PUBLISHED ON : ஏப் 03, 2022

புகழ்ச்சி எனும் மாமருந்து!
புதிதாக திருமணமான தன் பெண்ணுக்கு, வாடகைக்கு வீடு பார்த்து தரும்படி என்னிடம் கேட்டாள், தோழி.
கோபக்கார உறவினர் வீடு ஒன்று காலியாக இருந்தது, நினைவுக்கு வந்தது.அடிக்கடி கோபப்படும் அந்த உறவினருடன் எப்போதோ ஏற்பட்ட சிறு பிரச்னையில், பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.
'நான் அனுப்பியதாக சொல்லாமல், அவரிடம் வீடு கேட்டுப் பார்...' என்று கூறி அனுப்பினேன்.
சில நாட்களுக்கு பின், அந்த உறவினர் வலிய என்னைத் தேடி வந்து, பழைய சண்டையெல்லாம் மறந்து விடும்படி அன்பாக பேசினார். காரணம் புரியாமல், தோழியிடம் கேட்டேன்.
அவள் சிரித்தபடி, 'என் பெண்ணை நீங்க நல்லா பார்த்துக் கொள்வீர்கள். வேணுங்கிற உதவியெல்லாம் செய்வீங்கன்னு சொல்லி, என் தோழி தான் இங்கு அனுப்பியதாக, உன் பெயரை சொன்னேன்.
'அவர்களுக்கு ஒரே சந்தோஷம். 'அப்படியா...' என்று, உடனே வீடு கொடுத்து விட்டனர். எனக்கும் வேலை முடிந்தது; உங்கள் சண்டையும் தீர்ந்தது...' என்றாள்.
புகழ்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டால், எந்த பிளவுகளையும் இணைக்க முடியும்; விலகல்கள் விலகி, புரிதல்கள் ஏற்படும் என்று புரிந்து கொண்டேன். என் தோழியின் அணுகுமுறையையும் பாராட்டினேன்.
- என். விஜயலக்ஷ்மி, மதுரை.
கருத்தரிப்பு மையங்கள் - உஷார்!
ஹோட்டல், நகைக்கடை மற்றும் துணிக் கடை வரிசையில் தற்போது, கருதரிப்பு மையங்களும் இணைந்து கொண்டுள்ளன. தமிழகமெங்கும் சில கருதரிப்பு மையங்கள், புற்றீசல் போல் பரவி வருகின்றன.
கருதரிப்பு மையம் ஒன்றில், பெரும் பணம் இழந்து திரும்பிய என் தோழியின் கதை இது...
என் தோழிக்கு திருமணம் ஆகி, ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. சிகிச்சைக்காக, கருதரிப்பு மையம் ஒன்றை அணுகி இருக்கிறாள். கணவன் - மனைவி இருவருக்கும் பல்வேறு, பரிசோதனைகளை எடுத்த மருத்துவர், 'பெரிய பிரச்னை ஒன்றுமில்லை, நீங்கள் அடுத்த ஆண்டே உங்கள் குழந்தையை கொஞ்சலாம்...' என்று கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கறந்து, சிகிச்சை தொடங்கி உள்ளார்.
ஒரு சில மாதங்களிலேயே மாதவிடாய் தள்ளி போக, தோழியின் குடும்பம், சந்தோஷத்தில் மிதந்தது. அந்த சந்தோஷம், ஒரு சில வாரங்களில் கரைந்து போனது. தோழிக்கு, அடி வயிறு வலி ஏற்பட்டு உதிரப் போக்கு வர, அதே மருத்துவமனைக்கு ஓடி உள்ளார்.
'கரு சிதைவு ஏற்பட்டு விட்டது. கவலைப்படாதீங்க. மறுமுறை கவனமாய் இருங்க, பேபிய பார்த்துடலாம்...' என்று, மேலும் சில ஆயிரங்கள் கறந்துள்ளனர்.
மீண்டும் சிகிச்சை, மீண்டும் கரு சிதைவு. ஒரு கட்டத்தில், என் தோழிக்கு படபடப்பு கூடி, பல்சும் கிடுகிடுவென உயர, 'இங்கு பார்க்க முடியாது. உடனே, பெரிய ஆஸ்பத்திரிக்கு போங்க...' என, கைவிரித்து விட்டனர்.
என் தோழியிடம், பெரிய மருத்துவமனையில் சொன்ன விஷயம் அதிர்ச்சியானது.
'உங்களுக்கு, மாதவிடாய் தள்ளிப்போக வைக்கும் மருந்துகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதுதான் இப்போது, 'இன்பெக் ஷன்' ஆகியுள்ளது...' என்றிருக்கின்றனர்.
இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என் தோழி மீளவில்லை.
மாதவிடாய் நின்ற, 11ம் நாளிலிருந்து கரு முட்டையின் வளர்ச்சியை தெரிந்து கொள்ள, 'ஸ்கேன்' வசதிகள் வந்த பின்னும், ஏதோ ஒரு மருத்துவரின் பேச்சை மட்டும் நம்பி, உடலை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்று!
ஏ. சாந்தஷீலா, மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம்.
மாற்றி செய்வரா!
கோடை காலம் துவங்கி விட்டது. இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு, கம்பங் கூழ், கேழ்வரகு கூழ் என்று, வண்டிகளில் வைத்து விற்க துவங்கி விட்டனர். இயற்கை உணவு உடம்புக்கு நல்லது தான். அதை விற்கும் விதம் தான் சரியில்லை.
ஒரு சில இடங்களில் எவர்சில்வர் சொம்பு இரண்டு அல்லது நான்கு வைத்திருப்பர். அதில் கூழை, எடுத்துக் கொடுக்கின்றனர். அதை வாங்கி குடிப்பவர்கள், சில நேரம் வாய் வைத்து கூட குடிக்கின்றனர். இப்படி குடித்து முடித்தவர்கள், சொம்பை கொடுத்ததும், அதை, பேருக்கு தண்ணீரில் அலசுகின்றனர்.
பின்னர், அதே சொம்பில் இன்னொருவருக்கும் கொடுக்கின்றனர். இதனால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. இப்போது தான் பெரிய காகித கப்புகள் விற்பனைக்கு வந்திருக்கிறதே... அதில் ஊற்றிக் கொடுத்தால், குடித்துவிட்டு, துாக்கி எறிந்து விடலாமே... செய்வரா!
எஸ். பிரேமாவதி, சென்னை.
