PUBLISHED ON : ஜூலை 30, 2023

திருச்சியில் சிவகுருநாதன் என்பவர், 19-ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து வந்தார். வெள்ளையர்களின் காலாட்படையில், வீரராகப் பணியாற்றி வந்தார்.
சிவகுருநாதரின் மகன்- - ராமலிங்கம். ராமலிங்கம் சிறு பிள்ளையாக இருந்தபோதே, தன் பெற்றோரை இழந்தார். சிவகுருநாதனின் நண்பர்களான காலாட்படை வீரர்கள், பெற்றோர் இல்லாத குறையே தெரியாமல் ராமலிங்கத்தை வளர்த்து வந்தனர்.
குதிரையேற்றம், ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி- என, அனைத்தையும் சொல்லி கொடுத்தனர். ராமலிங்கத்தை காலாட்படை வீரர்களில் ஒருவராகவும் சேர்த்துக் கொண்டனர்.
என்னதான் பயிற்சி, திறமை, வேலை என்று இருந்தாலும், ராமலிங்கத்தின் மனம், உலக சுக-போகங்களை வெறுத்தது. சிவ நிஷ்டையையும், சிவனருளையும் விரும்பியது. அதன் காரணமாக அவ்வப்போது நிஷ்டையில் அமர்ந்து விடுவார், ராமலிங்கம்.
ஒருநாள் காலை, காலாட்படை வீரர்கள் வழக்கப்படி செய்யும் பயிற்சி நேரத்தில், நிஷ்டையில் அமர்ந்து விட்டார், ராமலிங்கம். அதே சமயம், காலாட்படை வீரர்களுக்கான பயிற்சி நடந்து கொண்டிருந்தது.
ராமலிங்கத்தின் வடிவில் சிவபெருமானே மானிட வடிவம் தாங்கி, செய்ய வேண்டிய பயிற்சிகளை எல்லாம் செய்து முடித்தார். நிறைவாக குதிரை பயிற்சியையும் முடித்த இறைவன், குதிரையை நிறுத்தி விட்டு, அங்கிருந்து மறைந்தார்.
அவ்வளவு நேரமும் நடைபெற்ற பயிற்சிகளைப் பார்த்த வெள்ளைக்கார துரை, ராமலிங்கத்தின் (இறைவனின்) பயிற்சிகளில், தன் மனதைப் பறி கொடுத்தார். அவரை பாராட்ட நினைத்தார்.
பார்த்தால், குதிரை மட்டும் தான் இருந்தது. உடனே, ராமலிங்கத்தை தேடி அவர் இருப்பிடத்திற்குச் சென்றார், வெள்ளைக்கார துரை.
ராமலிங்கம் நிஷ்டை கலையும் வரை காத்திருந்தார். அவருடன் பேசும்போது, ராமலிங்கத்தின் வடிவில் வந்து பயிற்சிகளை எல்லாம் செய்தது, தெய்வம் என்பது புரிந்து வியந்தார், துரை.
தன் துாய்மையான பக்தியால் தெய்வத்தையே மனித வடிவம் கொண்டு வரச்செய்த அந்த ராமலிங்கம் தான், பிற்காலத்தில், 'தோபா சுவாமிகள்' என்ற பெயரில் பெரும் சித்தராகவும் தவ யோகியாகவும் விளங்கி, பற்பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
பெரும்புகழ் பெற்ற சித்த புருஷரான, தோபா சுவாமிகளின் சமாதி, வட ஆற்காடு மாவட்டம் வேலுாரில் உள்ளது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்
மஞ்சள் கலந்த நீரை வீடுகளில், காலை - மாலை வேளைகளில் தெளித்து வர, லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
