PUBLISHED ON : ஆக 20, 2023

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
'தெய்வப்பிறவி படத்தை, ஹிந்தியில் எடுக்காதீர்கள். படம் வெற்றி பெறாது. ஏனெனில், கதையில், பத்மினி என் மனைவி. எஸ்.எஸ்.ஆர்., பத்மினியின் தம்பி. நான் ஒரு தவறான செய்தியை கேள்விப்பட்டு, என் மனைவியிடம் கோபமாக இருப்பேன். அப்போது, எஸ்.எஸ்.ஆரிடம் என் ஆத்திரத்தை கொட்டுவேன். இறுதியில் பெரிய தகராறு வரும்.
'ஏளனமாக, 'உன் அக்கா, நடத்தைக் கெட்டவள்...' என்பேன். கடும் கோபத்தோடு என் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்து விடுவார். உடனே பதறிப்போய், சிவாஜியிடம் இருந்த குடையை பிடுங்கி ஆவேசத்துடன், 'யாரடா அடிக்கிற... என் அன்பு தெய்வத்தையா அடிக்கிற... உன்னை வளர்த்து ஆளாக்கிய அவரையா அடிக்கிற...' என கேட்டவாறு, குடை கிழிந்து, உடைந்து போகும் வரை அடிப்பார், பத்மினி.
'அந்த உணர்ச்சிமிக்க காட்சியில், நாங்கள் மூவருமே சிறப்பாக நடித்தோம். அதுபோல், உணர்ச்சியுடன் நடிக்க, ஹிந்தியில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர்., பத்மினி கிடையாது...' என்றார், சிவாஜி.
இருந்தாலும், தெய்வப்பிறவி படத்தை, ஹிந்தியில் தயாரித்து, வெளியிட்டனர்.
'சிவாஜி சொன்ன மாதிரியே, ஹிந்திப் படம் படு தோல்வி அடைந்தது...' என்றார், ஏவி.எம்.சரவணன்.
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின், கை கொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜியும், நானும் நடித்தோம். எங்களுடன் சாவித்திரியும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர்.
அதில், என் மனைவியாக நடித்த கே.ஆர்.விஜயா, சிவாஜியை கூடப்பிறந்த அண்ணனாக கருதி நெருங்கிப் பழகுவார். நானும், சிவாஜியும் உயிருக்கு உயிரான நண்பர்கள். ஆக, நானும், என் மனைவியும், சிவாஜியும் ஒரே வீட்டில் தங்கியிருப்போம். சிவாஜிக்கு திருமணம் ஆகவில்லை.
ஒருநாள், சினிமாவுக்கு போகலாமா என்று எங்களை கேட்பார். 'எனக்கு ரொம்ப அலுப்பாக இருக்கு. நீ வேணும்னா உன் தங்கையை கூட்டிட்டு போ...' என்பேன். அவர்களும் சினிமாவுக்கு போய் விடுவர்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அங்கே இருவர், 'அவனை விட்டுட்டு, அவன் பொண்டாட்டியை இவன் சினிமாவுக்கு கூட்டிட்டு வந்திருக்கானே...' என, சொல்வான், ஒருவன்.
'இவனுக்கு கிடைச்ச மேனேஜர் வேலையை, பேரை மாற்றி அவனுக்குக் கொடுத்துட்டு, அந்த ஆபீசிலே அவனுக்கு கிடைச்ச பியூன் வேலையை இவன் ஏத்துக்கிட்டு வேலை பார்க்கிறான். அதான் புரிஞ்சுக்க...' என்பான், இன்னொருவன்.
இந்தப் பேச்சுகளை கேட்ட சிவாஜி, கடுங்கோபத்துடன், தாங்கொணாத வேதனையுடனும், 'விஜயா, வா வீட்டுக்கு போகலாம்...' என, அழைத்து வந்து விடுவார்.
'என்ன பாதியிலேயே வந்துட்டீங்க... படம் புடிக்கலையா...' என, நான் கேட்பேன்.
'ராஜு, இப்பவே இந்த வீட்டை விட்டு வெளியே போய் வேறு எங்காவது தங்கிக்கிறேன்...' என, ஆத்திரத்துடன் கூறுவார்.
'ஏன், உனக்கு இப்ப என்ன வந்தது...' என்று கேட்பேன்.
'ஊர்லயெல்லாம் எனக்கும், விஜயாவுக்கும் வேற மாதிரி தொடர்பு இருக்குன்னு பேசறாங்கடா. அதுக்குத்தான் என் வேலையை உனக்கு விட்டுக் கொடுத்தேனாம்...' என்பார், சிவாஜி.
