தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாரிசு!

வாரிசு!

வாரிசு!


PUBLISHED ON : பிப் 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அப்பா... திருவல்லிக்கேணி வீட்டை வித்துட்டியாமே,'' என்று, மகாதேவன் கேட்க, போனை காதில் வைத்த நிலையிலேயே, சிறிது நேரம் மவுனமாக இருந்த சாம்பசிவம், பின், ''ஆமா...'' என்றார்.

''என்கிட்ட, ஒரு வார்த்தைகூட சொல்லலயே.''

''நான் பலமுறை சொல்ல வந்தேன்; உனக்குத் தான் கேட்க நேரம் இல்லாமப் போச்சு.''

''என்னப்பா சொல்ற... வீடு விக்கிறதுங்கிறது எத்தனை பெரிய விஷயம். பெத்த பிள்ளைங்களுக்குக் கூட சொல்லாம... ஏம்ப்பா இப்படி செய்த?''

''நீ இதே சென்னையில, அயனாவரத்துலதான இருக்கே... கடைசியா என்னை எப்போ வந்து பார்த்த? ஒன்பது பத்து மாசம் இருக்குமா... போன் செய்தாலும், ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேச மாட்டே... வீடு விக்கிறது பற்றி பேச வந்தப்பவும், ஆபீஸ்ல வேலை அதிகம்னோ... க்ளைண்ட் மீட்டிங்கல இருக்கேன்னோ, எதையாவது சொல்லியோ போனை, 'கட்' செய்துடுவே...''

''என் வேலை அப்படி.''

''அதனாலத்தான், ரொம்ப பிசியா இருக்கிற உன்கிட்ட சொல்ல முடியாம நானே பார்த்தண்டேன்.''

அப்பாவின் குரலில் இருந்த கடுப்பை உணர்ந்த மகாதேவன், அதற்குமேல் பேச முடியாமல், ''சரி, உன் இஷ்டம்...'' என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

சாம்பசிவம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்; மூவருக்குமே திருமணமாகி விட்டது.

மூத்தவன் மகாதேவன்; அவனை எம்.காம்., படிக்க வைத்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் நிறுவனம் ஒன்றில், வேலையும் வாங்கித் தந்தார்.

வேலையில் சேர்ந்த மகாதேவன், திறமைகளை வளர்த்துக் கொண்டு, ஒன்றரை லட்சம் சம்பளத்தில், பெரிய பதவிக்குப் போய் விட்டான். அதே அலுவலகத்தில் பணிபுரியும், அவன் மனைவியும், அவனுக்கு சமமாக சம்பளம் வாங்குகிறாள்.

இரண்டாவது மகன் ஜெயபிரகாஷ், எம்.சி.ஏ., முடித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான்.

திருமணமாகி புகுந்த வீடு சென்ற மகளும் தன் கணவன், பிள்ளை, குடும்பம் என்று சுருக்கிக் கொண்டு, 'உன் வீட்டிற்கு வந்தால் என்ன தருவாய்; என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்' என்ற வகையில்தான், அப்பா - மகள் உறவை வைத்துக் கொண்டாள்.

சாம்பசிவத்தின் மனைவி கற்பகம், இல்லத்தரசி; வாயில்லாப்பூச்சி. கணவன் சொல்லே வேதவாக்கு என, ஆரம்பகாலம் முதல் இருந்து விட்டவள்.

ஓய்வு பெற்றபின் வீட்டில் முடங்கிய சாம்பசிவம், பிள்ளைகள் இருந்தும் அனாதையாய் உணர்ந்தார்.

அருகில் வசிப்போரும் வேலைக்குச் செல்வதும், வருவதுமாய் இயந்திர வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர் சம்பாதித்துக் கட்டிய திருவல்லிக்கேணி வீடு, எதோ காப்பகம் போல தோன்றியது.

'இந்த நகர வாழ்க்கை, சுத்தமா பிடிக்கல கற்பகம். வீட்டை வித்துட்டு, காஞ்சிபுரம் வீட்டுக்குப் போயிடலாமான்னு தோணறது...' என்றார் ஒருநாள்.

'அது சரிப்பட்டு வருமா...' தயக்கமாய் கேட்டாள் கற்பகம்.

'பக்கத்து வீட்டுல யார் இருக்கா, என்ன வேலை பாக்கிறான்னு எதாவது நமக்குத் தெரியறதா... ஆனா, அங்கே அப்படி இல்லை. அக்கம் பக்கத்தார் நல்லா பழகறா. இங்கே நம்ம பிள்ளைகளே வந்து போறதில்லை... ஆனா, அங்கே புரோகிதர் வீட்டு அம்பி ரொம்ப ஒத்தாசையாய் இருக்கான்...'

அவர் சொல்வதில் இருந்த உண்மையை, அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

'நீங்க சொன்னா சரிதான்...' என்று தலையசைத்தாள்.

