PUBLISHED ON : நவ 04, 2018

துலா மாதம் என்று போற்றப்படும் ஐப்பசி மாதத்தில் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும். தட்சிண கங்கை என்று புகழப்படும் காவிரி நதியில், ஐப்பசியில் நீராடுவது, துலா ஸ்நானம் எனப்படுகிறது.
அவ்வாறு செய்தால், நம் பாவங்கள் தொலைந்து போவதுடன், அழகு, ஆயுள், உடல்நலம், செல்வ செழிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கூடும் என்று, 'காவிரி மகாத்மியம்' நுால் கூறுகிறது.
ஐப்பசியில், ஸ்ரீரங்கம் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதி படித்துறையிலிருந்து, வேத கோஷங்கள் முழங்க, புனித தீர்த்தத்தை, தங்க குடங்களில் யானை மீது எடுத்து வந்து, ஸ்ரீரங்க நாதருக்கு அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில், வடக்கில் உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிேஷகம் செய்வது வழக்கம்
குஜராத்தில், தீபாவளி அன்று, ஸ்ரீலட்சுமி குபேர பூஜை செய்வர். அன்று தான் அவர்களுக்கு புது வருட பிறப்பு. வணிகர்கள் புது கணக்கை துவங்குவர். காரணம்: சூரியன், துலா ராசியில் பிரவேசிக்கும் புனித நாள் அது. துலா ராசியின் சின்னம், தராசு. ஐப்பசி மாதத்தில் ராசியான நாளாக தீபாவளியை கருதுகின்றனர்.