
சுதாராணி, கோவை: பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பிவிட்டு, வெளியிடுவர் எனக் கருதி, எத்தனை மாதம் காத்திருந்த பின், வேறு பத்திரிகைக்கு அனுப்புவது சரியானதாக இருக்கும்?
சிறுகதையாக இருந்தால், ஆறு மாதங்கள் காத்திருங்கள்; மற்ற பிரிவுகளுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருங்கள். அதற்குள் வெளியாகவில்லை எனில், வேறு பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள்!
********
சாரதா சுப்ரமணியன், சென்னை: சில வெளிநாடுகளில், மீண்டும் மிதிவண்டியின் பயன்பாடு அதிகரிக்கக் காரணம் என்ன?
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், உடல்நலம் மீதான அக்கறையுமே காரணம்!
********
ஜி.அர்ஜுனன், திருப்பூர்: முன்னாள், இன்னாள் முதல்வர்கள், 'ரைமிங்'கில் மோதி கொள்வது நன்றாக இருக்கிறதா?
அரசியல் நாகரிகம் என்பதே இல்லாமல் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எதையும் பேசலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
அரசியல் கட்சிகள் இந்த போக்கை தவிர்த்து, நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதை பற்றி யோசிக்கலாம்!
**********
* எம்.கல்லுாரி ராமன், ராமநாதபுரம்: 'ஊழல்வாதிகள், இனி தேர்தலில் போட்டியிடக் கூடாது...' என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா?
இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், ஒருவர் கூட தேர்தலில் போட்டியிட முடியாதே... யாரை வைத்து தேர்தல் நடத்துவது?
********
எம்.சம்சு, துாத்துக்குடி: 'கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், ஸ்டாலின் என்றால் சாதனை என சொல்லியிருப்பார்...' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளாரே...
சுயபுகழ்ச்சியில் கைதேர்ந்தவர் ஆகிவிட்டார், ஸ்டாலின். வேறு யாரும் புகழவில்லையே... அவரது அமைச்சர்களுக்கு கட்சியிலும், தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ளவே,
*********
* எம்.ருக்குமணி, கள்ளக்குறிச்சி: எல்லா அரசியல்வாதிகளும் பொதுமக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக பார்ப்பது சரியா?
சிலர், அரசியல்வாதிகளை, பணம் காய்ச்சி மரமாக நினைப்பதால், அவர்கள், மக்களை, ஓட்டு போடும் இயந்திரமாக பார்க்கின்றனர். மக்கள் மாற வேண்டும்!
*********
என்.ஆசைதம்பி, ஆவடி: கவிதை எழுதுகிறவர்களின் மொபைல் எண்ணையும் போட ஆரம்பித்திருப்பது ஏன்?
படைப்பாளிகளுக்கான பாராட்டுக்கள், அவர்களை நேரிடையாக சென்றடையுமே, அவர்கள் மிகவும் சந்தோஷமடைவரே, அதனால் தான்!
**********
எம்.சுப்பையா, கோவை: பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கும் போது, வாசகர்கள் உங்களை அடையாளம் கண்டு, ஆட்டோகிராப் கேட்டதுண்டா?
நான் தான் பொது நிகழ்வுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுகிறேனே!