காஞ்சிபுரம் அருகே கிராமத்தில் இருந்த அந்த வீடு, அவரது தாய் மாமாவின் சொத்து. சாம்பசிவம் சிறுவயதில் மாமா, அத்தை மீது பாசமாக இருந்தார். குழந்தை இல்லாத அவர்களுக்கு கூடவே இருந்து, சிறுசிறு உதவிகள் செய்து வந்ததால், மாமாவும், அவரைத் தன் பிள்ளையாகவே பாவித்தார்.

சாகும் முன், மாமா அந்த வீட்டை சாம்பசிவம் பெயருக்கு, உயில் எழுதி வைத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்துவிட்டாலும், அவ்வப்போது, அங்கு போய் வந்தார் சாம்பசிவம். அந்த வீட்டின் சூழலும், அக்கம் பக்கத்தாரின் பழக்கமும், அங்கேயே நிம்மதியாக செட்டில் ஆகிவிடலாம் என, முடிவெடுக்க வைத்தது. பிள்ளைகளுக்குச் சொல்லாமலே திருவல்லிக்கேணி வீட்டை விற்றுவிட்டு, காஞ்சிபுரம் வீட்டுக்கு குடிபோய்விட்டார் சாம்பசிவம்.

வாசலில் நிழலாட, அவரது நினைவுகள் கலைந்தன. புரோகிதரின் மகன் ராமசுப்பிரமணியன் கையில் செய்தித்தாளுடன் நின்றான்.

''வாடா... பேப்பர் வாங்கிண்டு வந்தியாக்கும்?”

''ஆமா மாமா... அரசியல் செய்தினா, ஆர்வமாய் படிப்பேளே... எதோ உட்கட்சி பிரச்னைன்னு போஸ்டர் இருந்துது, அதான் வாங்கிண்டு வந்தேன்”

நெகிழ்ந்து போனார் சாம்பசிவம் .

''டவுனுக்குப் போறேன் மாமா... மதியம் வந்துடுவேன், எதாவது வேணும்ன்னா சொல்லுங்கோ வரும்போது வாங்கிண்டு வறேன்.”

''இன்னிக்கு எதுவும் வேண்டாம்ப்பா,” என்ற சாம்பசிவம், அவனை வாஞ்சையோடு பார்த்தார்.

கபடமில்லாமல் புன்னகைத்தான் அவன்.

''எனக்காக மாஞ்சு மாஞ்சு எல்லாம் செய்றியே...”

''இல்ல மாமா, எனக்காகத்தான் செய்றேன். நான் வேதபாடம் படிக்கறேன். பெரியவாளுக்கு சேவை செய்யணும், அது ஆசீர்வாதம்ன்னு, குரு சொல்லித் தந்திருக்கார்; அப்படி, ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. உங்க ஆசீர்வாதம் வேணும். அதுக்காகத்தான் இதெல்லாம்... இப்ப சொல்லுங்கோ, எனக்காகத்தானே செய்யறேன்...” என்று கேட்டு சிரித்தான்.

''நன்னா பேசற.”

''எல்லாம் பெரியவா ஆசீர்வாதம்.”

ராமசுப்பிரமணியனின் வீடு, அவர் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளியிருக்கிறது. அவன் அப்பா புரோகிதர்; வருமானம் குறைவுதான். அவர் மனைவி காஞ்சிபுரத்தில் உள்ள சில கடைகளுக்கும், தெரிந்த சில வீடுகளுக்கும் வாடிக்கையாக பலகாரம் செய்து கொடுக்கிறாள்.

ஒரே பையனான இவன். வேதபாட சாலையில், மூன்றாம் வருடம் படிக்கிறான். இவருக்கு மட்டுமல்ல, தெருவில் இருக்கும் எல்லாருக்கும் உதவி செய்து, அனுசரணையாக இருந்து வந்தது, அந்தக் குடும்பம்.

ராமசுப்பிரமணியன் விடைபெற்றுப் போன ஓரிரு நிமிடங்களில், வாசலில் கார் வந்து நின்றது; வந்தது, மகன் மகாதேவன்.

''எப்படி இருக்கேப்பா?” சிரித்தபடி, அவன் விசாரிக்க... மனசுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது சாம்பசிவத்துக்கு.

சென்னையில் இருந்தபோது, மாதக்கணக்கில் எட்டியே பார்க்காமல் இருந்தவன், இப்போது, இத்தனை தூரம் வருகிறான் என்றால், எதோ திட்டத்துடன் வந்திருக்கிறான் என புரிந்தது.

''அம்மாவும், நீயும் ஏம்ப்பா இப்படி தனியா கஷ்டப்படறேள்? திருவல்லிக்கேணி வீடு சரிப்பட்டு வரலைன்னா, என்கூட வந்து இருக்க வேண்டியதுதானே!” என்றவன், சேரை இழுத்துப் போட்டு அருகில் உட்கார்ந்தான்.

