
எம்.மொவன்குட்டி, கோவை: நம் வாரமலர் இதழில், குமரி மாவட்டத்தைத் தவிர, மற்ற மாவட்டத்துக்காரர்கள் அனைவரும் எழுதுகின்றனரே... குமரி மாவட்டத்திற்கு, தினமலர் - வாரமலர் செல்வதில்லையா?
அனுப்புகின்றனரே... வெளியிட்டு வருகிறோமே!
சிவராமன் ரவி, பெங்களூரு: பிஜு ஜனதா தளத்தின், 24 ஆண்டு கால ஒடிசா ஆட்சியைத் தகர்த்த, பா.ஜ.,வால், தமிழகத்தில் ஏன் காலுான்ற முடியவில்லை?
தமிழகத்தில், பா.ஜ., 11.48 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது, வளர்ச்சி தானே; அதுவும், அ.தி.மு.க., கூட்டணி இல்லாமல். தி.மு.க.,வுக்கு, 5 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளதே!
* பா.பரத், சிதம்பரம்: வாரமலர் இதழுடன், இதுவரை, எந்த தமிழ் பத்திரிகையும் போட்டி போட்ட மாதிரி தெரியவில்லையே?
போட்டி போட்டனர்; ஆனால், வெற்றி பெற முடியவில்லை!
* ஜி.அர்ஜுனன், அவிநாசி: தமிழகத்தில், 5 லட்சம் பேருக்கு, தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்ற புள்ளி விவரம் வெளியாகி இருக்கிறது. இது, யாருக்கு கிடைத்த வெற்றி?
திராவிட மாடல் ஆட்சிக்கு!
பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்: விலை உயர்ந்த ஆபரணம் உங்கள் கழுத்து, கை விரல்களில் இல்லையே... ஏன்?
அனைத்தும் இம்சை!
கே.ஆறுமுகம், கோவை: தங்கள் வெளிநாட்டு பயணங்களில், சைவ உணவிற்காக அலைந்த அனுபவம் எப்படி?
அசைவ ஹோட்டல்களிலும், சைவ உணவு கிடைக்கும். அதனால், அலைந்ததில்லை!
மு.சிவா, சிவகாசி: முன்னேற நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும்?
முன்னேற வேண்டும் என்றால், உங்கள் கால்களில் நடந்து போங்கள். பிறர் முதுகின் மேல் சவாரி செய்யாதீர்கள்!