PUBLISHED ON : நவ 19, 2023

ஊக்கமும், ஆர்வமும், வாழ்வை உயர்த்தும்!
கல்லுாரி முடித்த தோழியின் மகன், வேலை தேடிக் கொண்டிருந்தான். எனக்குத் தெரிந்த, 'கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் சென்டரில்' அவனுக்கு, வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
ஓராண்டு அங்கு பணிபுரிந்தான்.
தற்போது, 'வங்கிக் கடன் பெற்று, சொந்தமாக, 'சர்வீஸ் சென்டர்' துவங்கியுள்ளேன். திறப்பு விழாவிற்கு வந்து வாழ்த்துங்கள்...' என்று, என்னை அழைத்தான்.
'நீ, 'சேல்ஸ்மேன்' வேலை தானே பார்த்தாய். எப்படி, 'சர்வீஸ்' செய்யக் கற்றுக் கொண்டாய்?' என்றேன்.
'சேல்ஸ்மேன் வேலையில், எதையும் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. அதனால், பழுது பார்க்கும், 'சீனியர்'களிடம் என் ஆர்வத்தைக் கூறினேன். நான் கற்றுக் கொள்வதைப் பார்த்து, பழுது பார்ப்பதிலுள்ள பல்வேறு நுணுக்கங்களை, அக்கறையோடு சொல்லிக் கொடுத்தனர்.
'எனக்கு ஆதரவாக இருந்து, தொழிலைக் கற்றுக் கொள்ளச் செய்ததோடு, புதிதாக, 'சர்வீஸ் சென்டர்' துவங்க, வங்கிக் கடனுக்கும் ஏற்பாடு செய்தார், 'சர்வீஸ் சென்டர்' உரிமையாளர்...' என்றான்.
சொந்த சர்வீஸ் சென்டரில், அவனுக்கு கீழ் சிலர் பணிபுரிகின்றனர். இப்போது, நிறைவான வருமானத்துடன் நல்ல நிலையில் இருக்கிறான். ஊக்கமும், ஆர்வமும் இருந்தால், வாழ்வில் உயரலாம் என்பதற்கு, சிறந்த உதாரணமாக திகழ்கிறான்.
கல்வியை அறிவுக்காகவும், கைத்தொழில் ஒன்றை வாழ்வாதாரத்திற்காகவும் கைவசம் வைத்துக் கொண்டு, வேலையில்லா திண்டாட்டத்தை விரட்டுங்கள் இளைஞர்களே!
— வி.நர்மதா, உளுந்துார்பேட்டை.
தன்னார்வ இளைஞர்களின் சேவை!
விடுமுறையன்று, நண்பரை சந்தித்து, அவர் குடியிருப்பிலிருந்த பூங்காவில் பேசிக் கொண்டிருந்தோம்.
அருகே, சில இளைஞர்களும், இளைஞிகளும் இணைந்து, ஏதோ நாடகத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அதுபற்றி நண்பரிடம் கேட்டேன்.
'அனைவருமே, எங்கள், 'அபார்ட்மென்ட்'களில் வசிப்பவர்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சிலர், தங்களுக்குள், 'தன்னார்வ கலைக்குழு' ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
'கலைக்குழு சார்பில், மின் சிக்கனம், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமுதாய விழிப்புணர்வு நாடகம்; மது, புகை ஒழிப்பு; சிறார், பெண்கள் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை நாடகம் மற்றும் குழந்தைகளுக்கான நன்னெறி நாடகங்களில் நடிக்க பயிற்சி எடுக்கின்றனர்.
'உரிய அனுமதி பெற்று, விடுமுறை தினங்களில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் சென்று நாடகங்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வீதி நாடகங்களில் நடித்தும் சேவை செய்கின்றனர்...' என்றார்.
தன்னார்வ இளைஞர்களின் சேவை, வியக்க வைத்தது. அவர்களிடம், என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
பொ.தினேஷ்குமார், மறைமலை நகர், செங்கல்பட்டு.
ஒழுக்க பாடம்!
அண்மையில், தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். 6ம் வகுப்பு படிக்கும் மகளும், 3ம் வகுப்பு படிக்கும் மகனும், 'டியூஷன்' முடித்து வந்தவுடன் அவர்களுக்கு டிபன் கொடுத்தாள்.
பின், இரு குழந்தைகளையும் மாமியாரிடம் அனுப்பி வைத்தாள்.
அன்று பள்ளியில் நடந்தவை மற்றும் விளையாட்டு என, எல்லாவற்றையும் பாட்டியுடன் பகிர்ந்து, பல சந்தேகங்களையும் கேட்டு மகிழ்ந்தனர்.
ஆச்சரியமாக பார்த்த என் பார்வை மொழியை புரிந்து கொண்ட தோழி, 'தினமும் அவர்கள், 'டியூஷன்' முடித்து வந்தவுடன், கட்டாயம் அரை மணி நேரமாவது மாமியாருடன் பேச வைப்பேன். இதன் மூலம் ஒழுக்கம், நல்ல பழக்கங்களை பாட்டியிடமிருந்து கற்றுக் கொள்வர்...' என்றாள்.
சில வீடுகளில், தன் பிள்ளைகளை மாமியார் பக்கமே நெருங்க விட மாட்டார்கள். தோழியின் நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் வீட்டிலும் இதை செயல்படுத்தலாமே!
-ஏ.ஆர். லெட்சுமி, தென்காசி.
