
* கோடையில் காலை எழுந்து, பல் துலக்கியதும், இரண்டு டம்பளர் தண்ணீர் குடித்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். உடம்பு சூடு தணிந்து, குளிர்ச்சியடைய துவங்கும்.
* கோடையில் ஒரு நாளைக்கு, 12 டம்பளர் தண்ணீர் குடியுங்கள். உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல் இருக்கும்
* இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளவர்கள், மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து, காலையில் குடிக்கலாம். வெப்பத்தால் வரும் கோளாறுகள் சரியாகி விடும்
* ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளித்தால், மொத்த உடம்பும் குளிர்ச்சியடையும்
* தேவையில்லாமல், வெளியில் சுற்றுவதை தவிர்க்கலாம். அவசிய தேவையெனில், வெளியில் செல்லும்போது, குடை, 'சன் கிளாஸ், ஸ்கார்ப்' மற்றும் தொப்பி என்று பாதுகாப்பாக போகலாம்
* வெயில் காலத்தில் வாசனை திரவியங்களை தவிர்த்து, ஜவ்வாது, பன்னீர் மாதிரியான இயற்கை வாசனை பொருட்களுக்கு மாறி விடலாம்
* சர்க்கரை சேர்க்காத, 'ப்ரெஷ் ஜூஸ்' அல்லது தினம் ஒரு இளநீர் குடிக்கலாம்; சூடு தணியும். பாட்டில் குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம்
* முடிந்த வரை, அசைவ உணவை தவிர்க்கலாம்
* வெயிலிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடனே, 'பிரிஜ் வாட்டரை' தேடாதீர். அதற்கு பதிலாக எலுமிச்சைப் பழ ஜூஸ் குடித்தால், வியர்வையால் இழந்த தாது உப்புக்களை மீண்டும் பெற்று விடலாம்
* மதிய உணவில் கட்டாயம் மோர் சேர்த்துக் கொள்ளவும்
* தினமும் தலைக்கு எண்ணெய் வையுங்கள். 'அய்யோ... முகத்தில் எண்ணெய் வழியுமே...' என்று நினைப்பவர்கள், இரவே ஒரு தேக்கரண்டி எண்ணெயை உச்சந்தலையில் வைத்து படுத்து விடுங்கள். உச்சந்தலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இதுவும் முடியாது என்பவர்கள், ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளியுங்கள்
* நம் வீடும் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், ஜன்னல்களுக்கு, அடர் நிற திரைச்சீலை போடுங்க, வெப்பத்தை வீட்டுக்குள்ளே விடாது.
* சூரியன் மறைந்த பிறகு, ஜன்னல் கதவுகளை கொஞ்ச நேரம் திறந்து வைத்திருந்தால், இரவு அனலாக இருக்காது. பால்கனியில் சாயந்திரமே தண்ணீர் தெளித்து வைத்து விட்டீர்களென்றால், இரவு, வீடு ஓரளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
* உச்சந்தலை போலவே, பாதமும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதனால், 'லெதர், பைபர்' தவிர்த்து, தரமான ரப்பர் செருப்புக்கு மாறுங்கள்.
* கோடை வந்தால், சிலருக்கு சூடு கொப்புளமும், கட்டிகளும் வந்துவிடும். இதற்கு, கற்றாழையின் சோற்றுப் பகுதியை அதன் மேல் தடவுங்கள். அப்படியே அமுங்கி விடும் அல்லது தேங்காய்ப் பாலில் வெள்ளை மிளகு, சீரகம், கசகசா ஊற வைத்து அரைத்து, தேய்த்து குளிக்கலாம்.
* தண்ணீரில் கொஞ்சம் பன்னீர் விட்டு குளித்தால், வறண்ட சருமம் கூட மென்மையாகும்.

