/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: பாராட்ட கற்றுக் கொள்வோம்!
/
கவிதைச்சோலை: பாராட்ட கற்றுக் கொள்வோம்!
PUBLISHED ON : நவ 03, 2024

பாராட்ட கற்றுக் கொள்வோம் - அது
கொடுப்பவர்களுக்கும்
பெறுபவர்களுக்கும்
ஆழ்ந்த பந்தத்தை ஏற்படுத்தும்!
சிறிய பாராட்டும்
மொட்டுக்களை பூக்க செய்யும்
காய்களை கனியாக்கும்!
பாராட்டுங்கள் - அதுமகிழ்ச்சியின் ஊற்று
செலவில்லாத ஊக்க மருந்து!
முதுகுக்கு பின் செய்யும்
செயல் ஒன்று தான் - அது
தட்டிக்கொடுத்து பாராட்டுவது!
பாராட்டுவதால் எந்த
கவுரவமும் தொலைந்து போகாது...
பாராட்டு பெறுபவர்கள்
கர்வமும் கொள்ளப் போவதில்லை
கொஞ்சமாக குளிர் தென்றலை
வீசிவிட்டு போகும் அவ்வளவே!
குறைக் கூறுவது கோழைத்தனம்
மற்றவர்களை குறைக் கூறி தாழ்த்துவதால்
நாம் ஒரு முழமேனும்
உயர்ந்து விட போகிறோமா?
தகுதியில்லாதவரை பாராட்டுதல்
கள்ளச் சந்தையில்
பொருளை விற்பதற்கு சமம்!
இனிய வார்த்தைகளை கொட்டுவதால்
நாக்கு காயப்படப் போவதில்லை...
தட்டிக் கொடுப்பதால்
கைகள் முறிந்தும் விடாது!
சின்ன சின்ன பாராட்டுகளுக்கு
ஏங்குவது மனித இயல்பு...
பாராட்டு பசிக்கு
நாவால் தீர்வு சொல்வோம்!
கேட்பவர் இதயம் மலரும்
செயல்கள் சிறகை விரித்து
வெற்றி வாகை சூடும்!
பாராட்ட கற்றுக்கொள்வோம் - அது
நம் மதிப்பை மேலும் உயர்த்தும்!
செல்வி நடேசன், சென்னை.