PUBLISHED ON : ஜூலை 28, 2019

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பிரெஷ்னோ என்ற நகரத்தில் உள்ள ஒரு ஓட்டலில், வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த ஓட்டலுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வருவோர், சாப்பிட்டு முடிக்கும் வரை, தங்களின், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்திருந்தால், 'பில்'லில், கணிசமான தொகை தள்ளுபடி செய்யப்படும். மேலும், பிரமாண்ட, 'பீட்சா' பரிசாக வழங்கப்படும்.
ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், 'மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால், மக்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன், மனம் விட்டு பேசுவதே குறைந்து விட்டது. சாப்பிடும்போதும், மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இதனால் தான், 'மனம் விட்டு பேசுங்கள்; பரிசை அள்ளிச் செல்லுங்கள்...' என்ற திட்டத்தை துவக்கியுள்ளோம்.
'இந்த திட்டத்தின் படி, குறைந்தது நான்கு பேராக வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, எங்களிடம் கொடுத்து விட வேண்டும். சாப்பிடும்போது, தங்களுடன் வந்தவர்களுடன், மனம் விட்டு பேச வேண்டும். அவர்களுக்கு கட்டண தள்ளுபடியுடன், பரிசும் கொடுக்கிறோம்...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
