தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாழ்ந்து காட்டுகிறேன்!

வாழ்ந்து காட்டுகிறேன்!

வாழ்ந்து காட்டுகிறேன்!


PUBLISHED ON : ஜூலை 14, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாந்தி ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், 'சாந்தி சாந்தி...' என, அழைக்க, அவரது மனைவி, சில நொடிகளில் எதிரில் வந்து நின்றாள்.

''பத்திரிகை வந்தாச்சு...'' என்று ஒரு பெரிய அட்டை பெட்டியை காட்டினார். மேலே இருந்த ஒரு சாம்பிள் பத்திரிகையை எடுத்து, ''வா... இப்படி பக்கத்துல உட்கார்,'' என, மனைவியை அருகில் அமர செய்தார்.

இருவர் முகங்களும் பிரகாசமாயின. அவர்களது ஒரே மகளின் திருமண பத்திரிகை அல்லவா அது!

இருவர் முகத்திலும் பெருமிதம். டேபிளில் இருந்த பேனா, பேப்பரை எடுத்தார்.

''ம் மொதல்ல நீ சொல்லு, உங்க வீட்டு பெரியவங்கள்லேர்ந்து, யார் யாருக்கு கொடுக்கணும்ன்னு வரிசையா சொல்லு,'' என்றார்.

''முதல்ல சம்பந்தி வீட்டுக்குங்க,'' சாந்தி சொல்ல, ''அட, அது தெரியாதா... அதுக்கு முன், குல தெய்வம் அதெல்லாம் தனியா ஒரு பட்டியல். இப்ப, உங்க வீட்லேர்ந்து சொல்லு,'' என்றார்.

சாந்தி ஆரம்பித்தாள்...

''எங்கப்பா, அம்மா. அப்புறம், பெரியப்பா, அத்தை, சித்தி. அப்புறம், என் பெரிய அண்ணன் மற்றும் சின்ன அண்ணன்.''

''சின்ன அண்ணனா?'' சரவணனின் முகம் மாறியது.

சாந்தி கொஞ்சம் பயந்தாள். இது எதிர்பார்த்தது தான்.

''ஏங்க, முரளிக்கு வேணாமா?''

''என்ன முரளி, கிரளின்னு. உனக்கு பழசு மறந்து போச்சா? கூடப்பிறந்த பாசம், புருஷனோட அவமானத்த மறக்கடிச்சுடுச்சு போல...'' உணர்ச்சிவசப்பட்டார், சரவணன்.

பத்து ஆண்டுகளுக்கு முன், வீடு மற்றும் திருமண புரோக்கர் தொழில் செய்து வந்தார், சரவணன். பிறகு, பேப்பர் விளம்பரம், மொபைல் போன், நெட் என்று, தகவல்கள் தாமாக எல்லாரையும் தேடி வர, அவர் தொழில் முடங்கியது.

பக்கத்து ஊரில், பெரிய அளவில் மளிகை கடை வைத்திருந்த இரண்டாவது மைத்துனன் முரளியிடம் சென்றார், சரவணன்.

தன் நிலைமையை கூறி, 'ஒண்ணுமில்ல மச்சான், நீ இப்ப நல்ல நிலையில இருக்க. கொஞ்சம் பணம் கொடுத்தீன்னா, என் ஊர்ல கடை போடலாம்ன்னு இருக்கேன். உன் சிபாரிசுல, சரக்கும், கடனா போடச் சொல்வேன்...' உரிமையும், கெஞ்சலுமாக கேட்டார், சரவணன்.

'மாமா... கண்டிப்பா நீங்க கடை போடலாம்; ஆனா, உடனே வேண்டாம். என் கடையில கொறஞ்சது ஆறு மாசமாவது வேலை பார்த்து, அனுபவத்த கத்துக்குங்க. அப்புறம் என்னால முடிஞ்சத தர்றேன். சரிதானா மாமா?' என்றான்.

மச்சானின் கருத்தால் வெகுண்டார், சரவணன்.

'என்னடா பேசற... உங்க அக்காவை கட்டும் போது, நீ டவுசர் போட்ட பையன். இப்ப எனக்கே, 'அட்வைசா?' உன்கிட்ட வேலை பார்க்கணுமா, அப்புறம், என்ன சொன்ன... முடிஞ்சத தருவியா... என்ன பிச்சையா?

