PUBLISHED ON : பிப் 06, 2022

ஞானம் தரும் அனுபவம்!அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர், '10 ஆண்டுகளுக்கு முன், என் நண்பன் ஒருத்தன், 10 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கிட்டு போனான் சார். இதுநாள் வரைக்கும் கொண்டு வந்து தரலை. நம்பிக்கை துரோகி...' என்று கரித்துக் கொட்டினார்.ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாய் கொடுத்தேன்.'என்ன சார்... நான் புலம்பறது உங்களுக்கு கிண்டலா தெரியுதா...' என, கேட்டார்.'அவர், நம்பிக்கை துரோகி இல்லை. உங்களோட குருநாதர்...' என்றேன்.'குருநாதரா... எப்படி...' என்றார்.'அவர், உங்களை ஏமாற்றிப் போன இந்த, 10 ஆண்டுகளில், வேற யார் கடன் கேட்டிருந்தாலும், அவங்களை நம்பி, சொற்ப தொகையை கூட நீங்க குடுத்திருக்க மாட்டீங்க... இப்படியொரு அனுபவத்தையும் மேற்கொண்டு எந்த ஒரு பணத்தையும் உங்களை இழக்காம செய்தது யார்...'நீங்க சொல்ற அந்த நம்பிக்கை துரோகிதானே... வாழ்க்கையில் உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்த அந்த குருநாதருக்கு தட்சணையா, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததா நெனச்சுக்குங்க...' என்று, விளக்கம் தந்தேன்.'ஆமாங்க சார்... நீங்க சொல்றதும் சரிதான்...' என, சமாதானம் ஆனார். எந்த ஒரு அனுபவத்தையும், ஞானம் தரும் போதி மரமாக கருதும்போது, மனம் சாந்தி பெறும்.கே. ஜெகதீசன், கோவை.
வியர்வை சிந்தாமல் வீடு வாங்கிய மாப்பிள்ளை!மகள் திருமணமாகி சொந்த வீட்டில் தான் குடியேற வேண்டும் என்று ஆசைப்பட்டார், பெண்ணின் தந்தை. நகரின் முக்கியமான பகுதியில், 5ம் தளத்தில், இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்டை வாங்கி, பெண் மற்றும் மாப்பிள்ளையின் பெயரில் பதிவு செய்தார். திருமணத்தன்று, மணமக்களின் கைகளில் வீட்டு சாவி மற்றும் பத்திரம் கொடுக்கப்பட்டு விட்டது. திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.'வேலை முடிந்து, வீட்டிற்கு வரும்போது குடித்து விட்டுதான் வருகிறார்; பெண்கள் சகவாசம் வேறு. எனக்கு, அவருடன் குடும்பம் நடத்த அருவருப்பாக உள்ளது...' என்று, கண்ணை கசக்கினாள், மகள். நண்பர் எவ்வளவோ முயன்றும், மாப்பிள்ளை திருந்துவது போல் தெரியவில்லை. விவாகரத்து பெற முயற்சித்தனர். 'என் மனைவிக்கு, நான் தான் வீடு வாங்கி பரிசளித்தேன். எங்கள் இருவர் பெயரில் தான் வீடு உள்ளது. என் பெயருக்கு மாற்றி கொடுக்கச் சொல்லுங்கள்; அப்போதுதான் விவாகரத்திற்கு சம்மதிப்பேன்...' என்றார், மாப்பிள்ளை.ஆடி போய் விட்டனர், பெண் வீட்டார். ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கியதால், எந்த ஆதாரமும் இல்லை. 'எனக்கு வீடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்; என்னை விட்டால் போதும்...' என்று, மகள் கண்ணீர் வடிக்க. மாப்பிள்ளையின் பெயரில் வீட்டை மாற்றிய பிறகு தான், 'பரஸ்பரம் சம்மதம்...' என்று கையெழுத்துப் போட்டார், 'மாஜி' மாப்பிள்ளை. வீடு அல்லது மனை வாங்கி கொடுப்பதாக இருந்தால், பெண் வீட்டார் பெண் பெயரிலும்; மணமகன் வீட்டார் ஆண் பெயரிலும் மட்டுமே வீட்டை பதிவு செய்வது, இருவர் வாழ்க்கைக்கும் நல்லது. - ஜி.கல்பனா, சென்னை.
அதிர்ச்சி தந்த, தமிழ் பட்டா சான்றிதழ்!சமீபத்தில் குடும்ப சொத்து நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்தோம். சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்த பின், பட்டா மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்ற செய்தி மொபைலில் கிடைத்தது. அதை, 'இ - சேவை' மையத்திற்கு சென்று, பிரதி எடுக்கச் சென்றேன்.'தமிழில் வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமா...' என்று கேட்டவுடன், ஆங்கிலத்தில் எடுக்கக் கூறினேன். சான்றிதழை வாங்கி வாசித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.என் அப்பாவின் பெயரான கருப்பையா என்பது, 'யூட்ரஸ்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது.உடனே, 'தமிழில் பிரதி எடுத்துக் கொடுங்கள். எடுக்கும் முன் அதை கணினியில் நான் பார்க்கிறேன்...' என்றேன். தமிழில் கருப்பையா என்று சரியாக இருந்தது.அப்போது, பக்கத்தில் நின்றிருந்தவர், 'சார்... இதே கதை தான் எனக்கும். வி.என்.சுருளி எனும் பெயரை ஆங்கிலத்தில், வி.மை.ஸ்பைரல் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது...' என்றார்.மொழிபெயர்ப்பு என்றால், பெயர்களையும் மொழி பெயர்க்க வேண்டுமா என்ன? சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகம் இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யுமா?கே. ரத்தினமுத்து, மதுரை.
