
எம்.லலிதா, சென்னை: சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த, 'அடையார் பார்க்' ஹோட்டலை இடித்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகின்றனரே?
ஆமாம். இதைப் பயன் படுத்தியவர்களுக்கு வருத்தம் தான்! தற்போது கட்டப்படும் அடுக்குமாடியில், ஒரு குடியிருப்பின் விலை, 9 கோடி ரூபாய்!
நா.ஆமினத்து, மதுரை: லஞ்சம் வாங்குபவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; லஞ்சம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையே?
எடுக்கப்பட வேண்டும்!
* வெ.சென்னப்பன், உதகை: மற்ற நாட்களை விட, ஞாயிற்றுக் கிழமை மட்டும், நம், 'தினமலர்' நாளிதழின் விற்பனை, அதிகமாக இருக்க என்ன காரணம்?
'வாரமலர்' இதழை படிக்கும் முதலாளிகள் தான்!
* எஸ்.சக்ரபாணி, மதுரை: ஒரு மனிதன், 'போதும்' என்று சொல்ல வேண்டியது எதை?
'போதும்' என்று சொல்ல வேண்டியது, அவன் தற்போது அனுபவித்து வரும் வசதியை மட்டும் தான்! 'போதாது' என்று சொல்ல வேண்டியது வளர்ச்சியை!
மு.ஆதினி, சேலம்: பிடித்த பாடல்களை, திரும்பத் திரும்ப கேட்பதுண்டா?
உண்டே! எம்.ஜி.ஆர்., பாடல்களைக் கேட்பேன்; அவ்வப்போது பல ஆங்கிலப் பாடல்களையும்!
மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி: தாங்கள் யார் என்று தெரியாமல், தங்களைப் பற்றி தங்களிடமே யாராவது பேசியதுண்டா?
உண்டு! முனியாண்டி என அறிமுகப்படுத்திக் கொள்வேன்; அந்துமணி பற்றி என்னிடம் சொல்வர்!
என்.ஜாக்ரினா, மதுரை: அரசின் மிக முக்கிய பொறுப்புகளை வகிக்க விரும்பும் அதிகாரிகள், அபார திறமைமிக்கவர்களாக இருக்க வேண்டுமா அல்லது ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்க வேண்டுமா?
அபார திறமைமிக்கவர்களாக இருந்தால், 'எல்லாமே' சாத்தியம்!