
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'மது ஒழிப்பில், நாங்கள் பிஎச்.டி., திருமா வெறும் எல்.கே.ஜி., தான்...' என, பா.ம.க., அன்புமணி கூறி இருக்கிறாரே...
எல்.கே.ஜி.,யோ, பிஎச்.டி.,யோ, டாக்டரேட்டோ... ஒன்றும் பலனளிக்காது; மது ஒழிப்பும் நடக்கவே நடக்காது!
* ச.ஷகீலா பானு, துாத்துக்குடி: முந்தைய முதல்வர் ஜெயலலிதா, வெளிநாட்டு முதலீட்டாளர்களை, தமிழகத்துக்கு நேரில் வரவழைத்தார்; ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்துள்ளாரே?
அவர், தன் மனைவியுடன் சென்று முதலீடுகள் செய்து விட்டு வந்திருக்கிறார்!
* கே.ஆர்.ஜெயலட்சுமி, சென்னை: 'அரசியலில் ஓய்வு கிடையாது...' என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது சரியா?
கிடையாது; அவர்களாகவே பதவி விலக வேண்டும் அல்லது ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்!
தி.மகராஜன், சின்னமனுார், தேனி மாவட்டம்: வெளிநாடுகளுக்குச் சென்றால், நம் நாட்டைப் பற்றி குறை சொல்வதையே, வாடிக்கையாக வைத்திருக்கிறாரே, காங்., ராகுல்?
அவரே வெளிநாட்டுக்காரர் தானே!
இ.ராஜு நரசிம்மன், சென்னை: எனக்கு வயது, 50க்கும் மேல்! ஹிந்தி மொழி கற்றுக் கொள்ள விரும்புகிறேன்; முயற்சிக்கலாமா?
தாராளமாக! எதைக் கற்றுக் கொள்ளவும் வயது வரம்பு கிடையாதே, ராஜு!
ஆ.வீரப்பன், திருச்சி: மேடையில் பேசும் சிலர், உளறிக் கொட்டுவது எதனால்?
மூளையில் சரக்கு ஏதும் இல்லாமல், 'சரக்கு' உள்ளே போவதால்!
க.ராமநாதன், நாலாட்டின் புதுார், துாத்துக்குடி: அந்துமணிக்கு, இந்தியன் என்று சொல்வதில் விருப்பமா அல்லது தமிழன் என்று சொல்வதில் விருப்பமா?
மனிதன் என்று சொல்வதில்!
எஸ்.செல்ல பாண்டியன், பெங்களூரு:எல்லா வகையான கார்களையும், உங்களுக்கு ஓட்டத் தெரியுமா, அந்துமணி?
எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அம்பாசிடர் காரை ஓட்ட ஆரம்பித்தேன்...
வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம், தஞ்சை: தமிழகத்தில், எந்த அருவியில் குளிப்பது உங்களுக்குப் பிடிக்கும்?
குற்றாலத்தில், பழத்தோட்ட அருவிக்கு மேல், ஒரு ஜமீன்தாரின் பண்ணை உள்ளது. அங்குள்ள அருவியில், 20 அடிக்கு மேலிருந்து விழும் தண்ணீரில் முதுகைக் காட்டிக் குளிப்பது, தனி சுகம்!