PUBLISHED ON : செப் 08, 2024

செப்., 11 - பாரதியார் நினைவு தினம்!
* முண்டாசு கவிஞனே
உன் மூளையிலிருந்து வெளிப்பட்ட
ஒவ்வொரு கருத்தும்
எங்கள் நாடி நரம்புகளில்
புரட்சி உணர்ச்சிகளை
பெருக்கெடுத்து ஓட வைத்தது!
* பாட்டுக்கொரு புலவனே
நீ வார்த்தைகளாய் உதிர்த்த
ஒவ்வொரு கட்டளையும்
நாட்டின் நலன் சார்ந்தல்லவா
மக்கள் மனங்களில் எல்லாம்
தீயை மூட்டியது!
* மகத்தான மகாகவியே
உன் பார்வைகள் உமிழ்ந்திட்ட
அக்கினிப் பிழம்பு தானே
அந்நியரை அச்சமூட்டி
விடுதலைப் போருக்கு புறப்பட
வீரர்களைத் துாண்டியது!
* கோபக்கார காளிதாசனே
நீ வரிகளாய் வார்த்தெடுத்த
படைப்புகள் அத்தனையிலும்
சுயநலத்தை துறந்து
பொதுநலத்தை மட்டுமல்லவா
நிரப்பி வைத்தாய்!
* பைந்தமிழ் தேர்ப்பாகனே
எட்டயபுரத்தில் போர்க்குரல் எழுப்பி
தேசத்தின் எட்டு திக்கிலும்
அடிமை உணர்வை அகற்றித்தானே
சுதந்திர வேட்கையோடு அஞ்சாமல்
கொடி பிடிக்க செய்தாய்!
* செல்லம்மாளின் மணாளனே
தமிழ்த்தாயின் புதல்வனென
பெருமிதமாய் தலைநிமிர்ந்து
பாரதத்தின் காவலனாக வாழ்ந்து
இறவா புகழுடம்பு எய்திய துாயவனே
உன் புகழ் ஓங்குக!
பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.