/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - மாதுளம் பழம்!
/
நம்மிடமே இருக்கு மருந்து - மாதுளம் பழம்!
PUBLISHED ON : அக் 06, 2024

இதய நலன் காக்க, மூளையின் ஆற்றலை மேம்படுத்த, நுரையீரல் நன்கு இயங்க, செரிமான மண்டலம் சிறக்க, எலும்புகள் பலம் பெற, ஆண்கள் மற்றும் பெண்கள் பாலியல் நலன் சிறக்க, ரத்த சர்க்கரை அளவை குறைக்க, முடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க, உடலில் கெட்ட கொழுப்பு கரைய என, பல்வேறு விஷயங்களுக்கும், மாதுளம் பழம் பரிந்துரைக்கப்படுகிறது.
மாதுளையில், புனிகலஜின் எனப்படும், சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடெண்ட் உள்ளது. இது நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, இதய நோய்களை தடுக்கிறது.
கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட, மாதுளையின் தோலிலும், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மாதுளை தோலை காய வைத்து, பவுடர் செய்து, சுடுநீரில் கலந்து சாப்பிடலாம். தேநீருக்கு பதிலாக இந்த பொடியை கஷாயம் போட்டும் குடிக்கலாம். வயிற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்னைகளை தீர்க்கிறது. வீக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு ஆகியவற்றை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரலை சுத்தம் செய்கிறது.
மழைக் காலங்களில் காலையில் எழுந்தவுடன் மாதுளை தோல் டீ குடித்தால், சளி பிடிக்காது.
வயது மூப்பால் வரும், 'அல்சைமர்' எனும் மறதி நோய்க்கும், 'பார்கின்சன்' எனப்படும் நடுக்குவாத நோய்க்கும் மாதுளை பழத்தோலை மருந்தாக பயன்படுத்தலாம் என, இங்கிலாந்தின் பட்டர் பீல்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மாதுளம் பழத் தோலின் மூலக்கூற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மருந்துகள் முடக்குவாதத்திற்கும், தீ காயத்திற்கும் பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
மாதுளம் பழ பிஞ்சை அரைத்து, மோரில் கலந்து குடித்தால், கடுமையான வயிற்று வலி சரியாகும் என்பது, பலருக்கு தெரிந்த, நம் பாட்டி வைத்தியம்.
இதுதவிர, 50 கிராம் மாதுளம் பழ தோலின் பொடியை, ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதோடு, தலா, இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, 'பேஸ்ட்' பக்குவத்திற்கு தயார் செய்யவும். இதை முடியில் தேய்ப்பதற்கு முதல் நாள் இரவு,
தலையில் தேவையான அளவு எண்ணெய் வைத்து கொள்வது நல்லது.
காலையில், தலைமுடி மற்றும் வேர் கால்களில் நன்றாக தேய்த்து, 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், சீகைக்காய் தேய்த்து தலைமுடியை அலசவும். இந்த ஹேர் பேக்கை மாதத்தில் மூன்று முறை செய்து வந்தால், தலைமுடி அடர்த்தியாக வளரும்; பேன் மற்றும் பொடுகு தொல்லையும் மறையும்.
தொகுப்பு : ராஜன்