
உழைத்து முன்னேறி, இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்பவர், தொழிலதிபர் ராம்சேகர். இரண்டு தொழிற்சாலைகளுக்கு சொந்தக்காரர். உழைப்பவர்களுக்கு ஊதியத்தை தாராளமாக வழங்கி, ஏழையின் சிரிப்பில் உண்மையிலேயே இறைவனைக் காண்பவர்.
அவரது ஒரே மகன், மணீஷ். சாதாரண பள்ளிக்கூடம், தேவைக்கு மட்டும் வசதிகள், நல்ல படிப்பு என, மணீஷை கண்டிப்புடன் வளர்த்து வந்தார். பணமும், அந்தஸ்தும் மகனை தாக்கிவிடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமுடன் இருந்தார்.
''அப்பா, பள்ளிக்கூடம் மற்றும், 'டியூஷன்' போக வசதியாக இருக்கும். எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித்தாங்கப்பா,'' என்றான், மணீஷ்.
''ஏன், இப்ப இருக்கிற சைக்கிள் போதாதா?'' என்றார், ராம்சேகர்.
''இல்லப்பா, நிறைய பசங்க ஸ்கூட்டியில வர்றாங்க. எனக்கும், ஆசையா இருக்குப்பா!''
''தேவைக்கேற்ப தான் ஆசை இருக்கணும், மணீஷ். அதிக வசதிகள், படிப்பிலிருந்து கவனத்தை திசை திருப்பிடும். ஆசைப்படு, அனைத்திற்கும் ஆசைப்படு. ஆனால், அதன் அவசியத்தையும், விளைவுகளையும் யோசித்துப் பார்...
''சரி, உனக்கு ஒரு சின்ன பரீட்சை வைக்கிறேன். திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது. நீயே ஒரு வேலை செய்து, 100 - 200 ரூபாய் சம்பாதித்துக் காட்டு. உழைப்பின் மதிப்பு, அப்போ உனக்கு தெரியும். அதன்பின், ஸ்கூட்டியை பற்றி யோசிக்கலாம்,'' என்றார்.
''வேலையா... எனக்கு யாரு, என்ன வேலை தருவாங்க?''
''யோசி, உன் நண்பன் மணிகண்டன் சுண்டல் விற்கிறான்னு சொல்லுவியே... அது ஒன்றும் மட்டமில்ல. எந்த வேலைன்னாலும் உழைப்பு தான்.''
மணி, மாலையில் இரண்டு மணி நேரம் சுண்டல் விற்பது, அவனது வாழ்க்கைப் பிரச்னை. ஏழ்மையிலும் கல்வி கற்க வேண்டும் என்பது, அவனது அம்மாவின் ஆசை.
மணீஷும், மணியும் நெருங்கிய நண்பர்கள். தன் கடற்கரை அனுபவங்களை அவ்வப்போது, மணீஷிடம் சொல்வான், மணி.
''சுண்டல் தம்பி, இங்க வா!''
குரல் வந்த திசை நோக்கி ஓட்டமும், நடையுமாக கால்கள், கடற்கரை மணலில் புதைய விரைந்தான், மணி.
கையில் எவர்சில்வர் துாக்கு, அதன் காதில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள தமிழ் தினசரிகளின் செவ்வக நறுக்குகள். தொளதொள வென்று ஒரு அரை டவுசர், வேறு யாருக்கோ தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, காலில் ரப்பர் செருப்பு. வேகமாக வந்து மண்ணில் மண்டியிட்டு அமர்ந்தான்.
''சுண்டல் என்ன விலை?'' கேட்டவருக்கு, வயது: 50 இருக்கலாம். கோணலாய் வெட்டப்பட்ட முடி, முழங்கை மறைக்கும் அரைக்கை சட்டை. கால் மடக்கி அமர்ந்திருந்தவர், வெளியூர் மனிதர் என்பது, மணிக்கு புரிந்தது. அனுபவம்!
ஆழாக்கு போன்ற குவளையைக் காட்டி, ''இதுல ஒரு அளவு சுண்டல், 10 ரூபாய்!''
''தலை தட்டியா, கும்பாச்சியாவா?'' கேட்டவரை அதிசயமாகப் பார்த்தான், மணி.
''கும்பாச்சியாகவே தர்றேன், சாமி!''
