/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - நன்னாரி!
/
நம்மிடமே இருக்கு மருந்து - நன்னாரி!
PUBLISHED ON : செப் 08, 2024

சித்தர்கள் கூறிய கற்பகத்தரு மூலிகைகளில் ஒன்று, நன்னாரி.
கிருஷ்ணவல்லி, அங்கார மூலி, அனாதமூலா, நறுக்கி மூலம், பாதாள மூலி, நறுநீண்டி, சுகந்த மூலி, காணாறுசாரி என, வேறு பெயர்களும் இதற்கு உள்ளது. நன்னாரி, கொடியாக தரையில் படரும் தாவரம்.
இதன் வேர் தான் மருத்துவ குணம் கொண்டது. நறுமணமிக்கது, இனிப்பும், சற்று கசப்பும் கலந்த சுவையுள்ளது. இந்தச் செடியின் வேரை உலர்த்தி பதப்படுத்தி தயாராவது தான், நன்னாரி சர்பத்.
பொதுவாக கோடையில் தாகத்தையும், உஷ்ணத்தையும் தணிக்கக் கூடியதாகவும், பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் இருக்கும் நன்னாரி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது; 'ஆரத்ரைட்டிஸ்' மூட்டு வலிகளையும் குறைக்கிறது.
படர்தாமரை, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது. உடலில் உள்ள வெப்பத்தை அகற்ற உதவுவதுடன், உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களையும் ஆற்றுகிறது.
ரத்தத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டு அளவை குறைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி, பாக்டீரியா தொற்றுக்களை அகற்றி, உடல் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
நன்னாரியை நீரில் ஊற வைத்து அல்லது வேகவைத்து வெயில் காலங்களில் சாப்பிட்டு வர, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். 20 கிராம் நன்னாரி வேரை இடித்து, இரண்டு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆறியதும் பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகிறது. நீடித்த முகப்பரு, அரிப்பு, ஒவ்வாமை மற்றும் கரப்பான் போன்றவை நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
நன்னாரி வேர் பட்டையை நீரில் ஊற வைத்து வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து கொடுக்க, சளியால் அவதிப்படும் குழந்தைகள் விரைவில் நலம் பெறுவர்.
நன்னாரி வேர் பொடியை, தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செரிமான பிரச்னைகள் சரியாகிறது. வயிற்றுப்புண், சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் சரியாகிறது. மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்குகிறது.
நன்னாரி வேரில் காணப்படும் கிழங்கை உலர்த்தி காய வைத்து, ஊறுகாய் செய்து சாப்பிட்டால், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய், மூலம், ஒவ்வாமை சரியாகிறது. நன்னாரி வேரை பொடி செய்து, கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாப்பிட்டால், வயிறு, குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகிறது.
நன்னாரி இலையை நெய்யில் வதக்கி, மிளகும், இந்துப்பு மற்றும் சிறு புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகிறது.
நன்னாரியில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி டியூமர் தன்மை உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உடல் சோர்வு இருக்கும்போது நன்னாரி பொடியை, எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறுடன் கலந்து சாப்பிட, சோர்வு மறைந்து புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பலாம் என்கின்றனர்.
பச்சை நன்னாரி வேரை, 20 கிராம் தட்டி, 200 மி.லி., நீரில், ஒருநாள் ஊறவைத்து வடி கட்டி, 100 மி.லி.,யை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பித்த நோய், நீரிழிவு, உடல் சூடு அதிகமாவதால் வரும், மேக நோய் தீரும். சொறி சிரங்கு மறையும், ஆண்மைக்குறைவு சரியாகிறது.
நன்னாரி வேரை பொடியாக்கி, சோற்றுக்கற்றாழையுடன் கலந்து சாப்பிட விஷக்கடிகள் குணமாகிறது.
நன்னாரி, தனியா, சோம்பு இவை அனைத்தும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர, உடல் பருமன் குறையும். நெல்லிக்கனி சாற்றில் நன்னாரி வேரை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட, இதயம் வலுவடையும்.
ஆர்.தீரன்