PUBLISHED ON : நவ 20, 2016

உண்ணக் கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து
அடையக் குடில்
அடைக்க கதவு
அழகு வேலி
ஆடத் தூளி
தடவத் தைலம்
தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம்
எரிக்க விறகு
மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மனிதன் மறந்தான்!
வைரமுத்துவின் இக்கவிதை, மரம் தான் எல்லாம் என்று, ஆணித்தரமாக சொல்கிறது. வானம் கொடுக்கும் தாய்பாலில், பசுமைப் போர்வை விரித்திருக்கும் இப்பூமியில், மரங்களை அழித்து, இயற்கைக்கும், நமக்குமான இடைவெளியை அதிகரித்து விட்டோம்.
மரங்களை வெட்டி சாய்க்கும் போது, 'உச்' கொட்டுவோர் கூட, அவற்றை வளர்க்க துணியாதது, வேதனைக்கு பந்தல் போடுகிறது. இந்நிலையில், மரங்கள் இயற்கை கொடுத்த கொடை; அதை அழியாமல் பாதுகாப்போம் என்று சூளுரைத்து களமிறங்கியுள்ளனர், கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த, 'பசுமை தேசம்' அறக்கட்டளையினர்.
இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை தனிநபராக நட்டுள்ளார், இவ்வமைப்பின் நிறுவனர் ராஜேந்திரன். அறக்கட்டளை ஆரம்பித்ததிலிருந்து, நகரின் பல்வேறு பகுதிகளில், 3,000த்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். மேலும், மரங்களை நடவு செய்வதுடன், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால், மரக்கன்று நடப்பட்ட வீட்டை சேர்ந்தவர்களும், அதற்கு தினமும் நீர் ஊற்றி, வளர்த்து வருகின்றனர்.
மரங்களுக்கு நீர் ஊற்றுவதற்காகவே, 200 லிட்டர் நீர் தொட்டியை வடிவமைத்து, தன் இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று, நீர் ஊற்றி வருகிறார், ராஜேந்திரன்.
சமீபகாலமாக, கோவை - பொள்ளாச்சி சாலையில், விரிவாக்கப் பணிகளுக்காக, மரங்களை அகற்றி வருகின்றனர், நெடுஞ்சாலை துறையினர். அம்மரங்கள் அனைத்தையும் மற்றொரு இடத்தில் நட முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு மரங்களையாவது நட்டு வைத்தால், உயிர் பிழைக்கும் என்ற நம்பிக்கையில், களப்பணியாற்றி வருகின்றனர், இவ்வமைப்பினர்.
இக்குழுவினரின் செயல்பாடு, பலரால் பாராட்டு பெற்று வரும் நிலையில், 'ஏதோ... இயற்கைக்கு நம்மால் முடிந்த ஒரு சிறு உதவி...' என்று, கூறி, அடுத்த மரத்தை நட கிளம்பி விட்டனர், இவ்வமைப்பினர். இவர்களுக்கு சபாஷ் சொல்ல வேண்டுமா... தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 98422 75239.
ரா.வினோத்குமார்
