
சபாஷ்!
சென்னையில் உள்ள என் நண்பரின் மகன் பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். வழக்கமான, பலுான் கட்டுதல், கேக் வெட்டுதல் மற்றும் பார்ட்டி என்று எதுவும் நடத்தப்படவில்லை. மாறாக, அன்று விடுமுறை தினமாக இருந்ததால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும் வேன் மூலம் வண்டலுார் வனவிலங்கு சரணாலயத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.
குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உறவினரின் மகனுக்கு சந்தோஷம். மற்ற குழந்தைகளுடன் நாள் பூராவும் இனிமையாக பொழுதை கழித்தான்.
சரணாலயத்தில், மிருகங்கள், பறவைகள் மற்றும் பாம்புகள் போன்ற உயிரினங்களைப் பற்றிய தகவல்களை கூறினார் நண்பர். சுற்றுலாவை சந்தோஷமாக கழித்ததுடன், நிறைய விஷயங்களை அறிந்து கொண்டனர், குழந்தைகள்.
— பெயர் வெளியிட விரும்பாத பெங்களூரு வாசகர்.
இப்படியும் ஒரு தண்டனை!
என் நண்பரை சந்திக்க, அவர் நடத்தும் பள்ளிக்கு சென்றிருந்தேன். பள்ளியில் விளையாட்டு மைதானம் மட்டுமின்றி, எங்கு திரும்பினாலும், பச்சை பசேலென்று மரங்களாக காட்சியளிப்பதை பார்த்து, சந்தோஷத்துடன், 'மரம் வளர்ப்பது உங்களுக்கு பிடித்தமான விஷயமோ...' என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு நண்பர், 'இந்த மரங்களெல்லாம் நான் நட்டு வளர்த்தது அல்ல; எங்கள் மாணவர்கள் நட்டு வளர்த்தவை...' என்றவர், 'எங்கள் பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அனாவசியமாக விடுமுறை எடுக்கக் கூடாது; மீறி எடுத்தால், பெற்றோருடன் வந்து மரக்கன்று ஒன்றை நட வேண்டும். விடுமுறை எடுப்போருக்கு, தண்டனை கொடுக்கும் சாக்கில், எங்கள் பள்ளியில் மரம் வளர்க்கிறோம்...' என்று இன்ப அதிர்ச்சி அளித்தார்.
அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், இந்த நல்ல யோசனையை பின்பற்றலாமே!
ஜெ.கண்ணன், சென்னை.
பின்பற்றலாமே...
கோடை காலம் ஆரம்பமாகி விட்டதால், நடை பயிற்சி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது, பசுமையான புல்வெளி, பூத்துக்குலுங்கும் மலர்களை பார்த்தபடியே செல்லும் போது, உடல் ஆரோக்கியம் கிடைப்பதுடன், மனதில் குதுாகலம் பொங்கும்.
மனதிற்கு குளிர்ச்சி தரும் புல்வெளியை காய விடலாமா... நடை பயிற்சி மேற்கொள்ளும் அன்பர்கள், கூடவே, தங்களால் முடிந்த அளவு தண்ணீரை பாட்டிலில் பிடித்துச் சென்று செடிகளுக்கு ஊற்றி வந்தால், பூங்காவின் பசுமை மாறாமல் இருக்குமே!
— ஆர்.சங்கர், சென்னை.

