
வி.பிருந்தா, சென்னை: தனியாக கார் ஓட்ட பிடிக்குமா?
தனியாக, தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை கேட்டுக் கொண்டே, பல ஊர்களுக்கும் கார் ஓட்டிச் செல்வேன்!
கோவி.திருநாயகம், கடலுார்: அந்துமணி பதில்கள் பெறுவதற்கு கேள்விகளை இரவெல்லாம் சிந்தித்தே துாக்கம் போகிறதே... இதற்கு ஒரு விடியல் உண்டா?
இதோ விடிந்து விட்டது; துாக்கத்தை தொலைக்காதீர்கள்!
* கே.சுரேஷ், சென்னை: லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது, தற்காலிக பணிநீக்கம் செய்யாமல், பணி இடமாறுதல் செய்தால், அங்கும் லஞ்சம் வாங்காமல் இருப்பரா?
நீட்டிய கை மடங்காது!
டி.ஜெயசிங், கோவை: கள்ளுக்கடை திறந்தால், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் தானே?
கள்ளுக்கடைகளில் விலை குறைவாக இருக்கும். அதனால், கள்ளச்சாராயம் ஒழிந்து விடாது!
டி.பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது, அரசியல் கட்சியினரை இழிவுபடுத்துவதாக உள்ளது...' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளாரே...
இவர்கள் எல்லாம் ஆட்சியும் அமைக்க மாட்டார்கள்; பதவியும் கிடைக்காது. அதனால் தான் அப்படி கூறுகின்றனர்.
மு.நாகூர், ராமநாதபுரம்: 'பா.ஜ., அல்லாத பிற மாநில அரசுகளை கவிழ்க்க, ஆடுகளை விலை கொடுத்து வாங்குவது போல், பிரதமர் மோடி, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குகிறார்...' என, காங்., தலைவர், மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளாரே...
அப்படி எனில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஆடுகள் என்கிறாரா, மல்லிகார்ஜுன கார்கே?
* எஸ்.விஜய், சென்னை: 'மழைநீரால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமே உதவி செய்கின்றன...' என்கிறாரே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
அவர்கள் தானே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் செய்யாமல் வேறு யார் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்?