PUBLISHED ON : ஆக 13, 2023

காற்று கால சீசனில் கிடைக்கும் பழங்களில் முக்கியமானது, நாவல் பழம். உடலின் பல்வேறு பிரச்னைகளை போக்கும் அருமருந்தாக விளங்குகிறது, நாவல் பழம். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன.
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே, மருத்துவ குணம் மிக்கது.
நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்துக்கு பக்க பலமாக உள்ளது. மலச்சிக்கலுக்கு தீர்வு தரும். நாவல் பழ ஜூசை உப்பு சேர்த்து அருந்த, வயிற்றுப் போக்கு உடனே நிற்கும்.
நாவல் மரத்தின் கொழுந்து இலைகளை நன்றாக இடித்து எடுத்து, தினமும், ஒரு தேக்கரண்டி அளவு, இரண்டு வேளை வீதம், மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கை குணப்படுத்தலாம்.
பித்தத்தையும், ரத்த சோகையையும் குணப்படுத்தும். சிறுநீரக கற்களை கரைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், மூன்று மாதத்தில் மூல நோய் குணமாகும்.
ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, நாவல் பழத்திற்கு உண்டு. இதனால், தொழுநோய் குணமாக, சாப்பிட சிபாரிசு செய்கின்றனர். இந்த பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான நோய் தவிர்க்கப்படும்.
ஆன்டி ஆக்சிடென்ட், பாலிபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல் பழத்தை சாப்பிட்டால், இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் மாசுபாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையை சரி செய்ய, நாவல் பழ கொட்டையை அரைத்து, துணியில் சலித்து, அதை ஒரு தேக்கரண்டி வாழைப் பழத்துடன் அல்லது நீர் மோரில் கலந்து, நான்கு நாட்கள் சாப்பிட சரியாகும்.
மருந்து மாத்திரைகளால் குறையாத சர்க்கரை அளவை, பழமையான நாவல் மர வேர் பட்டை மற்றும் வேப்ப மர பட்டை சூரணத்தை வெந்நீரில் கொதிக்க வைத்து, காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வர குறையும்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை நிறுத்த, நாவல் மர பட்டை சூரணத்தை, ஒரு தேக்கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து, அதை ஐந்து முறை வாய் கொப்பளிக்க சரியாகும்; ஈறுகளும் பலமடையும்.
நாவல் பழத்தின் விதையில், 'ஜம்போலைன்' என்ற குளூக்கோசைட் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை நன்கு இடித்து துாளாக்கி, தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வர, நீரிழிவு நோய் குணமாகும்.
நாவல் பழங்களை மிகுதியாக சாப்பிடும் பட்சத்தில், இருமல், தொண்டைக்கட்டு, பல் கூச்சம் மற்றும் செரிமானப் பிரச்னைகள் உண்டாகலாம். ஆகவே, மிதமான எண்ணிக்கையில் இதை எடுத்துக் கொள்ளலாம்.
நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. பழம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் பால் சாப்பிடக் கூடாது.
தொகுப்பு: ஞானம் ராஜேந்திரன்