'ஊர்ல பேசறவனெல்லாம் எதை வேணுமானாலும் பேசுவான். அதுக்காக, என்னை விட்டுப் போறேன்னு மட்டும் சொல்லாதே...' என்பேன்.
அவர் பிடிவாதமாக, 'போயே தீருவேன்...' என்பார்.
'இப்ப போகச் சொல்றேன். உனக்கு, என் மனைவி மேல சபலம் வந்துருச்சு. இனிமேலும் இங்க இருந்தா, ஏதாவது தவறு செய்து விடுவோம்கிற மன பயத்துல வீட்டை விட்டு போறோம்கிற...' என்பேன்.
உடனே, அவருக்கு கோபம் வந்து, என்னை அடிப்பார். இருவரும் கீழே விழுந்து உருளுவோம். பிறகு, என்னை மேலே துாக்கி நிற்க வைத்து, 'இனிமேல் இப்படிப் பேசுவியா...' என்று கேட்பார்.
நான் தேம்பி அழுதவாறே, 'எங்களை விட்டு போனேன்னா, அப்படித்தான் சொல்லுவேன்...' என்பேன்.
அவரும் என்னை கட்டிப்பிடித்து அழுதவாறே, 'இனிமேல் என்ன சொன்னாலும், உன்னை விட்டுப் போகவே மாட்டேன்...' என்று கூறி, இருவரும் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே இருப்போம்.
இந்த காட்சி மிகச் சிறப்பாக அமைந்தது. படம் பார்க்கிறவங்களும் அழுது விடுவர்.
எங்கள் மூவரையும் பாராட்டி எழுதின, பத்திரிகைகள்.
அப்படத்தில், உலகம் தெரியாத அப்பாவி பெண்ணாக, எனக்கு தங்கையாக, சகோதரி சாவித்திரி மிக அற்புதமாக நடித்திருந்தார். ஆகவே, அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, எனக்கும், சாவித்திரிக்கும், டில்லியில், ஜனாதிபதி பரிசும், பாராட்டும் கிடைத்தன.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த, ஏக் பூல் சார் காண்டே என்ற ஹிந்தி படத்தை, சென்னையில், நண்பர்களுடன் பார்த்தேன். அதாவது, ஒரு மலரும் நான்கு முட்களும் என்று, தமிழில் அர்த்தம்.
ஹிந்தியில் வெளியான அந்த படத்தின் உரிமையை வாங்கி, சில மாறுதல்களோடு, தமிழில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்து, பம்பாய்க்கு புறப்பட்டேன்.
அங்கு, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ராஜ்கபூரை சந்தித்து விபரத்தை சொன்னேன். அவர், அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி, உடனே, அதை தமிழில் எடுப்பதற்கு உரிமை வாங்கிக் கொடுத்தார். அந்த பட அதிபரும், அதற்கான ஒரு தொகையை பெற்று, சட்டப்படி எழுதிக் கொடுத்தார்.
அந்த சமயத்தில், நான், அரசியல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால், அப்படத்திற்கு வேறொருவரை இயக்குனராக போடலாம் என்று தோன்றியது.
அந்த ஹிந்தி படம், நகைச்சுவை நிறைந்த நல்ல திருப்பங்கள் கொண்ட கதை.
கதாநாயகி, ஒரு வாலிபனை காதலிக்கிறாள். அவனும், இவளை மனமார விரும்புகிறான். அவருக்கு மூன்று தாய் மாமன்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். ஒருவன் பயில்வான். தன்னைப் போன்ற ஒரு பயில்வானுக்கே, தன் மருமகளை திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறான்.
இன்னொரு மாமா, நாட்டியக்காரன். நாட்டிய கலையில் தேர்ச்சி பெற்ற வாலிபனை தேடுகிறான்.
மூன்றாவது மாமா, ஒரு சினிமா பைத்தியம். அவன், நடிப்புத் திறமையுள்ள, நல்ல ஒழுக்கமுள்ள பையனுக்கு தான், தன் மருமகளை மணம் முடிப்பேன் என்ற பிடிவாதத்துடன் இருக்கிறான்.
ஆக, மூன்று மாமன்மார்களும், தன் மருமகளை உயிருக்குயிராக நேசிக்கின்றனர். அவளுக்கு திருமணம் முடியும் வரை, தாங்கள் யாரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என, முடிவெடுக்கின்றனர்.
— தொடரும்.
- எஸ்.எஸ். ராஜேந்திரன்
