/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
/
கவிதைச்சோலை - வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
PUBLISHED ON : ஜூன் 23, 2024

பொய்யும் புரட்டும்
பொங்கியெழும் இடமெல்லாம்
உண்மையும், சத்தியமும்
வேரோடு சரிந்து
சோதனைகளாக வந்து குவியும்!
தொழில் வளம் பெருகும்
இடமெல்லாம்
வருமானம் கொழித்து
வாழ்க்கை தரம்
ஆல மரம் போல
உயர்ந்து நிற்கும்!
கற்றல் திறன்
மிகுந்த இடமெல்லாம்
அறிவும், அனுபவமும்
அளவில்லாமல் வளர்ந்து
பணிவும், பண்பும்
வளர்ச்சி கொடுக்க
துணை நிற்கும்!
மரங்களை வளர்த்த
இடங்களில் எல்லாம்
மேகங்கள் ஒன்று திரண்டு
மழை பொழிவை அதிகரிக்கும்!
மதிப்பும், மரியாதையும்
மேலோங்கும் இடமெல்லாம்
நல்லுறவு பூத்துக்குலுங்கி
ஒற்றுமை வலிமை பெறும்!
அவசியமற்ற வார்த்தைகள்
அள்ளி வீசப்படும் இடமெல்லாம்
அமைதி சீர்குலைந்து
பிரிவினை எட்டிப் பார்க்கும்!
அநீதியும், அட்டூழியங்களும்
கைகோர்க்கும் இடமெல்லாம்
நிம்மதி சுக்குநுாறாகி
வேதனை எனும் தீ
வாழ்க்கையை சுட்டெரிக்கும்!
உழைப்புக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் இடமெல்லாம்
பிழைப்புக்கு வழியின்றி
வறுமை நோய் வாட்டி வதைத்து
வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி
வைத்து விடும்!
— எல்.மூர்த்தி, கோவை.