/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - எல்லாம் அறிந்தவன் பாரதி!
/
கவிதைச்சோலை - எல்லாம் அறிந்தவன் பாரதி!
PUBLISHED ON : டிச 08, 2024

பாரதிக்கு தெரியும்...
பாரத நாடு ஒருநாள்
விடுதலை வாங்கி விடும் என்று...
அதனால் தான்
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என்று
அன்றைக்கே
பள்ளுப் பாடிச் சென்று விட்டான்!
பாரதிக்கு தெரியும்...
விஞ்ஞான வளர்ச்சியில்
விளையாட்டுகள் எல்லாம்
வீட்டை விட்டு ஓடிப் போகும்
கைப்பேசிகள்
கைரேகை போல் ஆகும்
கையும் காலும் அதில்
கட்டுண்டு முடங்கும்
நாள் ஒன்று வரும் என்று...
அதனால் தான்
ஓடி விளையாடு பாப்பா என்று
அன்றைக்கே
பாடி வைத்து விட்டான்!
பாரதிக்கு தெரியும்...
பசியும் பட்டினியும்
பொல்லாதவை என்று...
அதனால் தான்
தனி ஒரு மனிதனுக்கு
உணவு இல்லை எனில்
ஜகத்தை அழித்திடுவோம் என்று...
சிட்டுக் குருவிகளை கூப்பிட்டு
சோறு போட்டு மகிழ்ந்தான்!
பாரதிக்கு தெரியும்...சினிமாக்கள் கூட
ஜாதிகளை வைத்து தான்
திரைப்படங்களை எடுக்கும் என்று...
அதனால் தான்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று...
அன்றைக்கே
பாட்டாக பாடி விட்டான்!
புதுமைப் பெண்கள் நாட்டில் பிறப்பர்
பெண் விடுதலை கிடைக்கும்
சோறு சமைக்கும் பெண்கள்
சட்டங்கள் செய்தும்
பட்டங்கள் வாங்கியும்
சபை ஏறி
சரித்திரம் படைப்பர்
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாகி
நாடாளும் நாள் ஒன்று
வருமென்று தீர்க்கதரிசி
மகாகவி பாரதிக்கு
அன்றே எல்லாம் தெரியும்!
— கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி.
ஏப்., 7, 2024ம் தேதியில் கே.ஜே.செல்வராஜ், படம் வெளியாகியுள்ளது.