PUBLISHED ON : ஆக 27, 2023

செரிமான சக்தியைத் துாண்டுவதில் பலே கில்லாடி, சோம்பு. அசைவ உணவைச் சாப்பிட்ட பின், பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பை வாயில் போட்டு மென்று வந்தால், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்.
அசைவ உணவு என்றில்லை, சைவ உணவைச் சாப்பிட்ட பின்பும் சோம்பை வாயில் போட்டு மென்று வரலாம். இதனால், செரிமான சக்தி அதிகமாவதுடன், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.
தினமும், காலையில் அரை தேக்கரண்டி, சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பலம் பெறும். நச்சுக்கள் நீங்கி, கல்லீரல், கணையம் போன்றவை துாய்மையாகும். கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுத்து விடும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் தொடர்ந்து சோம்பை சேர்த்து வந்தால், சர்க்கரை அளவு சீராகும். உடலில் இருக்கும் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து மிகுந்த துன்பத்தை கொடுத்தால் கவலைப்பட வேண்டாம். சோம்பு குடிநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், நீர் கோர்ப்பது தடுக்கப்படும்.
தினமும் சிறிதளவு சோம்பு சாப்பிட்டு வந்தாலே போதும், மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தைப் பேறு கிட்டும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது, சோம்பு.
சோம்பை லேசாக வறுத்துப் பொடி செய்து, தினமும் ஒருவேளை, 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி விடும்.
இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்கள், சோம்புத் தண்ணீரை குடிக்கலாம். மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து, காலை - மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும். சோர்வைப் போக்கி நமக்கு புத்துணர்வை தரும்!