'மாமான்னு பயமும் இல்ல, மரியாதையும் இல்ல. இனிமே, அக்கான்னு உறவுமுறை கொண்டாடி, என் வீட்டு பக்கம் வந்துடாத...' கோபத்தில் கடுமையாக திட்டிவிட்டு திரும்பினார், சரவணன்.

'ஏங்க... அவன் என்ன விரோதியா? புதுசா ஒரு வியாபாரத்துல, அனுபவம் தேவைன்னுதானே சொன்னான்...' என, சமாதானப்படுத்தினாள், சாந்தி.

'வாய மூடுடி. உன் தம்பிய நீ எப்படி விட்டுக் கொடுப்ப. நானும், தொழில் ஆரம்பிச்சு, அதுல ஜெயிச்சு காட்டறேன்; அப்புறம் பேசிக்கிறேன்...' மனைவியை அடக்கினார், சரவணன்.

முரளியின் மகள், வயது வந்ததுக்கு கூட செல்லவில்லை. அதைவிட கொடுமை, 'போனா உன் கையால இனிமே சோறு திங்க மாட்டேன்...' என எச்சரித்து, சாந்தியையும் தடுத்தார்.

ஒருநாள், அவருக்கு தெரியாமல் அண்ணன் மகளை பார்த்து வந்தாள். இப்போதும், அந்த குட்டு உடைந்து விடுமோ என்ற பயம், சாந்திக்கு மண்டைக்குள் பதுங்கியிருந்தது.

இன்னும் அதே வெறியில் கணவன் பேசியது, சாந்திக்கு வருத்தமாகவே இருந்தது.

''என்னங்க, குழந்தை மாதிரி கோவிச்சுகிட்டு. இதெல்லாம் வாழ்க்கையில ஒரு தடவ நடக்கிற விசேஷம். இதுல தாய் மாமன் உறவ, இப்படி அறுத்து விடலாமா?'' என்றாள், சாந்தி.

''பேசாதடி. அவனவன் அவமானப்படுத்துவான். நான் பெருந்தன்மையா போகணுமா. இனிமே, அவன் பேச்ச எடுத்த...'' நாக்கை கடித்தார், சரவணன்.

பிறகு ஒரு வழியாக மனைவியின் உறவினர், 'லிஸ்ட்' முடிந்து, அவர் பக்கம் உள்ள உறவினர்களின் பெயர்களை, எழுத ஆரம்பித்தார்.

இப்போது, முதலிலேயே முந்திக் கொண்டு, ''அடியேய் இப்பவே சொல்லிட்டேன், என் பெரியப்பா, 'லிஸ்ட்'லியே கிடையாது புரியுதா?'' என்றார்.

''ஏங்க, என்ன பேசறீங்க? நம் குடும்பத்துல மூத்தவருங்க.''

''அதுக்காக, நான் முதன் முதலா கடை ஆரம்பிச்சு, வந்து திறந்து வைங்கன்னா... 'உனக்கு, தரகு வேலையே ததிங்கினத்தோம். இதுல எதுக்குடா மளிகை வியாபாரம்?'ன்னு, வராம இருந்தாரு. இப்ப என்னாச்சு, ஐயாவோட உழைப்புல, ஒரு கடை, மூன்று கடையாச்சு.

''என் கீழ, 16 பேர் வேலை பார்க்கிறானுவ. ரெண்டு சொந்த வீடு; மூணாவதா ஒன்றை விலை பேசிருக்கேன். பொண்ணுக்கு சீதனமா தரப்போறேன். கீழே இருக்கிறவன் முன்னேற ஆசைப்பட்டா, அச்சு கொட்டாம வாழ்த்தணும். ஆனா, இவரு சாபம்ல்ல விட்டாரு.

''எவ்வளவோ பேர், என் மேல நம்பிக்க வச்சு, என்னை வாழ்த்தினாலும், இவரும், உங்க சின்ன அண்ணனும் சொன்னது தான், என் நெஞ்ச அறுக்குது. இப்ப இவனுங்கள எம் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிடணும்ன்னு என்ன அவசியம்? அதுலயும் நொட்ட சொல்லவா?

''சரி சரி... ஏன் வீண் பேச்சு. இப்ப நான் வாழ்ந்து காட்டியிருக்கேன்; அந்த திருப்தி போதும். இது மாதிரி ஆளுங்கள பற்றி பேசி, என் பழைய கோபத்தை கிளறாத,'' என, பேச்சை மாற்றி, தன் பக்கத்து உறவினர், நண்பர்களின் பெயரை எழுத ஆரம்பித்தார்.

