PUBLISHED ON : ஏப் 20, 2025

ரஜினியை அணுகிய, லைகா நிறுவனம்!
தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், கவுரவ வேடத்தில் ரஜினி நடித்த, லால் சலாம் மற்றும் வேட்டையன் போன்ற படங்களை, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால், இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக திருப்தியை கொடுக்கவில்லை.
இந்நிலையில், ரஜினி மூலம் தாங்கள் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் அவரை வைத்து, மெகா படத்தை தயாரிக்க முன்னணி இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறது, லைகா நிறுவனம்.
தான் நடித்த படங்களால் இழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்து, அடுத்த படத்திற்கு உடனே, 'கால்ஷீட்' தருவதாக உறுதி அளித்துள்ளார், ரஜினி.
சினிமா பொன்னையா
துஷாரா விஜயனை, 'பிரைன்வாஷ்' செய்த, இயக்குனர்!
சார்பட்டா பரம்பரை, வேட்டையன் மற்றும் வீர தீர சூரன் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை துஷாரா விஜயன். வழக்கமான, 'ஹீரோயின்'களை போல் அல்லாமல், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள தீவிரம் காட்டினார்.
இந்நேரத்தில், 'உங்கள் உடல்கட்டு கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களுக்குத் தான் பொருத்தமாக இருக்கும்...' என, இயக்குனர் ஒருவர் கூறினார். இதையடுத்து, பிடிவாதத்தை தளர்த்தி, கவர்ச்சி, 'ரூட்'டுக்கு திரும்பியுள்ளார், துஷாரா விஜயன். ஆர்யா, விக்ரமை தொடர்ந்து மேல்தட்டு, 'ஹீரோ'களின் படங்களுக்காக, 'வெயிட்டிங்'கில் இருக்கிறார். இனிமேல், துஷாராவை ரசிகர்கள், 'கிளாமர் குயின்' ஆக கண்டுகளிக்கலாம்.
எலீசா
திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆரம்பித்த, சோபிதா!
மணிரத்னம் இயக்கிய, பொன்னியின் செல்வன் படத்தின், இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தவர், தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா. கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்துள்ளார்.
கணவர், நாக சைதன்யா சினிமாவில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால், தமிழில், ஆர்யா நடிக்கும், வேட்டுவம் என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் சோபிதா, அடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்.
— எலீசா
மஞ்சிமா மோகனை புலம்பவிட்ட, உடல் எடை!
அச்சம் என்பது மடமையடா, சத்ரியன் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார், மலையாள நடிகை மஞ்சிமா மோகன். நடிகர் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டதை அடுத்து, 'சுழல் -2' என்ற, 'வெப் சீரியலில்' நடித்தவர், அடுத்து சினிமாவிலும் நடிக்க, தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால், தீவிர உணவு கட்டுப்பாட்டுடன், தினமும் மணிக்கணக்கில், 'ஜிம்'மில், 'ஒர்க் அவுட்' செய்தபோதும், உடல் எடை குறையவில்லை என, புலம்பி தள்ளுகிறார், மஞ்சிமா மோகன். திருமணத்திற்கு பிறகும் எடை குறைத்து, 'ஸ்லிம்'மாக காட்சி கொடுக்கும் சில நடிகையரிடம் அது குறித்த, 'டிப்ஸ்' கேட்டு வருகிறார்.
—எலீசா
கார்த்தி போட்ட, 'கண்டிஷன்!'
ஏற்கனவே, சூர்யா நடித்த, கங்குவா படத்தில், கவுரவ வேடத்தில் நடித்திருந்த கார்த்தி, தற்போது தெலுங்கில், நடிகர் நானி நடித்து வரும், ஹிட்-3 என்ற படத்திலும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
ஆனால், அப்படி தன்னிடம் அப்பட நிறுவனம், 'கால்ஷீட்' கேட்டு வந்தபோது, 'அடுத்து என்னை வைத்து, மெகா படத்தை தயாரிக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால், நானி நடிக்கும் படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்கிறேன்...' என்ற ஒப்பந்த அடிப்படையில் நடித்து கொடுத்துள்ளார், கார்த்தி.
சினிமா பொன்னையா
கருப்பு பூனை...
பிரமாண்டத்தின் இயக்கத்தில், உலக நடிகர் நடித்த, 'சூப்பர் ஹிட்' படத்தின், இரண்டாம் பாகம், 'அட்டர் பிளாப்' ஆகிவிட்டதால், அதன் மூன்றாம் பாகத்தில் நடிப்பதில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார், உலக நடிகர்.
இன்னும், 20 நாட்கள் மட்டுமே அப்படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால், படக்குழு அவரிடம், 'கால்ஷீட்' கேட்டு துரத்தி வருகிறது. ஆனால், உலக நடிகரோ, அப்படத்தில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லாததால் பிடிகொடுக்காமல், இழுத்தடித்து வருகிறார். இதன் காரணமாக உலக நடிகர் மீது அப்பட நிறுவனமும், பிரமாண்ட இயக்குனரும் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.
சினி துளிகள்!
மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்துள்ள, தக்லைப் படம், வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
அவ்ளோதான்!