''ம், பட்டணத்துல எல்லாமே ரொம்ப விலை தான். எங்க ஊர்ல, 10 ரூபாய்க்கு, 10 பேருக்கு சுண்டல் செய்துடலாம்,'' காசு கொடுத்து, சுண்டல் வாங்கிக் கொண்டார். மாலை மஞ்சள் வெயிலில் உட்கார்ந்திருந்த அவரது நிழல், நீண்டு கடல் அலை அருகில் சென்று கொண்டிருந்தது.
அடுத்த ஆண்டு, 10ம் வகுப்புக்கு போனான், மணி. தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் சுண்டல் விற்றால், கையில், 100 - 200 ரூபாய் நிற்கும்.
ஒன்றுக்கும் உதவாத, குடிகார அப்பா. தினமும் வீட்டில் சண்டை. அம்மாவின் சம்பளப் பணத்தைப் பிடுங்கி, அவளுக்கு அடி, உதை. அம்மா செய்து தரும் சுண்டல் விற்றால், ஒரு வேளைக்கு சோறு கிடைக்கும். 10ம் வகுப்புக்கு போய் விட்டால், சுண்டல் விற்க நேரமிருக்குமா தெரியவில்லை. பசி வந்துவிட்டால், 10வதும் பறந்து போய் விடுமோ?
''இப்ப எல்லாம் சுண்டலுக்கு மவுசு இல்ல, சார். பாப்கார்ன், பிட்சா, பர்கர்னு அட்டை டப்பாவிலே விற்கிறாங்க. வண்டியில், ஐஸ் கிரீம், மாங்கா பத்தை, வெள்ளரிப்பிஞ்சு, வறுத்த வேர்க்கடலைன்னு அவங்க வேற ஒரு பக்கம் போட்டி போடறானுங்க.
''அதுமட்டுமல்ல, 'பீச்' உள்ள வரும்போதே, வண்டியில சூடா மொளகா பஜ்ஜி, மசால் வடைன்னு சட்னியோட, 'சப்ளை' பண்றாங்க. எங்க பொழப்பு பேஜாரு தான் சார். கடற்கரையே, 'பாஸ்ட்புட், மால்' மாதிரி ஆயிடுச்சு சார்,'' -பொழுது போகாமல், கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பிரஷ் தலை இளைஞனிடம் சொல்லிக் கொண்டிருந்தான், மணி.
அம்மாவை நினைத்து வருத்தப்பட்டபடி, 'தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல்...' என கூவியபடி சென்றான், மணி.
அன்று காலை கூட, குடிக்கப் பணம் கொடுக்கவில்லையென, அம்மாவை அடித்து, உதடெல்லாம் ரத்தம். மதியம் கூட அழுதபடியே தான் சுண்டல் செய்து கொடுத்தாள், அம்மா.
'நல்லாபடிச்சு, வேலைக்கு போய், அம்மாவை நல்லா வெச்சுக் காப்பாற்றணும்...' அடிக்கடி நினைத்துக் கொள்வான், மணி.
மேற்கிலிருந்து விழும், வெயிலின் வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள ஒரு குடை. விரித்த குடையின் கீழ் குசுகுசுவென பேச்சும், சன்னமான சிரிப்பும் கேட்டது. குடை வெயிலுக்காக இல்லை என்பது, மணிக்குத் தெரியும்.
திடீரென்று அவர்கள் முன் சென்று, 'சுண்டல் வேணுமா அக்கா?' என்று கேட்பதில்லை, மணி. அது அநாகரீகம் என்பதால் மட்டும் அல்ல, அம்மாவுக்கு செய்து கொடுத்த வாக்கினாலும் தான்.
லட்ச ரூபாய் கொடுத்தாலும், குடிகாரனுக்கு சுண்டல் விற்கக் கூடாது என்பது, அம்மாவின் மற்றொரு விதி. வீட்டுக் குடிகாரனை ஒன்றும் செய்ய முடியாததால், எழுந்த விரக்தியில் வந்த விதி அது. மணிக்கும், குடிப்பவர்களைக் கண்டால் வெறுப்பே வரும்.
''என் தலைவர் மாதிரி, நம் ஜாதிக்கு செய்யற ஒரு தலைவரு உலகம் முழுக்க தேடினாலும் கெடைக்காது.''