''வாப்பா... நன்னா இருக்கியா?” என உபசரித்த அம்மாவிடம், ''நீயாவது சொல்ல வேண்டாமாம்மா,” என, உரிமையாய் கோபித்தான்.

அவனையே பார்த்தார் சாம்பசிவம். பிறகு மெல்லச் சொன்னார்...

''உனக்கு எதுக்குடா சிரமம்! நீயும், உன் பொண்டாட்டியும் வேலைக்குப் போறவா.”

''வேலைக்குப் போகும்போது, வீட்டையுமா தூக்கிண்டு போறோம்... நீங்க வந்து இருக்கலாம் தானே!”

''அப்பவும் நாங்க தனியாத்தானே இருக்கணும்... இடம் மட்டும் தான் வேற.”

அவனால், உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மவுனமாக இருந்தான்.

''சரிப்பா... உனக்கு எது சவுகர்யமோ, அதுபடி செஞ்சுக்கோ... ஆமா, திருவல்லிக்கேணி வீட்டை, என்ன விலைக்கு வித்த?”

''மார்க்கெட் விலைக்குத்தான் வித்தேன்; அதுக்கு என்ன இப்போ?”

''ஒரு சின்ன விஷயம்ப்பா... ஆனா, அது...''

'பீடிகை பலமாக இருக்கிறதே' என நினைத்த சாம்பசிவம், ''விஷயத்தைச் சொல்லு,” என்றார்.

''நான், இப்போ குடியிருக்கிற அயனாவரம் வீடு விலைக்கு வரது; வாங்கலாம்ன்னு இருக்கேன்.”

''நல்ல விஷயமாச்சே மகாதேவா.”

''அதுக்குதான் உங்க உதவி தேவைப்படறது. பேங்க்ல அறுபது லட்சம் லோன் தர்றேன்ங்கிறான்; கைல, ஒரு பத்து லட்சம் இருக்கு... இன்னும் முப்பது, துண்டு விழறது, அதை நீ கொடுத்தீன்னா... உடனே முடிச்சிடுவேன்.”

அவன் பொய் சொல்கிறான் என தெரிந்தது. இவர் வீடு விற்ற விஷயம் தெரிந்ததால், பணம் கறக்கப் பார்க்கிறான்.

''கையில பணம் இல்லை மகாதேவா... ரூரல் பண்டுல போட்டுட்டேன்.”

''ஏம்ப்பா பொய் சொல்ற... ரூரல் பண்டுல அதிகபட்சமா அம்பது லட்சம்தான் போட முடியும். மீதி கைலதானே வச்சிருப்ப... ஒரு இருபத்தஞ்சாவது கொடேன்.”

''இல்லடா... இந்த வீட்டுக்கு கொஞ்சம் செலவு செஞ்சுட்டேன். மீதியையும் வேற முதலீடு செஞ்சுட்டேன்.”

அவர் தெளிவாய் சொல்ல, அவன் முகம் மாறினான்.

''சரி, சொத்தில் என் பங்கையாவது கொடு. எனக்கு அவசரத்துக்கு உதவட்டும்.”

''ஏதுடா உன் பங்கு... அது, என் சுயசம்பாத்தியம்.”

''ஓஹோ... வக்கில கேட்டாச்சோ... சரி விடு. நீ எனக்கு கடனா தா... ரெண்டு வருஷத்துல திருப்பித் தந்துடறேன். அந்த வீட்டை இப்ப வாங்கலைன்னா, எப்பவும் வாங்க முடியாது; கைமாறிப் போயிடும்ப்பா.”

''என் கிட்ட பணம் இல்லை. நீங்க ரெண்டுபேர் சம்பாதிக்கறேளே... முப்பது லட்சம் புரட்டறதெல்லாம் பெரிய விஷயமா?”

''வீண்பேச்சு எதுக்கு... இப்ப பணம் தர முடியுமா, முடியாதா?” குரல் உயர்த்தினான் மகாதேவன் .

''எங்கிட்ட பணம் கிடையாது.”

''நீ ஒரு பணப் பிசாசுப்பா. கோடி ரூபாய்க்கு மேல கையில வச்சுண்டு, என்ன செய்யப்போற...உனக்கு பெத்த பிள்ளைங்கிற பாசமே கெடையாது. இனிமேல், நீ எனக்கு அப்பனும் இல்ல; நான் உனக்கு புள்ளயும் இல்ல. இந்த வாசப்படியை, இனி மிதிக்கவே மாட்டேன்; நீ செத்தா கொள்ளியும் போட மாட்டேன்,” என்று கத்தினான் மகாதேவன்.

