PUBLISHED ON : ஏப் 24, 2022

நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னன் வீரபிரதாபனுக்கு, ஒரு மகன் பிறந்தான். வித்யாபதி என்று பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன், சரஸ்வதி அருளால் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான். மகனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்து, அரண்மனை ஜோசியரை அழைத்தான், மன்னன்.
ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், 'மன்னா... மன்னிக்க வேண்டும். தங்கள் மகன் வித்யாபதிக்கு பட்டம் சூட்டி பயனில்லை. ஏனெனில், அவர் அற்பாயுளே வாழ்வார்...' என, தெரிவித்தார்.
அதிர்ச்சியில் ஆழ்ந்தான், வீரபிரதாபன்.
ஆனால், சிறிதும் கலங்காமல், 'தந்தையே... இதற்கு போய் ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத்தானே போகிறோம். எனக்கு முடிவு நாள் முந்தி வருகிறது. இதை பெரிது படுத்தாதீர்கள்...' என்றான், வித்யாபதி.
வீரபிரதாபனால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
'தந்தையே... உங்கள் கண்ணெதிரில் இருப்பதால்தானே கவலைப்படுகிறீர்கள். நான் இப்போதே எங்காவது போய் விடுகிறேன். உயிரோடு எங்காவது திரிந்து கொண்டிருப்பேனோ என்ற சந்தேகத்தில், நான் என்றாவது வருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பீர்கள். நான் கிளம்புகிறேன்...' என்றான்.
தன் கண் முன்னால் மகன் சாவதை விட, இந்த யோசனை சரியாக படவே, அரை மனதுடன் சம்மதித்தான், மன்னன்.
சில பணியாளர்கள் மற்றும் செலவுக்கு பெரும் பணத்துடன் நாட்டை விட்டுப் புறப்பட்டான், வித்யாபதி.
ஒரு ஊரை சென்றடைந்தவன், அங்குள்ள குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியராக கல்வி மற்றும் கலைகளை போதித்து வந்தான். ஏழைகளுக்கு தானம் அளித்து, மகிழ்ந்தான்.
வித்யாபதியின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று, சரஸ்வதி பூஜை என்பதால், வீணை இசைத்து, மனம் உருகி, தேவியை பாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, வித்யாபதியின் உயிரை பறிக்க பாசக் கயிற்றுடன் வந்தனர், எம துாதர்கள். வித்யாபதியின் வீணை இசை கேட்டு, மெய் மறந்து நின்றதால், அவனது உயிரை பறிக்கும் நேரம் கடந்து, செய்வதறியாது திரும்பினர்.
அப்போது, அங்கு தோன்றிய சரஸ்வதி, 'வித்யாபதி... நீ, பலருக்கு கல்வி தானம் செய்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டாய். அதுமட்டுமல்ல, மனம் ஒன்றி இறைவனை நினைத்து, வீணை மீட்டினாய்.
'தானமே உலகத்தில் சிறந்தது. இந்த குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்ததால், உனக்கு ஜாதகத்தில் ஆயுளுக்கு நேர்ந்த தோஷம் அகன்று விட்டது. அதுமட்டுமில்லாமல், உன் வீணை இசை, எம துாதர்களையும் கட்டிப்போட்டு விட்டது. இனி, நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெறுவாய்...' என்று, வாழ்த்தினாள்.
சரஸ்வதியின் அருள் பெற்ற வித்யாபதி, நாடு திரும்பினான்.
அவனை கண்ட தந்தை மகிழ்ந்தார். அவனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.
பிறருக்கு செய்யும் தானத்தால் வரும் புண்ணியத்தால், நமது ஆயுள் அதிகரிக்கும் என்பது இதிலிருந்து புரிகிறது அல்லவா!
ஆ. சி. கோவிந்தராஜன்
