PUBLISHED ON : ஜன 22, 2012

'கிரைண்டரை தொட்ட சிறுமி, ஷாக் அடித்து பலி, சுடு தண்ணீர் போடுவதற்காக, 'ஹீட்டர்' போட்ட போது, குடும்பத் தலைவியும், காப்பாற்ற போன கணவனும் பலி, இஸ்திரி போடும்போது, மின்சாரம் பாய்ந்து, வாலிபர் பலி!'
என்பது போன்ற, 'ஷாக்'அடிக்கும் செய்திகள், இப்போது அடிக்கடி கண்ணில் தென்படுகின்றன.
இதற்கு தற்போது தீர்வு கண்டுள்ளார் எஸ்.கோலப்பன்.
இவரது சொந்த ஊர் நாகர்கோவில். சென்னையில் வசிக்கும், 68 வயதாகும் கோலப்பன், எம்.இ., படித்து முடித்து, மின்சார வாரியத்தில் சேர்ந்தது முதல், தற்போது மின் சாதன தயாரிப்பு நிறுவன இணை நிர்வாக இயக்குனராக இருப்பது வரை, இவரது வாழ்க்கையே, மின்சாரத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.
மின்தாக்குதலால், அவ்வப்போது மக்கள் படும் துயரத்தை போக்க, நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு, இவர் கண்டுபிடித்துள்ள சாதனமே, 'வீனஸ் இ.எல்.வி.டி.,' இதுபற்றி, கோலப்பன் கூறியதாவது:
அந்தக் காலத்தில், வால்வு ரேடியோ வைத்திருந்தால் கூட, அதிலிருந்து ஒரு செப்பு கம்பி இணைப்பை கொண்டு வந்து, வீட்டின் வெளியே, ஒரு இரும்பு பைப்போடு இணைத்து வைத்திருப்பர், 'எர்த்'கொடுத்தல் என்ற இந்த முறையால், வால்வு ரேடியோவில், அசாதாரணமாக ஏற்படும் மின் தாக்குதல், மனிதர்களுக்கு பிரச்னை உண்டாக்காது.
ஆனால், அது அந்த காலமாகி விட்டது. இப்போது, வால்வு ரேடியோவை விட, பலமடங்கு மின்தாக்குதல் கொடுக்கும் சாதனங்கள் வந்த போதும், அந்த பழைய, 'எர்த்' கொடுக்கும் முறையை மறந்தே விட்டோம். மேலும், அடுக்குமாடி கலாசாரத்தில், அதெல்லாம் சாத்தியப்படாமல் போய் விட்டது.
பத்தாயிரம், பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கும், 'டிவி', பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதாகி விடக் கூடாது என்பதற்காக, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் விலை உள்ள, 'ஸ்டெபிலைசர்' சாதனம் வாங்குகிறோம், ஆனால், அதைவிட, பல மடங்கு மதிப்புமிக்க நமக்காகவும், நம் உறவுகளுக் காகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயங்குகிறோம்.
மின் கசிவு காரணமாக, சில சமயம் கிரைண்டரில் மாவு ஆட்டும் போது, பெரியவர்களுக்கு, விறு விறு என்று படுவது, குழந்தைகளை கொல்லக்கூடிய மின்சக்தி. இது பவுதிக பயங்கரம். தண்ணீர் ஒரு எளிய மின்கடத்தி என்ற பவுதிகத்தின் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ ஒரு வீட்டின், 'ஹீட்டரில்' ஏற்பட்ட மின்கசிவு, இன்னோரு வீட்டில் குளியலறையில் இருப்பவர்களைக் கூட பாதிக்கலாம்.
சரி, எல்லாரையும் போல நாமும் புலம்புவதைவிட, நம் படிப்பும், அனுபவமும் சமுதாயத்திற்கு பயன்படட்டும் என்ற எண்ணத்துடன் கண்டுபிடிக்கப்பட்டதே, இந்த வீனஸ் இ.எல்.வி.டி.,(எர்த் லூப் வோல்டேஜ் டிடக்டர்) பயன்படுத்தப்படும் மின்சாதனத்தின் சக்திக்கு ஏற்ப, பல வடிவங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகளைப் பொறுத்தவரை இரண்டு விதமான, இ.எல்.வி.டி.,கள் போதுமானது.
தற்போது நடைமுறையில் உள்ள, இ.எல்.சி.பி.,(எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) என்ற முறையைவிட, பல மடங்கு எங்களது, இ.எல்.வி.டி., சிறந்தது. ஐந்து வருட கியாரன்டியுடன் வருகிறது.வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், மிக்சி, அயர்ன் பாக்ஸ் போன்ற மின்சாதனங்களுக்கான, பிளக்கில், எளிதில் செருகிக் கொள்ளலாம், என்று கூறினார்.
தற்போது சென்னையில் உள்ள மின்சார கடைகளில், 'ஷாக் ப்ரிவெண்டர்' என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக மேலும் விவரங்கள் வேண்டுவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-2250 0280, 9566174607.
***
எம்.ஆர். ராஜமுக்தி
