தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என்றதற்காய் நன்றி!

என்றதற்காய் நன்றி!

என்றதற்காய் நன்றி!


PUBLISHED ON : டிச 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''சார்... ரெண்டு நிமிஷம் நீங்க முன்னாடி போங்க; இதோ வந்துடறேன்,'' என்று கல்லுாரி தாளாளரிடம் கூறி, வகுப்பறையை நோக்கி நடந்த சக்தி, தான் முன்பு அமர்ந்திருந்த இருக்கையை தேடி, அமர்ந்தான்.

நினைவலைகள் நிதானமாய் பயணிக்க, காலச் சக்கரம், ஏழு ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தது.

தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரில், அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வழியில், தட்டுத்தடுமாறி, பிளஸ் 2 வரை பயின்று, ஊரில் இருக்கும் சாமிகளுக்கெல்லாம் நேர்த்தி வைத்து, எப்படியோ, பொதுத் தேர்வில், 980 மதிப்பெண்கள் பெற்று விட்டான், சக்தி.

வசதி இல்லாத போதும், எப்பாடு பட்டேனும், தன் பிள்ளையின் ஆசைகளை நிறைவேற்றும் நடுத்தர வர்க்க தந்தையாகவே சக்தியின் தந்தையும் இருந்தார். அதனாலேயே, அவன் விரும்பிய பொறியியல் படிப்பில் சேர, கவுன்சிலிங் விண்ணப்பப் படிவத்தை வாங்கி, அதை, பூர்த்தி செய்து அனுப்பினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுாரியில் அவனுக்கு இடம் கிடைக்கவே, நல்ல மதிப்பெண் வாங்கி, ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்தான், சக்தி. ஆனால், வகுப்பில் நடத்தப்பட்ட ஆங்கில விரிவுரைகள் அவனை பயமுறுத்தியது.

'எப்படியாச்சும் நல்லா படிச்சு, ஒரு வேலையில சேர்ந்துருப்பா...' என்று அவன் தந்தை, அவனை விடுதியில் விட்டு செல்லும் போது கூறிய வார்த்தைகள், அவன் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தவனாய், அமர்ந்திருந்தான்.

விடுதியில் அவனுடன் தங்கியிருக்கும் சரண், அவன் கரங்களைப் பற்றி, 'என்னடா எப்ப பாத்தாலும், அமைதியாவே இருக்க... பேச மாட்டியா...' என்றான்.

அதுவே, சக்திக்கு ஆறுதலாக அமைந்திடவே, அன்று முதல், சக்தியின் உயிர் தோழன் ஆனான், சரண்.

ஆங்கிலத்தில் நடத்தப்படும் விரிவுரைகளை குறிப்பெடுப்பதும், கோர்வையாய் எழுதுவதும் சக்திக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. 'உனக்கு நான் சொல்லித் தரேன்டா...' என்று சரண் சொல்லித் தந்தாலும், சக்தியால் செமஸ்டர் தேர்வுகளில் பெற்றி பெற முடியவில்லை. அதனாலேயே, முதல் ஆண்டு, இரண்டு பாடங்களில் அரியர் வைத்தான்.

'எல்லா செமஸ்டர்லயும் இப்படி அரியர் வச்சுட்டு இருந்தா, நீ எப்படி உருப்படுவ... இன்ஜினியரிங் சேரணும்ன்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா... அப்படி ஆகுறதுக்கு எதாச்சும் முயற்சி பண்ண வேணாமா...' என்று விடைத் தாளை கொடுக்கும் போதெல்லாம், கடிந்து கொள்வர், ஆசிரியர்கள். அவர்களின் கடுஞ்சொற்களில் மனம் சோர்வுறும் போதெல்லாம், 'எப்படியாச்சும் ஒரு வேலைக்கு போயிருப்பா...' என்ற தந்தையின் வார்த்தைகள் நினைவுக்கு வரும். ஆனாலும், மூன்று ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், அவன் தோல்வியுற்ற பாடங்களின் எண்ணிக்கை ஆறாக உயர, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தான்.

