PUBLISHED ON : ஜூலை 28, 2019

'நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு' என்ற பெருமை, ஐரோப்பிய நாடான, நார்வேக்கு உண்டு. இங்குள்ள, சொம்மரே என்ற, அழகான குட்டி தீவில் நடக்கும் நிகழ்வுகள், ஆச்சரிய அதிசயங்களில் ஒன்று.
இங்கு, நவம்பரில் துவங்கி, ஜனவரி வரை, இருட்டாகவே இருக்கும். சூரிய வெளிச்சத்தை பார்க்க முடியாது.
ஆனால், மே மாதம் துவங்கி, ஜூலை வரை, இதற்கு தலைகீழாக இருக்கும். சூரிய வெளிச்சம், 24 மணி நேரம் இருக்கும். பகல் எது, இரவு எது என்பதே, இங்கு வசிக்கும் மக்களுக்கு தெரியாது. ஆர்டிக் வட்டத்தின், வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், இந்த தீவில், இப்படி ஒரு வினோதமான கால நிலை நிலவுகிறது.
இந்த தீவில், மொத்தமே, 500க்கும் குறைவானவர்கள் தான் வசிக்கின்றனர். இவர்கள், கால நேரம், பார்த்து, எந்த நிகழ்வையும் மேற்கொள்வது இல்லை. அதிகாலை, 3:00 மணிக்கு கூட, குழந்தைகள் கால்பந்து விளையாடுவதை, பார்க்கலாம்.
'எங்களுக்கு எப்போது துாக்கம் வருகிறதோ, அப்போது துாங்குவோம். கடிகார நேரத்தை எல்லாம், எங்களால் கடைப்பிடிக்க முடியாது. அதனால், நேரமற்ற மண்டலமாக, எங்கள் தீவை அறிவிக்க வேண்டும்...' என, இப்பகுதி மக்கள், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
— ஜோல்னாபையன்.
