே இருந்தாரு,'' இட்லியை பிசைந்தபடி இருந்தார்.

அப்பாவின் முதுகை ஆறுதலாய் தேய்த்து விட்டான், சிவா.

அந்த ஆறுதல், அவரை புரட்டிப் போட, மகனின் இடது கையைப் பற்றி குலுங்கி அழுதார். அப்பாவை வயிற்றோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.

''அழாதீங்கப்பா... எல்லாம் சரியாகிடும். இயற்கை தானே இதெல்லாம்... நமக்கு இதெல்லாம் புதுசா... எத்தனை பேர் போயிட்டாங்க நம்மை விட்டு... ஏன், அம்மா போனப்ப கூட

இத்தனை கலங்கிப் போகலையே நீங்க... இப்ப மட்டும் ஏன் இப்படி?'' அவர் முகத்தை நிமிர்த்தி, ஆறுதல் கூறினான்.

அத்தனையையும் அடுக்களையில்

இருந்து பார்த்த

சாந்திக்கு பற்றிக் கொண்டு வந்தது.

'ஓவர் ஆக்டிங்...' கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தாள்.

சிவாவிற்கு துல்லியமாக கேட்டது. அவன் கண்களை அழுந்த மூடித் திறந்து, தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். அப்பாவை வற்புறுத்தி, இரண்டு இட்லி சாப்பிட வைத்தான். தண்ணீர் குடிக்க வைத்து, தினசரி அவர் சாப்பிடும் மாத்திரைகளை போட்டு, கொஞ்ச நேரம் உட்கார வைத்தான்.

''ஆபிஸ் கிளம்ப வேண்டாமா,

நேரம் ஓடிட்டே இருக்கு.

இன்னும் எத்தனை மணிநேரத்துக்கு

இப்படி அப்பாவை கொஞ்சிட்டு நிக்கிறது,'' கேட்டாள், சாந்தி.

இதெல்லாம் காதில் விழுந்தும், காட்டிக் கொள்ளும் மனோநிலையில் அப்பா இல்லை. அவர் எதையோ பறிகொடுத்தது போல் பரிதவித்துக் கொண்டிருந்தார்.

''உனக்கு, மூப்புத்துணைன்னா என்னன்னு தெரியுமா சிவா... இப்போ, எதுவுமே பிரதானமா இருக்காத பருவம். சாதிக்கவும் ஆசையில்ல; அதுக்கு தேவையும் இல்லை. உடம்பும், உணர்வும் அடங்கிப் போன காலம். நம்மாள யாருக்குமே உபயோகம் இல்லைன்னு மனசும், உடம்பும் சலனப்பட்டு சோர்ந்து போற, காலக்கட்டம் இது.

''வாழ்க்கை, 'பேட்ச்' மாதிரி, தன் பொறுப்புகளை பிள்ளைங்ககிட்ட கைமாத்தி விட்டுட்டு, அக்கடான்னு உட்கார்ந்து இருக்கும் போது, மிச்சம் இருக்கிற பேச்சுத் துணைகளை இழக்க இழக்க, மனசுக்குள்ள இனம் தெரியாத வலி வரும் பாரு, அதைச் சொல்ல முடியாது.

''இது, என்னை மாதிரி வயசான எல்லாருக்குமே இருக்கும், சிவா. நெருக்கமானவங்க எல்லாம் நம்மை விட்டுப் போகப் போக, துாரத்தில் இருக்கிறவங்களை எல்லாம் நெருக்கமா நினைச்சு, மனசு தவிக்க ஆரம்பிக்கும். இந்த புருஷோத்தமன் ஒண்ணும் எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை தான், ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும்...

''எப்போ சங்கரன் மாமா இறந்தாரோ, அப்போ இருந்து என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துக்க, இவர் தோழரா இருந்தாரு. இப்போ இவரும் போயிட்டதால மனசு இனம் தெரியாத தனிமையும், பயமாவும் இருக்கு,'' குழந்தைபோல் அப்பா சொல்ல, சிவாவின் கண்களில்

இன்னும் கனிவு சொட்டியது.

''இயற்கை தானேப்பா எல்லாம்... தாண்டி வர முடியாத எதையும் தந்து, தண்டிக்க மாட்டாருப்பா, கடவுள்... சங்கரன் மாமாவுக்கு பிறகு புருஷோத்தமன் சார் வந்த மாதிரி, இவருக்கும் ஏதாவது மாற்று இருக்கும்பா... ஓய்ஞ்சு போகாதீங்க... நான் கொண்டுபோய் விட்டுட்டுப் போறேன்; கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துடுங்க.

''எடுக்கற வரைக்கு எல்லாம் இருக்க வேண்டாம். வந்து வெந்நீர் போட்டுக் குளிங்க; மதியம் சாப்பிடுங்க; நிம்மதியா துாங்கி எழுந்தா, எல்லாம் சரியாகிடும். நீங்க, எனக்கு சின்ன வயசுல சொல்லி வளர்த்ததுதான்பா... எல்லாம் கடந்து போயிடும்... இதையும் சேர்த்து...'' கைகளை அழுந்தப் பற்றி சொன்ன மகனை, எழுந்து கட்டிக் கொண்டார். தோளில் முகம் பொதித்து சின்னக்குழந்தை போல் அழுதார்.