அன்று, செமஸ்டர் லீவு முடிந்து, தாமதமாக விடுதிக்கு வந்த சக்தி, விடுதி உணவகத்தில் காலை உணவை உண்டு கொண்டிருந்தான். அவனைத் தேடி வந்த சரண், 'எப்படா வந்த... இவ்வளவு நேரம் உனக்காக ஹாஸ்டல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...' என்றவன், 'இன்னைக்கு நமக்கு வகுப்பு இல்லயாம்... யாரோ நவீன தொழில் முனைவு பத்தி சொல்லித்தர வர்றாங்களாம். நல்லவேளை லீவு முடிஞ்ச முதல் நாளே கிளாஸ்ல இருக்கணுமேன்னு நினைச்சேன்; கடவுள் காப்பாத்திட்டாரு...' என்று கதை சொல்லிக் கொண்டு இருந்தான்.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெரும் மாணவனாக இருந்தாலும், ஏனோ, வகுப்பறையில் அமர்ந்து விரிவுரை கேட்பது சரணுக்கு வேப்பங்காயாய் கசந்தது.

'சீக்கிரம் சாப்பிட்டு வாடா... லேட்டா போனா, அதுக்கும் பைன் கேப்பாங்க...' என்று அங்கலாய்த்தான், சரண்.

சாப்பிட்டு முடித்து, தன் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை எடுத்து, கழுத்தில் மாட்டியவாறு அவனுடன் இணைந்து, நடக்கத் துவங்கினான், சக்தி. வகுப்பிலிருந்து அரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தனர், மாணவர்கள்.

'இன்னைக்கு கிளாஸ் இல்லங்கிறது சந்தோஷமாக இருந்தாலும், நாள் முழுக்க ஒருத்தர் பேசுறதயே கேட்டுட்டு இருக்கணும்ன்னா கடுப்பா இருக்கும்லே...' என்ற சரணின் கேள்விக்கு, வெறுமனே தலையசைத்தான்.

சக்தியின் அமைதிக்கு அர்த்தம் புரிந்தவனாய், 'என்னடா ஆச்சு... அப்பா ஏதும் சொன்னாரா?' என்று கேட்டான்.

'ஆமாண்டா... 'இப்பிடி அரியர் வச்சு இருக்கியே... இத, எப்ப கிளியர் பண்ணி, வேலைக்கு போக போற... உன்னை நினைச்சா, ரொம்ப பயமா இருக்கு'ன்னு சொன்னாருடா. என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம கிளம்பி வந்துட்டேன்...' என்று கூறிய சக்தியை, கனிவுடன் பார்த்தான் சரண்.

அரங்கிற்குள் சென்றனர். சம்பிரதாய மேடை சடங்குகள் முடிந்த பின், பேசத் துவங்கினார், அந்த பேச்சாளர். தாம் ஒரு தொழில் முனைவை ஊக்குவிக்கும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் வழிகாட்டுதலும், முதலீடும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறி, தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

மாணவர்களிடத்தில் அவர் மேற்கொண்ட தமிழ்வழி உரையாடல், அவர்களை வெகுவாய் கவர்ந்தது. 'பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துல வேலை செய்யணும்ன்னு நினைக்காதீங்க... அப்படி ஒரு நிறுவனத்த நீங்க உருவாக்கணும்ன்னு நினைங்க...' என்று அவர் கூற, கைத்தட்டல்களால் அதிர்ந்தது, அரங்கம்.

'இந்த உலகத்துல எத்தனையோ பிரச்னை இருக்கு; தெரிஞ்சோ, தெரியாமலோ நாம அத தினமும் கடந்து வந்துட்டு இருக்கோம். ஆனா, அதற்கான தீர்வை தேடணும்ன்னு ஒரு நாளும் நினைச்சிருக்க மாட்டோம். அந்த பிரச்னைகளை ஒரு நிமிஷம் நின்னு கவனிச்சு, அதற்கான தீர்வை நம்மளால குடுக்க முடிஞ்சா, அதுதான், ஒரு சிறந்த தொழில் முனைவு...' என்று அவர் கூற, அரங்கமே அமைதியாய் அவரை பார்த்தபடி இருந்தது.

