தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மன உறுதி ஜெயிக்கும்!

மன உறுதி ஜெயிக்கும்!

மன உறுதி ஜெயிக்கும்!


PUBLISHED ON : மார் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 14 - காரடையான் நோன்பு

மன உறுதி, பொறுமை மற்றும் சேவை மனப்பான்மை இருந்தால், மரணத்தைக் கூட வென்று விடலாம் என்பதற்கு, சாவித்திரியின் வாழ்க்கையே உதாரணம்.

பறவை ஒன்று, கடற்கரையில் முட்டைகளை இட்டது. அதை, அலை, கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால், கடல் மீது கோபம் கொண்ட பறவை, தன் அலகால், கடல்நீரை முகர்ந்து, சிறிது தொலைவில் போய் கொட்டியது. அவ்வழியே வந்த நாரதர், பறவையின் விசித்திர செயலை பார்த்து, 'பறவையே... ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்டார்.

நடந்ததைக் கூறி, 'என் முட்டைகளை மீட்டாக வேண்டும்; கடலை, என் அலகால் முகர்ந்து கொட்டினால், எவ்வளவு காலமாகும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. மனஉறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என நம்புகிறேன்...' என்றது!

இதைக்கேட்ட நாரதர், அப்பறவையின் மன உறுதியை பாராட்டி, அதற்கு உதவி செய்து, முட்டையை மீட்டுக் கொடுத்தார்.

இத்தகைய மன உறுதி கொண்டவள் தான் சாவித்திரி!

பார்வையற்ற ராஜா ஒருவரின் நாட்டை, எதிரிகள் பறித்துக் கொண்டதால், அவர், தன் பார்வையற்ற மனைவி மற்றும் ஒரே மகன் சத்தியவானுடன் காட்டில் குடியேறினார். மற்றொரு நாட்டின் இளவரசியான சாவித்திரி, சத்தியவானைப் பற்றி அறிந்து, அவனை மணம் புரிய விரும்புவதாக தன் பெற்றோரிடம் கூறினாள்.

அச்சமயம், அங்கு வந்த நாரதர், அவனது ஆயுட்காலம் விரைவில் முடிய உள்ளதாக சாவித்திரியின் தந்தையிடம் கூறினார். அதனால், அவள் விருப்பத்துக்கு மறுத்தனர் பெற்றோர். ஆனால், 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்; மணந்தால் சத்தியவானைத் தான் மணப்பேன்...' என்று உறுதியாகச் கூறி விட்டாள் சாவித்திரி.

திருமணமும் முடிந்தது; பார்வையற்ற மாமியார், மாமனாருக்கு மனம் கோணாமல் சேவை செய்தாள் சாவித்திரி. கணவன் மீதும் உயிரையே வைத்திருந்தாள்.

எமன், சத்தியவானின் உயிரை கவர்ந்த போது, சாவித்திரியின் பதிபக்தி, மாமனார் மாமியார்க்கு செய்த சேவை, காத்யாயினி தேவிக்கு காரடை படைத்து வணங்கியது போன்றவற்றின் பலாபலன்களால், அவளது கண்களுக்கு எமன் தெரிந்தான். மனஉறுதி மற்றும் சமயோசித புத்தியுடன் எமனுடன் போராடி, கணவனின் உயிரை மீட்டது மட்டுமல்லாமல், தன் குடும்பத்திற்கு தேவையான மற்ற வசதிகளையும் கேட்டுப் பெற்றாள்.

மாசி மற்றும் பங்குனி மாதம் இணையும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும். கார்பருவம் எனப்படும் முதல்போகத்தில் விளைந்த நெல்லில் இருந்து குத்தியெடுத்த அரிசியை மாவாக்கி, அதனுடன் வெல்லம், காராமணி சேர்த்து அடை தயாரிப்பர். இதனால் இது, 'காரடை' என்று பெயர் பெற்றது. இதை திருவிளக்கின் முன் வைத்து, நைவேத்யம் செய்து சாவித்திரியை வணங்குவர்.

பெண்களே... உங்கள் மாங்கல்ய பாக்கியத்திற்காக மட்டுமல்ல, மனஉறுதியுடன் செயல்படுவதற்கும், மறைந்து போன கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மீட்டு வருவதற்கும் உரிய நன்னாளாக, காரடையான் நோன்பை மேற்கொள்ளுங்கள்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us