''போடா, நீயும் ஒந்தலைவரும். எங்க தலைவரு மாதிரி, ஏழைங்களுக்கு ஒதவற ஒரு ஆளைக் காட்டு பார்க்கலாம்.''
''ஏழைன்னு சொல்லி அவங்க கட்சிக்காரங்களுக்கே பணத்தை எல்லாம் கொடுத்து, ஓட்டு வாங்கறாரு ஒங்க தலீவரு.''
''ஜாதிய ஒழிக்கறேன்னுட்டு, ஒங்க தலீவரு தன் ஜாதியை மட்டும் கருத்தா கவனிக்கிறாரு.''
இருவரது காரசாரமான விவாதத்தில், வார்த்தைகள் தடிக்க, கைகள் ஓங்க, அடிதடியாகி அந்த இடம் சிறு போர்க்களமானது. காதில் கேட்கக் கூசும் வார்த்தைகள். இரண்டு கட்சித் தொண்டர்களுக்குள்ளும் கை கலப்பு. போலீஸ் இன்னும் வரவில்லை.
துாரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த, மணி, கலவரத்துக்கு எதிர் திசையில் சென்றான். அம்மாவின் மூன்றாவது விதி... -கூட்டம், கலவரம் செய்பவர்களுக்கு நடுவில் சுண்டல் விற்கக் கூடாது!
மணியின் கடற்கரை அனுபவங்களைக் கேட்கக் கேட்க, மணீஷுக்கு வியப்பாக இருக்கும்.
மணியைப் போல, தன்னால் இப்படி சுயமாக உழைத்து, சம்பாதிக்க முடியுமா... அப்பாவின் குரல், அவன் மனதில் ஒலித்தபடி இருந்தது.
கூடிய சீக்கிரம், மணீஷுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. இரண்டு நாட்களாக பள்ளிக்கூடம் வரவில்லை, மணி. ஏதோ விஷக்காய்ச்சல் என்று கூறினர்.
மணியின் வீட்டிற்குச் சென்று, ''அம்மா... இன்னைக்கு, மணிக்கு பதிலா, நான் போய் சுண்டல் வித்துட்டு வர்றேன்மா,'' என்றான், மணீஷ்.
நெருப்பை மிதித்தவள் போல் பதறி, ''மணீஷ் கண்ணா, பெரிய வீட்டுப் பிள்ளை நீ. உனக்கேன் இந்த வேலை? வேணாம்பா,'' என்றாள், மணியின் அம்மா.
''மணியைப் போல தானே என்னையும் நெனைக்கிறீங்க, அப்ப என்ன தயக்கம்? மணி, என்னிடம் எல்லாம் சொல்லி இருக்கான். என்னால முடியுதான்னு பார்க்கிறேன். என்னையும் உங்க பிள்ளை மாதிரி நெனச்சீங்கன்னா, சுண்டலை குடுங்கம்மா,'' என்றான், மணீஷ்.
ஈன ஸ்வரத்தில், ''வேணாம் மணீஷ், கடற்கரை மணல் சுடும். மனிதர்களின் பார்வையில் ஒரு அலட்சியமும், கேவலமும் தெரியும். நாய்கள் சுற்றி வரும். சில சமயம், போலீஸ் லத்தியும் சுழன்று வரும்...'' என்றான், மணி.
மணீஷை சுண்டல் துாக்குடன் நினைத்துப் பார்க்க, மணிக்கு மனமில்லை.
''ஒரே ஒரு வாய்ப்பு குடுடா, மணி. நானும் முயற்சி பண்ணறேன். வாழ்க்கைன்னாலே சவால் தானே?'' என்றான், மணீஷ்.
கால்பந்து விளையாடிய கடற்கரையில் கையில் துாக்குடன், 'தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல்...' என, முதலில் குரல் கம்மியும், பின்னால் உரக்க கூவியபடி சென்றான், மணீஷ்.
ஒவ்வொரு முறையும் மணியின் மனதில் இருந்த வைராக்கியமும், வேகமும், வெறியும் தன்னுள்ளும் ஊறுவதை உணர்ந்தான், மணீஷ். 'நன்றிடா மணி, வாழ்க்கை இப்போது புரிகிறது...' மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
குடைக்குப் பின்னால் சென்றவன், முதலில் அதிர்ச்சியடைந்தான். உள்ளிருந்த அக்கா கண் காட்ட, அருகிலிருந்தவர் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டார்.
'ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு குடையும், அதன் பின்னால் கொஞ்சம் நிழலான நினைவுகளும் இருக்கும் போல...' என நினைத்தபடி, கடற்கரை மண்ணில் கால் புதைய நடந்தான்.
படகுக்கு அருகில் குடித்துவிட்டு, விழுந்து கிடந்தவனைத் தாண்டிச் சென்றான். எத்தனை மனிதர்கள், எத்தனை சுபாவங்கள். ஒவ்வொரு பொட்டலம் விற்கும் போதும் மனம், ஒவ்வொரு சாளரமாகத் திறந்தது.
'ட்டாய்... வெட்டுடா அவனை...' கத்தியபடி ஓடி வந்த கும்பலைக் கண்டு, மணீஷ் ஒதுங்கும் முன், அவனை யாரோ தள்ளிவிட, துாக்கில் மீதியிருந்த சுண்டல், மணலில் விழுந்தது; துண்டுக் காகிதங்களும் காற்றில் பறந்தன.
சுதாரித்து எழுந்தவன், அதுவரை சம்பாதித்தப் பணம் சரியாக இருக்கிறதா என்று, கால் சட்டையை தொட்டுப் பார்த்துக் கொண்டான். முழங்கையிலும், காலிலும் சிராய்ப்புகளால், எரிந்தன.
காலித் துாக்கை எடுத்துக்கொண்டு, மணியின் வீட்டை நோக்கி ஒருவித மனச்சோர்வுடன் நடந்தான். உழைத்து, மணியின் அம்மா செய்து கொடுத்த சுண்டலை வீணாக மண்ணில் கொட்டி விட்டோமே என்ற எணணமே, அவனை வருத்தியது.
மணியின் அம்மாவுக்கு உடம்பு நடுங்கியது.
''வேணாம்ன்னு சொன்னேனே, கண்ணா... இப்படி அடிபட்டுக்கிட்டு வந்து நிக்கிறயே,'' கண்ணில் நீர் வழிய, சிராய்ப்புகளுக்கு களிம்பு எண்ணை தடவினாள்.
கையிலிருந்த பணத்தைக் கொடுத்தான், மணீஷ்.
''கடைசி நான்கைந்து பொட்டல சுண்டல், மண்ணுல கொட்டிடுச்சும்மா. 50 ரூபா போல நஷ்டம்,'' சொல்லி வருந்தினான், மணீஷ்.
''இல்லப்பா, எப்பவும் கிடைக்கிற லாபத்துல, 50 ரூபாய் குறைவு, அவ்வளவு தான். இந்தாப்பா, 120 ரூபாய். இன்னைக்கு நீ சம்பாதிச்சது,'' என்று சொல்லி, தயாராய் வைத்திருந்த பலகாரத்தையும் மணீஷுக்கு கொடுத்தாள்.
சாப்பிட்டபடியே கையிலிருந்த சிராய்ப்பைப் பார்த்தான். வலியோ, எரிச்சலோ இல்லாதது, வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, மணீஷுக்கு.
முதல் சம்பளம், ஒரு நிமிடம் மணியின் அம்மாவைப் பார்த்தபடி நின்றான், மணீஷ்.
''வேணாம்மா. இது எனக்கு ஒரு அனுபவம், பாடம். இந்த பணத்தை மணின்னா குடுப்பீங்களா, இல்ல அவன் தான் கேட்பானா? நான் வேற, மணி வேறயாம்மா,'' என, வாங்க மறுத்தான், மணீஷ்.
''அப்படியில்லப்பா, உழைப்புக்கு எப்பவும் மரியாதை செய்யணும். அம்மாவோட அன்பளிப்பா இதை வெச்சுக்கோ!''
மகன் சம்பாதித்து வந்து காட்டியதும், மகனை ஆரத்தழுவிக் கொண்டார், ராம்சேகர்.
''மணீஷ், எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா. உனக்கு, என்ன கலர் ஸ்கூட்டி வேணும்?''
''வேண்டாம்பா, எனக்கு சைக்கிளே போதும்...'' என்றான், மணீஷ்.
ஜெ. பாஸ்கரன்