கணவரிடம் பேசி பிரயோஜனமில்லை என்று அமைதியானாள், சாந்தி.

அன்று மாலை, அவர்கள் வீட்டிற்கு வந்தான், ஒரு இளைஞன்.

சந்தேகமாக பார்த்தார், சரவணன்.

''ஐயா, என்னை தெரியுதா, என் பேரு வேலு,'' என்றான்.

தலையை வலதும், இடதுமாக ஆட்டி, ''சுத்தமாக ஞாபகம் இல்லை,'' என்றார்.

''சரிங்க, நானே சொல்றேன். எட்டு வருஷம் ஆகி இருக்கும். அப்ப, நான், 10வது பெயில். உங்க கிட்ட வந்து, 'எனக்கு பொண்ணு பார்க்கணும். உங்க உதவி வேணும்'ன்னு கேட்டேன். நீங்க சிரிச்சுக்கிட்டே, 'நீ ஆளும் சரியில்ல, படிப்பும், பணமும் இல்ல. யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடிப்போயிடு'ன்னு சொன்னீங்க.

''அப்ப என்னோட தகுதிக்கு, நீங்க சொன்னதுல கொஞ்சம் உண்மை இருந்தாலும், நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன்; தனியா அழுதேன். ஆனா, உங்க மேல எனக்கு கோபம் வரல. உங்க பேச்சையே உத்வேகமா எடுத்துகிட்டு, வாழ்க்கையில் முன்னேறி, வாழ்ந்து காட்டணும்ன்னு முடிவு செஞ்சேன்.

''என் நல்ல நேரம், அதிர்ஷ்டம் கை கூடி வந்தது. கொஞ்ச நாளில் மொபைல் போன், 'ரிப்பேர்' கத்துக்கிட்டேன். அப்புறம் ஊர்லயே சின்னதா மொபைல் போன், 'ரிப்பேர்' கடை போட்டேன். சுமாரான வருமானம் வந்துச்சு.

''அப்பறம், மொபைல் போன் வாங்கி விக்கிற கடையா மாத்தினேன். கடையும் பெருசாச்சுங்க. இப்ப மாத வருமானம், 50 ஆயிரம் ரூபாய். இதுக்கு மூல காரணம், உங்களோட அந்த கிண்டல் தான்.

''உங்களுக்கு தெரியாமலேயே, உங்க வார்த்தையில எனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சு, இப்ப சொந்தத்துலேயே ஒரு பொண்ணு தேடி வந்து, கல்யாணமும் நிச்சயமாகிடுச்சு. இந்தாங்க பத்திரிகை, தயவு செய்து என்னை திமிரு பிடிச்சவன்னு தப்பா நினைக்காதீங்கய்யா.

''உங்களை, கர்வமா நான் கூப்பிட வரல. வாழ்க்கையில், நேராவோ, இல்லை மறைமுகமாவோ நம் முன்னேற்றத்துக்கு துாண்டுகோலா இருக்குறவங்களை மறக்கக் கூடாது. நீங்க, வயசுல பெரியவரு. வந்து என்னை வாழ்த்தணும்,'' என்று உருக்கமாக சொன்னான், வேலு.

அவன் முன், கூனிக் குறுகிப் போனார், சரவணன்.

'இவனிடம் உள்ள பக்குவம், ஏன் தனக்கு வரவில்லை...' என, சிந்தித்தார்.

வாழ்ந்து காட்டுதல் என்பது, பணமும், செல்வாக்கும் பெறுவது மட்டுமல்ல. அது வந்த பின், பக்குவமாக நடந்து, எல்லாரையும் அரவணைத்து செல்வதும் தான் என்று, உணர்ந்தார்.

கண்களில் கண்ணீர் பரவ, பத்திரிகையை வாங்கிக் கொண்டு, வேலுவின் தோளை தட்டி, ''சபாஷ், வேலு. நீ, மேலும் மேலும் உயரணும்,'' என்று, ஆசிர்வதித்தார்.

அவன் சென்ற பின், மனைவியை அழைத்து, ''சாந்தி, ரெண்டு பத்திரிகையை எடுத்துக்க. இப்ப நாம உடனே முரளி வீட்டுக்கும், பெரியப்பா வீட்டுக்கும் போறோம்,'' எனக் கூற, இன்ப அதிர்ச்சியில், புரியாமல் பார்த்தாள், சாந்தி.

கீதா சீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us