''எதுவும் போட வேண்டாம். செத்தப்பறம் எனக்கு யார் கொள்ளி போடறான்னு தெரியவா போறது... போடா.” என்றார்.

பணம் கிடைக்காத ஆத்திரத்தில், சேரை தள்ளிவிட்டுவிட்டு, வெளியேறிப் போனான் மகாதேவன்.

''மகாதேவா... மகாதேவா... இருடா, இருடா,” என, பதறி வந்த அம்மாவைக் கூட, அலட்சியம் செய்து, காரில் ஏறிப் போய் விட்டான்.

''ஏன்னா... அவன் கோவிச்சுண்டு போறான்,” என்றபடி கணவனிடம் வந்தாள் கற்பகம்.

''போகட்டும் விடு. அப்பா - அம்மாவை பார்க்க வந்த பிள்ளையா அவன்! பணம் தேடி வந்தவன் தானே!”

''நம்ம புள்ள... அவன்.”

''ஆமா... நம்ம புள்ளைதான். அவனுக்கு என்ன குறை வச்சேன்... கஷ்டம் தெரியாம வளத்தேன்; நல்ல படிக்க வச்சேன், வேலை வாங்கிக் குடுத்தேன்; ஊர் மெச்ச கல்யாணம் நடத்தினோம்.எதில் குறை வச்சோம்... கல்யாணமான ரெண்டாவது மாசமே, ஆபீஸ் போக வர சிரமமா இருக்குன்னு, தனிக்குடித்தனம் போன வன்தானே!

''ஆரம்பத்தில், வாரா வாரம் வந்து பார்த்தவன், இப்ப வருஷத்துக்கு, ஒரு தடவை வர்றதே அபூர்வம். இப்போ கூட பணத்துக்காகத்தானே வந்திருக்கான்... என்ன புள்ள இவன்!”

''அதுக்காக...”

''நீயே யோசிச்சுப்பார்... அப்பா அம்மாங்கிறவ, புள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும், சொத்து சேத்து குடுக்கறதுகும் தானா... பிள்ளைகளுக்குன்னு கடமை இல்லையா... பெத்து வளர்த்தவாளை, அவா வயசான காலத்துல, அரவணைச்சுக்க வேண்டாமா... பணம் இல்லன்னதும், கொள்ளி போட மாட்டேன்னு சொல்லிட்டு போறானே... இவன் கொள்ளி போட, விலை முப்பது லட்ச ரூபாயா?''

அவருக்கு வார்த்தை தழுதழுத்தது; கண்களில் கண்ணீர் கசிந்தது கற்பகத்துக்கு.

''பணத்தை வச்சு பாசத்தை விலை பேசற, இவன் என்ன புள்ளை...ஒரு புள்ளைக்கு அப்பா செய்ய வேண்டிய, அத்தனை கடமைகளையும், நான் முழுசா செஞ்சு முடிச்சுட்டேன். என் மனசுல திருப்தியா இருக்கு. ஆனா... பெத்தவாளுக்கு, ஒரு புள்ளையா செய்ய வேண்டிய கடமையைப் பத்தி அவன் நினைக்கக்கூட தயாரா இல்லையே... நானெல்லாம் அப்பா - அம்மாவை எப்படி கவனிச்சுண்டேன். என் புள்ளைகள்ட்ட எனக்கு அந்த குடுப்பினை இல்லாமப் போச்சு.”

பெருமூச்சு விட்டார் சாம்பசிவம். மவுனமாய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்.

''அம்மா - அப்பாவை விடு... என் மாமா மேல கூட எவ்வளவு பாசமா இருந்தேன். இந்த வீட்டை அவரோட அண்ணன் புள்ளைகளுக்கு கொடுத்துடுவார்ன்னு எல்லாரும் நினைச்சிட்டிருந்தா... எதையும் எதிர்பார்க்காம, அன்பு காட்டின என் பேருக்கு எழுதி வச்சாரே... அதுதாண்டி உண்மையான பாசம்.”

ஆமோதிப்பது போல தலையசைத்தாள் கற்பகம்.

''மாமா...'' வாசல் பக்கமிருந்து சத்தம் கேட்டது; திரும்பினார், ராமசுப்பிரமணியன்.

கையில் தலைவலி தைலத்துடன் வந்த புரோகிதர் மகன், ராமசுப்பிரமணியன், அதை கற்பகத்திடம் கொடுத்தான்.

''நேத்திக்கு சாயங்காலம், தலைவலிக்கறது, தைலபாட்டிலை காணோம்ன்னு சொன்னேளே மாமி... அதான் வாங்கிண்டு வந்தேன்,''என்றான் அக்கறையோடு.

மனசுக்குள் மின்னலடித்தது சாம்பசிவத்துக்கு. ஒரு முடிவுக்கு வந்தவராய், ''வாடா... அம்பி,” என்று, அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.

ஹரி கிருஷ்ணா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us