தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது, 29; அரசு பள்ளி ஆசிரியர். சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதுவும், பெண்களிடம் பேசுவது என்றாலே தயக்கம். திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடோ, தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடோ எனக்கு இல்லை. அதனால், இதுவரை ஏதேதோ காரணம் சொல்லி, திருமணத்தை மறுத்து வந்தேன். தற்போது, திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர் என் பெற்றோர். இதனால், என் அம்மா, அப்பாவிடம் கூட சரிவர பேசவில்லை. கடந்த, நான்கு மாதங்களாக ஊருக்கும் செல்லவில்லை. என் உறவினர்களிடமும் பேசவில்லை; பைத்தியம் பிடித்துவிடும் போல் உள்ளது.

எனக்கு எந்தக் குறையும் இல்லை; ஆனால், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாத நிலையில், திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க விரும்பவில்லை. இவ்விஷயத்தை எப்படி என் பெற்றோரிடம் கூறுவது என்று தெரியவில்லை.

எத்தனையோ பேருக்கு ஆலோசனை தெரிவித்த நீங்கள், எனக்கும் ஆலோசனை தருவீர்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வாழ்வா, சாவா என்ற மனநிலையில் இருக்கிறேன்.

* திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை, எவ்வாறு என் பெற்றோரிடம் தெரிவிப்பது?

* என்னைப் போன்று தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாத பெண், எனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைப்பாரா? (கணவனை இழந்தவர், மாற்றுத் திறனாளி)

* தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாத பெண்ணை மனைவியாக ஏற்று, வேறு முறையில் குழந்தை பெற எனக்கு சம்மதம். இதற்கு ஏற்ற வகையில் எனக்குப் பெண் கிடைக்குமா?

* தற்கொலை செய்து கொள்ளும் என் மனநிலைக்கு, தங்கள் பதில்.

தங்கள் ஆலோசனைக்காக மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

— இப்படிக்கு,

தங்கள் மகன்.


அன்புள்ள மகனுக்கு —

இயற்கை, உயிர்களை ஆண் - பெண் என, படைத்ததே வாலிபத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட்டு, தங்களின் சாயலை பூமியில் விட்டுச் செல்லத்தான். புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என, அனைத்துக்குமே இது பொதுவான விதி. உரிய இடைவெளியில் தாம்பத்யத்தில் ஈடுபடும் உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன.

உன்னிடம் எவ்வித குறைபாடும் இல்லை; ஆனாலும், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்?

'டீன் ஏஜி'ல் ஓரின சேர்க்கையாளனாக இருந்தாயோ! பெண்களை வெறுக்கும் அளவில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்ததா? தாயார் அல்லது மூத்த சகோதரியின் நடவடிக்கைகள் வெறுக்கத்தக்க அளவில் இருந்தனவா? பள்ளி தோழிகள் யாராவது, உன்னை நம்ப வைத்து கழுத்தறுத்தனரா? நீ அழகாய் இல்லை என்பதால் தாழ்வு மனப்பான்மை கொண்டாயா? பள்ளி, கல்லூரி நண்பர்கள் யாராவது பெண்களுக்கு எதிராக பிரசாரம் செய்தனரா? பழகிய தோழிகளின் துர்நடத்தை பார்த்து பெண்ணினமே மோசம் என, ஒதுங்கிக் கொண்டாயா?

மகனே... ஒரு பக்கம், திருமணமே வேண்டாம் என்கிறாய். இன்னொரு பக்கம் தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவரை மணந்து கொள்ள தயார் என்கிறாய். ஏனிந்த இரட்டை வேடம்? கணவனை இழந்தவருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தாம்பத்யத்தில் ஈடுபாடு இருக்காது என்று உனக்கு யார் சொன்னது?

தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாத பெண்ணை மணந்து, வேறு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை என்கிறாய். எதற்கு தலையை சுற்றி மூக்கைத் தொட வேண்டும்? உன் மனதில் வண்டி வண்டியாய் அறியாமையும், அசட்டு சித்தாந்தங்களும் நிரம்பி உள்ளன. அதனாலே உனக்குள் இத்தனை முரண்பாடுகள். முதலில் அவற்றில் இருந்து வெளியே வா. அத்துடன், உனக்கு ஏன் தற்கொலை எண்ணம் வர வேண்டும்? கொண்ட கொள்கையில் தெளிவான பிடிவாதத்துடன் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழலாமே!

நீ ஆண்மை அற்றவனோ, ஆண்மை குறைபாடு உள்ளவனோ இல்லை. நீ திருமணம் செய்யாமல் இருக்க நியாயமான காரணம் ஒன்று கூட இல்லை. கூச்ச சுபாவமே உண்மையான காரணம் என்றால், அதை கொஞ்சம் கொஞ்சமாக சக பெண்களிடம் பேசி, பழகி அக்குறையை நீக்கலாம். வேறு காரணம் இருப்பின், திருமணத்தில் உனக்குள்ள நிலைபாட்டை மறைக்காமல் பெற்றோரிடம் தெரிவி. அப்போது தான், அவர்கள் எது உன் திருமணத்திற்கு தடைக்கல்லாய் இருக்கிறதோ அதை அகற்றுவர்.

எக்குறைபாடும் இல்லை என்பது உண்மையானால், பெற்றோரின் திருப்திக்காகவாவது திருமணம் செய்து கொள். தாம்பத்ய வாழ்க்கையின் அர்த்தத்தை காண்பாய்; வாழ்க்கையில் முன்னேற உத்வேகம் கிடைக்கும். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது முழுமையான மனிதன் ஆவாய்.

வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us