/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: தலைமை நீதிபதியின் பிறந்தநாள்!
/
விசேஷம் இது வித்தியாசம்: தலைமை நீதிபதியின் பிறந்தநாள்!
விசேஷம் இது வித்தியாசம்: தலைமை நீதிபதியின் பிறந்தநாள்!
விசேஷம் இது வித்தியாசம்: தலைமை நீதிபதியின் பிறந்தநாள்!
PUBLISHED ON : மே 10, 2026

மே 16 - சனி ஜெயந்தி
த லைமை நீதிபதியா... எந்தக் கோர்ட்டுக்கு என, குழம்ப வேண்டாம். இவர், இந்த உலகிற்கே தலைமை நீதிபதி. வழக்கு தொடுக்காமலே, அனைவரது தவறுகளுக்கும் தண்டனை தருபவர். அவர் தான், சனி பகவான். அவரது பிறந்த நாள் எது தெரியுமா? வைகாசி மாத அமாவாசை.
சனி பகவான் என்றால், அவரது பெயர்ச்சி நாளைத் தான் தமிழகத்தில் எதிர்பார்க்கிறோம். வடமாநிலத்தவர்கள் ஒவ்வொரு வைகாசி அமாவாசையன்றும் வரும், சனி பகவானின் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இந்நாளில், சனி பகவானின் பிறப்பு பற்றி கதை கேட்டால் புண்ணியம் என, நம்புகின்றனர்.
சூரியனுக்கு, சுவர்ச்சலா என்ற மனைவி உண்டு. இவளுக்கு, வைவஸ்வத மனு மற்றும் எமன் ஆகிய மகன்களும், யமுனா என்ற மகளும் உண்டு. ஒரு சமயம், சூரியனின் வெப்பத்தை தாள இயலாத, சுவர்ச்சலா, தன் நிழலில் இருந்து, தன்னை போலவே ஒரு பெண்ணை உருவாக்கி, சாயா என, பெயரிட்டு, சூரியனையும், தன் பிள்ளைகளையும் அவளிடம் ஒப்படைத்து விட்டு, கணவனிடம் சொல்லாமல், தந்தை வீட்டுக்குப் போய் விட்டாள். கணவனுக்கு தெரியாமல் வந்த மகளை, கணவன் வீட்டுக்கே திரும்ப போகச் சொன்னார், தந்தை. இதை ஏற்காத சுவர்ச்சலா, சிவனை எண்ணி தவம் இருக்க போய் விட்டாள்.
இந்த விஷயங்களை அறியாத, சூரியன், சாயாதேவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். தப்தி என்ற மகளையும், இரண்டு மகன்களையும் பெற்றாள், சாயா. கடைசி மகனுக்கு, ச்ருதகர்மா என, பெயரிட்டனர். இந்தக் குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் கருப்பாக இருந்தது, தன் குடும்பத்தில் மற்ற குழந்தைகள் அழகாக இருக்க, இந்தக் குழந்தை மட்டும் கருப்பாக இருந்ததால், சூரியனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, சாயாவிடம் விளக்கம் கேட்டார், சூரியன்.
வேறு வழியின்றி, சூரியனிடம் உண்மையைச் சொன்னாள், சாயா...
'நான் ஒரு சிவபக்தை. எந்நேரமும் அவரை மனதில் தியானிப்பேன். ஒருமுறை சிவனின் வெப்பம் என்னைத் தாக்கியது. அதன் விளைவாக கர்ப்பத்தில் இருந்த குழந்தை கருப்பாகி விட்டது. அது மட்டுமல்ல, நான், உங்கள் மனைவியே அல்ல. அவளைப் போலவே உருவாக்கப்பட்டவள்...' என்றாள். உண்மையை அறிந்த, சூரியன், அவளையும் கருப்பாக இருந்த மகனையும் ஒதுக்கி விட்டார்.
வருத்தமடைந்த ச்ருதகர்மா, சிவனை எண்ணி தவமிருந்து, அவரது அருளால் நவக்கிரக பதவி பெற்றார். அவருக்கு, சனி என, பெயர் சூட்டினார், சிவன். சனி என்றால், தர்மத்தைப் பாதுகாப்பவர் என்று பொருள். யாராக இருந்தாலும், அவரது பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலன் தரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வகையில், அவர் ஒரு நீதிபதியாக விளங்குகிறார்.
சனி பகவானின் அருள் இருந்தால் தான், நல்ல உணவும், தீர்க்காயுளும் கிடைக்கும். ஏழரை சனி காலத்தில் தவறு செய்தவர்களை விட்டு வைக்க மாட்டார்.
சனி ஜெயந்தி நாளில், யாருக்கும் கெடுதல் செய்யாத மனம் வேண்டும் என வரம் வாங்குவோம்.
- தி. செல்லப்பா

