
எம்.மொவன்குட்டி, கோவை: அந்துமணியாரே... நீங்கள் ஹிந்தி கற்று கொண்டது, கல்லுாரி பருவத்திலா... இல்லை, சமீபத்தில் தானா?
பள்ளியில் படிக்கும் போதே!
ரா.சுப்ரமணியன், மதுரை: சென்ற வாரம் டிராபிக் போலீஸ் அனைவரும் நல்ல நண்பர்கள் என்றும், அனைவரையும், 'கவனித்து' விடுவதாகவும் கூறியிருந்தீர்கள். என்ன மாதிரி, 'கவனிப்பு' சார்?
என் சட்டையின் இடது பக்க பையிலிருந்து தான்!
* கே.நாகராஜன், ராமநாதபுரம்: வாசகர்களிடமிருந்து கேள்விகளே வராவிட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
அப்படி ஒரு நிலை வந்ததில்லை. தினமும், 150 கார்டுகள்; உங்களைப் போல, 'இ-மெயில்' அனுப்புபவர்களின் கேள்விகள் 100 மற்றும் 'இன்லேண்டு' கடிதங்கள் என, 300 கேள்விகள் வருகின்றன. பொறுப்பாசிரியர், வாரம், வெறும் எட்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத இடம் கொடுத்திருக்கிறார்.
பூவை சுபாவாணன், கோவை: மதிய உணவிற்குப் பிறகு, சிறிது நேரம் உறங்கும் பழக்கம் உண்டா?
மதியம் 1:30 மணி முதல், 3:00 மணி வரை, துாங்கி விடுவேன்!
வி.ராஜா, சென்னை: வெறும், 50 பைசா போஸ்ட் கார்டில் கேட்கப்படும் கேள்விகளை ஏற்றுக் கொள்வீர்களா?
நீங்கள் தானே முதலாளிகள்! 50 பைசா கார்டானாலும், முதலாளிகளுக்கு பதில் அளிக்க வேண்டுமல்லவா!
* டி.ஜெயசிங், கோவை: தமிழகத்தில், 'எங்களுக்கு ஓட்டு போட்டால், மதுவை ஒழிப்போம்...' என்று, எந்தக் கட்சியும் ஏன் கூறுவதில்லை?
அவர்களது தனிப்பட்ட கஜானா நிரம்பாதே!
வி.பிருந்தா, சென்னை:ஒரு காரை, எவ்வளவு காலம் பயன்படுத்துவீர்கள்?
ஒரு லட்சம் கி.மீ., ஓடும் வரை!
எஸ்.சரவணன், நெல்லை:யாரை சிறந்த தந்தை எனக் கூறலாம்?
அளவற்ற செல்வத்தை சம்பாதித்து, தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும், தந்தையை விட, சிக்கனத்தோடும், எளிமையோடும் வாழும் வழியை பிள்ளைகளுக்கு கற்பிக்கும் தந்தை தான், சிறந்த தந்தை என்று கூறலாம்!