தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 20, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.அர்ஜுனன், அவிநாசி, திருப்பூர்: புனுகு பூனைகளுக்கும், காபி கொட்டைக்கும் என்ன சம்பந்தம்?

புனுகு பூனைகள், காபி பழங்களை விழுங்குகின்றன. செரிமானமாகாத கொட்டைகள், கழிவுகளுடன் வெளியேறி விடுகின்றன.

வெளிநாடுகளில் இந்த கொட்டைகளுக்கு அதிக மவுசு. இதில் தயாராகும் காபி பொடி, கிலோ 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது!

***********



கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: பிரான்ஸ் நாட்டின் சியன் நதியைப் போல, சென்னையின் கூவம் நதியை துாய்மைப்படுத்த முடியாதா?


கட்டாயமாக முடியும். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மனது வைக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே, 'கூவம் மணக்கிறது' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது; இத்தனை ஆண்டு காலம் ஆகியும் மணக்கவில்லை!

********

எஸ்.இந்திராணி, புவனகிரி: 'ஏழை மாணவர் விடுதிகள் இனி, 'சமூக நீதி விடுதிகள்' என்றழைக்கப்படும்...' என, அறிவித்துள்ளாரே, முதல்வர் ஸ்டாலின்?

அதெப்படி... இப்படி பெயர் மாற்றப்பட்டு விட்டால், விடுதிகளின் உட்கட்டமைப்பும், உணவும் தரம் உயர்ந்து விடுமோ? அவ்விஷயங்களில் எல்லாம் நீதி கிடைக்காமல், எந்த சமூக நீதியும் பயனளிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

********

வி.தேவசகாயம், சென்னை: 'தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை, யாராலும் முழுமையாக நிறைவேற்ற முடியாது...' என, திருமாவளவன் சொல்வது பற்றி உங்கள் கருத்து...



அவரை நம்பி ஆட்சியைக் கொடுத்தால் என்னாகும் என, யோசிக்கத் தோன்றுகிறது.

'நான் தான், வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது என, தேர்தலுக்கு முன்பே கூறிவிட்டேனே...' என, 'எஸ்கேப்' ஆகி விடுவார்; அவதி, பொதுமக்களுக்கு தான்!

************

* வி.பார்த்தசாரதி, சென்னை: 'இந்த தேர்தலில் அதிகம் சீட் கேட்போம்...' எனச் சொல்லும் கூட்டணி கட்சிகள், கடைசியில், தி.மு.க., கொடுக்கும் சீட்டைத் தானே வாங்கிக் கொள்ளும்?

சீட் கேட்கும் உரிமை, எல்லா கட்சிகளுக்கும் உண்டு. அதை நேரடியாக கேட்டால், தி.மு.க., 'வேறு விதமாக' நடந்து கொள்ளும் என்பதால், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பேசுவது போல், 'பாவ்லா'வெல்லாம் காட்டப்படுகிறது.

ஆனால், அது ஒன்றுமே பலிக்காது; இறுதியில், தி.மு.க., கொடுக்கும் சீட்டை, சத்தமே இல்லாமல் வாங்கிக் கொண்டு, கை கோர்த்து, வாயெல்லாம் பல் தெரிய சிரித்து, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்து விடுவர்!

************

எம்.முகுந்த், கோவை:பகலில் குட்டித் துாக்கம் போடலாமா?

பகலில் அரை மணி நேரம், குட்டித் துாக்கம் போட்டால், அதன் பின், ஐந்து மணி நேரம் வேலை செய்யும் திறன் அதிகரிக்கிறதாம்.

ஜப்பான் போன்ற நாடுகளில், 'சியஸ்டா' என, எல்லா அலுவலகங்களிலும் குட்டித் துாக்கத்திற்கு அனுமதியும் உண்டு; அதற்கான தனியறையும் உண்டு.

நீங்களும் அதே போல், ஐந்து மணி நேரம் உழைக்கத் தயாராக இருந்தால், குட்டித் துாக்கம் போடலாம்!

************

கமலக்கண்ணன், சித்தோடு: சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத எனக்கு, தாழ்வு மனப்பான்மையாக இருக்கிறது... என்ன செய்யலாம்?

நாம் தைரியமாக பேச பேசத் தான், எந்த மொழியும் நமக்கு வசப்படும். அதனால், தைரியமாக பேசுங்கள். மற்றவர்களின் கிண்டலைக் கண்டு மனம் வருந்தாதீர்கள்!

இந்த பதிலை எழுதிவிட்டு, லென்ஸ் மாமாவிடம் காட்டினேன்; 'கடகட'வென சிரித்தவர், 'உற்சாக பானம் சாப்பிட்டால் சரளமாக ஆங்கிலம் பேச வரும்...' என்றார்!

********

* நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: விஜய் கட்சி ஆலோசகர் பதவியில் இருந்து, பிரசாந்த் கிஷோர் விலகி இருப்பது பற்றி...

விஜய் கட்சியின் பொறுப்பாளர்களாக இருப்பவர் பலரின் ஆதிக்கம் தான் காரணம். அவர்கள், விஜயை மற்றவர்கள் அணுக அனுமதிப்பதில்லை; விஜயிடம் உண்மை நிலவரங்களை கூறுவதுமில்லை!

***********

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்: 'சம்பளம் கூட்டித் தரவில்லை' என்கிறீர்கள்... உங்களுக்கு பொறுப்பாசிரியர் வாங்கிக் கொடுத்த நான்கு கார்களுக்கும், பெட்ரோல் போட்டு எப்படி சமாளிக்கிறீர்கள்?

பொறுப்பாசிரியர், தன் கார்களுக்கு பெட்ரோல் போடும், 'பங்க்'கிலேயே எனக்கு கொடுத்த கார்களுக்கும் போட்டுக் கொள்ளச் சொல்வார்.

அங்கு, 'பில்'லில் நான் கையெழுத்து மட்டும் போட்டால் போதும்; பொறுப்பாசிரியரே அவ்வப்போது அதை, 'செட்டில்' செய்து விடுவார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us