தொழில் முனைவு எனும் சிறு விதை, தன்னை அறியாமல் தனக்குள் விழுந்ததை உணராதவனாய், அந்த பேச்சாளரின் வார்த்தைகளுக்கு செவிமடுத்துக் கொண்டு இருந்தான், சக்தி.

'இப்ப உங்களுக்கான பிரச்னை என்ன, அதுக்கு என்ன தீர்வுன்னு யோசிங்க... நாம லஞ்ச் போயிட்டு வந்து, இதப் பத்தி பேசுவோம்...' என்று சொல்லி அனுப்பினார்.

உணவு இடைவேளை முடிந்து, மாணவர்கள் மீண்டும் அரங்கத்திற்குள் சென்று, தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். எல்லா மாணவர்களும் அவர்களுக்கான பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வை கூறிக்கொண்டே வர, சரணும் அவனுடைய பிரச்னையையும், அதற்கான தீர்வையும் கூறி அமர்ந்தான்.

சக்தியின் முறை வந்தது; எல்லா மாணவர்களிடமும் கேட்டதை போல, அவனிடமும், 'உன் பேரு என்னப்பா... எங்கிருந்து வர்ற...' என்று கேட்டார்.

'என் பேரு சக்தி; தேனி மாவட்டம், போடிநாயக்கனுார் என் சொந்த ஊரு. என்னோட பிரச்னை தண்ணி தான் சார். அதுக்கான தீர்வு எங்க ஊர்ல இருக்கிற வைகை ஆற்றை சுத்தம் பண்ணணும்; மழை நீரை மக்கள் சேமிக்கணும்...' என்று கூறி, அமைதியாக நின்றான்.

அவனது பதிலில் இருந்த பொதுநல நோக்கமும், அவனது வேகமும், பேச்சாளரை கவர்ந்தது. அதுவரை, அரியர் பட்டியலில் பெயர் வரும்போது மட்டுமே எழுந்து நின்ற சக்தி, அன்று அனைவரது முன்னிலையிலும் பாராட்டு பெற்றான்.

ஏதேதோ கனவுகளுடன் கல்லுாரிக்குள் அடியெடுத்து வைத்த சக்திக்கு, அவன் கனவுகள் சிதைந்து விடுமோ என்கிற பயம் அதிகரித்து வந்த தருணம் அது. செயல்வழி கற்றல் மீது, அதீத ஆர்வம் கொண்ட அவனது வாழ்விலும் வசந்தம் வீசாதா என்று எதிர்பார்த்த சக்திக்கு, அந்த நாள், திருப்புமுனையாக அமைந்தது.

தன்னுடைய அமைப்பின் மூலமாக, தண்ணீர் தொடர்பான தொழில்நுட்ப வகுப்புகளுக்கு சக்தியை அனுப்பினார், பேச்சாளர். அதன் மூலம், நடைமுறை அறிவை பெற்றான், சக்தி.

நான்கு ஆண்டு படிப்பை, அரியருடன் முடித்து வெளியேறிய சக்தி, தான் பெற்ற பட்டறிவு மற்றும் அந்த அமைப்பின் உதவியைக் கொண்டு, 'ரெயின் ஸ்டாக்' என்னும் நிறுவனத்தை நிறுவி, மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் மேலாண்மை போன்றவற்றை செய்யத் துவங்கினான்.

காலம் உருண்டோட, இன்று, தமிழகத்தின் இளம் தொழில் முனைவாளர், சக்தி.

இதோ, இன்று, அவன் படித்த கல்லுாரி விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றுள்ளான்.

'அரியர் வச்சிருக்க, நீயெல்லாம் வாழ்க்கையில உருப்பட மாட்ட...' என்று கூறிய ஆசிரியர்களுக்கு, நன்றி கூறினான். அரியர் வைக்காத மாணவனாக இருந்திருந்தால், இன்று ஏதோ ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருப்பான்.

''மிஸ்டர் சக்தி... ஆடிட்டோரியம் போகலாமா... எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க,'' என்று கேட்ட கல்லுாரி தாளாளருக்கு, பதிலாக புன்னகையை உதிர்த்தபடி, அவருடன் நடந்தான், சக்தி!

ஞா.நிவேதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us