ஆறுதலாய் முதுகு நீவ, அவரின் விசும்பல் குறைந்தது. அவர் பாத்ரூமிற்குள் நகர, அதற்கே காத்திருந்தது போல் கணவனின் முன் வந்து நின்று முகத்தை நொடித்தாள், சாந்தி.

''ரொம்ப ஓவரா இருக்கு, அப்பாவும் - மகனும் போடற சீன். அந்த புருஷோத்தமன் யாரு, உங்கப்பாவோட, 'வாக்கிங்' போற, மூணாவது தெருவில இருக்கிற நண்பர். இவரை விட அஞ்சு வயசு பெரியவரு. இதுக்கு எதுக்கு இத்தனை அழுகையும் மாய்மாலமும்.

''இப்படி யாருக்கோ உட்கார்ந்து வீட்டில் அழுதுட்டு இருந்தா விளங்குமா... இதெல்லாம் ஊரில் இல்லாத அதிசயமா இருக்கு. சொந்தபந்தம் இறந்தப்போ கூட, இப்படி அழுத மாதிரி எனக்குத் தெரியல. என் அப்பாவெல்லாம் இப்படி இல்ல,'' என்றவளை புழுவைப் போல் பார்த்தான்.

''உன் அப்பாவெல்லாம் அப்படி இல்லை தான். அவர், உன்னை வளர்த்திருக்கிற லட்சணத்தை பார்க்கும்போது அது நல்லாவே தெரியுது. உனக்கு மனிதர்களை தெரிந்த அளவுக்கு, அவங்க உணர்வுகள் தெரியாது. ஒரு மனிதனின் முதுமைக்கு தண்டனையே, தனிமை தான்.

''நெருக்கமான ஒவ்வொருத்தரும் தங்களை விட்டுப் போகப் போக, துாரமா இருக்கிறவங்க எல்லாத்தையும் பக்கத்துல கொண்டு வந்து நிறுத்திக்கும் பாதுகாப்புத் தேடற, மனசு... அது உன்னால உணர முடியாமப் போகுதுன்னா, உன் வீட்டு பெரியவங்க யாருக்கும், அந்த நிலைமை வரல இன்னும்...

''அப்பாவை பக்கத்துல இருந்து பார்க்கிறேன். ஓய்விற்கு பிறகு அவருடைய வாழ்க்கை அத்தனை சந்தோஷமா துவங்குச்சு. நெருக்கமானவங்க ஒவ்வொருத்தரா உதிர உதிர, அவர் எத்தனை ஒடுங்கிப் போனார்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

''அவரைப் பார்க்கும் போது எனக்கு பயமா இருக்கு. என்னுடைய முதுமையைக் கடக்க, எனக்கான ஓடம் யார்ன்னு இப்பவே சஞ்சலப்படறேன். இப்போ ஓடற இந்த ஓட்டம் மட்டும் இல்லை, வாழ்க்கை; இதுக்கு பின்னாடி ஓய்வு வரும்ன்னு முதல்ல உணர்ந்துக்க. அப்புறம் யாரையும் எடுத்தெறிஞ்சு ஒருவார்த்தையும் பேச மாட்டே,'' என்றவனை சுரீரென பார்த்தாள். முகம் ஒன்றும் உணர்ந்ததாய் பறைசாற்றவில்லை. அலட்சியமும், ஆணவமும் கண்களில் தொக்கி

நின்றது.

''இப்போ, அடிக்கடி முகம் சுளிச்சிட்டுப் போறியே, பேசாத இந்த வார்த்தைகளோட மகத்துவம், உனக்கு இப்போ தெரியாது. உன் மவுனத்தை இரைக்க, மனிதர்கள் இல்லாதப்பத் தான் புரியும்; முதல்ல அதை புரிஞ்சுக்க. ஊறி ஊறி தனக்குள்ளே

வற்றிப் போகிற வார்த்தைகளை

அள்ளிப் போக, ஆள் இல்லாத தனிமை ஒண்ணு இருக்கு...

''முதுமை வரமாகிறதும், சாபமாகிறதும், கூட இருக்கிறவங்க தர்ற அனுசரணையில தான். நான் பாசத்துல செய்யிறேனோ, இல்லையோ பயத்திலே செய்றேன். உனக்கு அந்த பயமில்லாட்டி விட்டுடு. ஆனா, யாரையும் புண்படுத்தாதே. ஏன்னா, இந்த இலையுதிர் காலம் அவருக்கு மட்டுமில்ல, உனக்கும் வரும்; எனக்கும் வரும்,'' அழுத்தமாய் சொல்லிவிட்டு,

வெளியே சென்று அப்பாவிற்காக காத்திருந்தான்.

முதன் முறையாக அவளுடைய உணர்வு மரம் சிலிர்த்து அடங்கியது. தளர்ந்தபடி, துண்டோடு வெளியில் வந்த மாமனாரைப் பார்த்தாள். மனசை பிசைந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

எங்கேயோ பார்த்துக் கொண்டு, ''அங்கேயே உட்கார்ந்து கிடக்க வேண்டாம். காலா காலத்துல கிளம்பி வந்துடுங்க,'' என்றாள், சாந்தி.

மாற்றமோ, பயமோ ஏதோவொன்று அதற்கு பேர். ஆனாலும், அந்த நிமிஷம் அது தேவையாகத்தான் இருந்தது.

எஸ். பர்வின்பானு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us