தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பறவைகளின் அரசன், கழுகு

பறவைகளின் அரசன், கழுகு

பறவைகளின் அரசன், கழுகு


PUBLISHED ON : செப் 01, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்டம்பர் முதல் சனிக்கிழமை - சர்வதேச கழுகுகள் தினம்!

'அக்சிபிட்ரிடே' என்னும், பறவை குடும்பத்தை சேர்ந்த, வலுவான பெரிய ஊனுண்ணி, கழுகு. பறவைகளின் அரசன் என்ற சிறப்பையும் பெற்றது. அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது, இப்பறவை.

உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாக காணப்படுகின்றன. பெரும்பாலும், 'ஆதி உலகம்' என்று சொல்லப்படும், ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பாவில் தான், கழுகுகள் அதிகம் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம், 74 இனங்கள் உள்ளன. அவற்றுள், 60 இனங்கள், மேற்கூறிய, மூன்று பகுதிகளில் காணப்படுகின்றன.

பொதுவாக, கடல் கழுகுகள், கால் வரை ரோமம் உள்ள கழுகுகள், பாம்பு உண்ணும் கழுகுகள் மற்றும் ராட்சச கழுகுகள் என, நான்கு வகைகள் கொண்டவை.

பறவை இனங்களில், கழுகு மட்டும் தான், 70 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது. அதேபோல், அதிக உயரம் பறக்க கூடியவையும், கழுகு மட்டும் தான்.

பெண் கழுகு, ஆண் கழுகை விட, சற்றுப் பெரியதாக இருக்கும். ஆண் கழுகுக்கு பரீட்சை வைத்த பின்பே, அதன் மீது நம்பிக்கை வைக்கும், பெண் கழுகு.

அதாவது, ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்கு சென்று, சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும், பெண் கழுகு. பின், மேலே ஆணுடன் உயரத்திற்கு பறந்து சென்று, அந்த குச்சியை கீழே போட்டு, காத்துக் கொண்டிருக்கும். அக்குச்சி நிலத்தில் விழும் முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும், ஆண் கழுகு.

இவ்வாறு குச்சியை போடுவதும், எடுத்து வருவதுமாக, பல மணி நேர பரீட்சை நடைபெறும். ஆண் கழுகிடம் உள்ள பொறுப்புணர்வை உறுதிப்படுத்திக் கொண்டதும், உறவு கொள்ள ஒப்புக்கொள்ளும், பெண் கழுகு.

மிக உயரமான முட்களை உடைய மரக்கிளைகள் அல்லது மலைச் சரிவுகள் மற்றும் பாறைப் பிளவுகளில் என, மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், கழுகு.

முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடு கட்டும், ஆண் கழுகு. பின், பெண் கழுகு, அக்கூட்டில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.

ஒரு பெண் கழுகு, ஒரு முறைக்கு, இரண்டு முட்டைகள் இடும். முதலில், பொரித்து வெளிவரும் குஞ்சு அல்லது அளவில் பெரிய குஞ்சு, தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும்.

இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும், குஞ்சானது, பொதுவாக பெண்ணாக இருக்கும். ஏனெனில், பெண் குஞ்சு, ஆண் குஞ்சை விட பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க, அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

எதிரிகளை தாக்கவும், தன் முட்டைகளைப் பாதுகாக்கவும், ஆபத்து காலங்களில், உடலில் இருக்கிற கந்தக அமிலத்தை கழுகுகள் உமிழும். கந்தக அமிலம், எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும், அந்த உயிரினம் கருகிவிடும்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை, கழுகுக் குஞ்சுகளை கூட்டில் வைத்து, உணவு ஊட்டும், தாய் பறவை. பிறகு, மென்மையான கூட்டை நீக்கி விட்டு, முட்கள், கூர்மையான குச்சிகளை, குத்துவது போல கூட்டில் வைக்கும். இதனால், கூட்டின் ஓரத்திற்கு வரும் குஞ்சை, கீழே தள்ளிவிடும்.

குஞ்சு நிலை தடுமாறி விழப்போகும் போது, இறக்கைகளை விரித்துப் பறக்க முயலும். ஆனால், அவற்றால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல், ஆண் கழுகு பறந்து சென்று, தன் முதுகில் தாங்கி, மீண்டும் கூட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.

இது போல், தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, குஞ்சுகளை பறக்க வைத்து, தானாக இரை தேட அனுப்பிவிடும்.

எலி, கோழி, மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி, கழுகு. இது, ஏற்கனவே இறந்து போனவைகளை உண்ணாது; புதிதான இரையையே உண்ணும். இது, மிக அபாரமான பார்வை திறனை கொண்டது. 1,000 அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலை கண்டு வேட்டையாடவும் இதனால் முடியும்.

கழுகு, தன், 40 வயதை அடையும்போது, அதன் அலகு, இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகி விடுவதோடு, வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்கு கனமாக மாறிவிடும்.

இந்நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க போராட்டத்துக்கு தன்னையே உட்படுத்துவது, இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.

அச்சமயம், உயர்ந்த மலைக்கு பறந்து சென்று, அங்கிருக்கும் பாறையில் தன் அலகை வேகமாக மோதி, உடைக்கும். புதிய அலகு வளரும் வரை, அங்கேயே தனித்திருக்கும்.

புதிய அலகு வளர்ந்த பின், இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்திற்கு, சுமார், 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு, அதன்பின், 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

புயல் காற்றின் மூலம், மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடியும் என்பதால், புயலை மிகவும் விரும்பும், கழுகுகள். மேலும், அவை மணிக்கு, 32 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் உடையவை.

உலகின் மிகப்பெரிய கழுகான, பிலிப்பைன்ஸ் நாட்டு கழுகுகளின் இறக்கை, 8 அடி நீளம் உள்ளவை. அவை, ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மானையோ துாக்கிச் செல்லும் அளவிற்கு, திறன் உடையவை.

குதிரைகள் நின்று கொண்டு துாங்குவது போல, கழுகுகள் மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டே துாங்கும். அவை, மிகவும் புத்திசாலித்தனமானவை. ஆமை, நத்தை போன்றவற்றை உண்ணும் போது, அவற்றின் ஓடுகள் உடையும் வண்ணம், அவைகளை மலை உச்சியில் இருந்து பாறை மேல் வீசி எறிந்து, பின் ஓட்டை உடைத்து உண்ணும்.

சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில், கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. அப்படிப்பட்ட அந்த இனம், உலகில் வேகமாக அழிந்து வருகிறது.

பயிர்களை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக, விவசாயிகள் ரசாயனப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள், நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி, இறக்க நேரிடுகிறது.

கழுகுகளின் அழிவிற்கு இன்னொரு காரணம், மின்சாரக் கம்பிகள். பெரும்பாலான கழுகுகள், மின் கம்பியில் மோதி, இறக்கின்றன.

இது, பெரிய பிரச்னையாக உருவெடுத்ததை அடுத்து, அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில், கழுகும் சேர்க்கப்பட்டுள்ளன; அதைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காகவே, ஆண்டுதோறும், செப்டம்பர் முதல் சனிக்கிழமை, சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

நம் முன்னோர்களைப் போல, கழுகுகளை கடவுளாக பார்க்காவிட்டாலும், பயன் தரும் பறவையாக கருதி, அவற்றை அழிவிலிருந்து காக்க வேண்டும்.

விஜயன் செல்வராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us