sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எது உயர்ந்த பக்தி!

/

எது உயர்ந்த பக்தி!

எது உயர்ந்த பக்தி!

எது உயர்ந்த பக்தி!


PUBLISHED ON : ஜன 29, 2017

Google News

PUBLISHED ON : ஜன 29, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாவிஷ்ணுவிடம், தன் மனதை பறி கொடுத்த காஞ்சி மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும், விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என, வழிபட்டு வந்தார். நாளாக நாளாக, 'நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும், ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம்... வாசனையும், அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள்; உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள்... இம்மாதிரியான வழிபாட்டை யாருமே செய்ய முடியாது...' என்ற எண்ணம், அவர் மனதில் தோன்ற, ஆணவம் எனும் நச்சு மரம், அவருள் வேர் விட துவங்கியது.

ஒருநாள், மன்னர் உலாவச் சென்று அரண்மனை திரும்புகையில், வழியில், மரத்தடியில், ஏழை பக்தர் ஒருவர், பகவானின் சிறிய விக்ரகம் ஒன்றை வைத்து, துளசியால் அர்ச்சனை செய்வதை பார்த்தார். உடனே, அவரை கூப்பிட்டு, 'என் பகவானை, வெறும் துளசியை சாற்றி, அலங்கோலமாக்கி விட்டாயே... அரண்மனையில் வந்து பார்...' என்றார், பெருமையுடன்!

'மன்னா... வசதியை காட்டி, பகவானை வசப்படுத்த முடியாது; தூய்மையான பக்தி ஒன்றிற்கே பகவான் வசப்படுவார் ...' என்றார்.

உடனே, மன்னருக்கு கோபம் வந்து, 'போதும் உன் பேச்சு; நீ, முதலில் பகவானை பார்க்கிறாயா அல்லது நான் பார்க்கிறேனா என்று பார்க்கலாம்...' என்று சொல்லி, அரண்மனை திரும்பினார்.

பின், முத்கல ரிஷி மூலம், பிரமாண்டமான யாகம் செய்தார். காஞ்சியில் நடந்த அந்த யாகத்தை பற்றி, அனைவரும் சிலாகித்து, மன்னரின் பக்தியை பாராட்டினர்.

அதேசயம், ஏழை பக்தர், 'பகவானை தரிசிக்காமல், காஞ்சி திரும்ப மாட்டேன்...' என்று உறுதி எடுத்து, காஞ்சி நகருக்கு வெளியே விரதமிருந்து, வழிபாட்டைத் துவக்கினார். தானே நைவேத்தியம் தயாரித்து, கடவுளுக்கு படைத்து, அப்பிரசாதத்தையே ஒரு வேளை உண்டு, வழிபாடு நடத்தி வந்தார்.

ஒருநாள், வழக்கமாக, வழிபாட்டை முடித்தவர், கண்மூடி இறைவனை நமஸ்கரித்து, பிரசாதத்தை எடுக்க குனிந்த போது, அங்கே, பிரசாதத்தை காணவில்லை.

இவ்வாறாக ஆறு நாட்கள் நீடித்தது. ஏழாவது நாள்... பிரசாதத்தை விக்ரகத்தின் முன் படைத்து, மறைந்து நின்று கவனித்தார்.

அப்போது, மெலிந்த, கந்தலாடை, பரட்டைத் தலையுடன் இருந்த ஒருவன் பிரசாதத்தை அள்ளிக் கொண்டு ஓடினான். அதைப் பார்த்த பக்தர், அவன் பின் ஓடினார். முன்னால் ஓடியவன் கல் தடுக்கி, கீழே விழுந்து, மயக்கமடைந்தான். உடனே, அவனை தூக்கி உட்கார வைத்து, தன் மேலடையால் அவனுக்கு விசிறினார், பக்தர்.

அடுத்த நிமிடம், 'பக்தா... நீ வென்று விட்டாய்...' என்றபடியே, ஏழை வடிவம் மறைய, அங்கே, பக்தருக்கு தரிசனம் தந்தார், திருமால்.

தகவல் அறிந்த மன்னர், 'தூய்மையான பக்தியே உயர்ந்தது...' என கூறி, ஆடம்பரங்களை நீக்கி, யாக குண்டத்தில் குதிக்க, அவருக்கு பகவான் தரிசனம் தந்தார்.

அன்பும், இரக்கமும் நிறைந்த தூய்மையான பக்தியே, பகவானை வசப்படுத்தும் என்பதை விளக்கும் கதை இது!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

முளைப்பாரி எடுப்பதன் நோக்கம் என்ன?

முற்காலத்தில், தூர பயணங்களுக்கு செல்வோர், நீண்ட நாட்களுக்கு, உணவுகளை எடுத்து செல்ல முடியாது. இது போன்ற காரணத்தால், சமைக்காமல் சாப்பிடும் தானியங்களை, ஆறு மற்றும் குளத்து ஓரங்களில் நட்டு வந்தனர். காலப்போக்கில், இம்முறை ஒழுங்குபடுத்தப்பட்டு, பெண் தெய்வ வழிப்பாட்டு முறைகளில், இதை ஒரு சடங்காகவே மாற்றினர். முக்கியமாக, மழை காலம் துவங்குவதற்கு முன், அம்மன் கோவில் திருவிழாக்களின் போது, வீட்டில் தானியங்களை, மண்பானையில் இட்டு, முளை உண்டாக்கி, அதை, ஆற்றில் கலந்து விடுகின்றனர்.

அவை ஆற்றின் போக்கில் சென்று, தரை தட்டிய இடங்களில், முளைவிட்டு வளரும். அக்காலங்களில், ஆற்றின் கரையோரங்களில், பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்ட வழிப்போக்கர்களும், துறவிகளும், தங்களின் பசியாற்ற, முளைபாரியில் விட்ட, பயிர்களின் செடியில் இருந்து தானியங்களை எடுத்து, உண்டு பசியாறி வந்தனர்.






      Dinamalar
      Follow us