PUBLISHED ON : செப் 10, 2023

செப்., 10 - உலக எழுதுகோல் தினம்!
பள்ளி மாணவ - மாணவியர் தவிர, பெரும்பாலானோர் தற்போது, தொழில்நுட்ப உபகரணங்களான, லேப் - டாப், கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி எழுதுகின்றனர். இதனால், மூளையின் ஆற்றலை இழந்து வருவதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
'எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை பேப்பரில் எழுதி வந்தால், உங்கள் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். மேலும், எழுதிய அந்த விஷயம், சில மணி நேரத்திற்கு பின்னரும், சட்டென்று நினைவுக்கு வரும்.
'உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்கும் போது, மகிழ்ச்சியாக உணர்வது போலவே, நீங்கள் எழுதும் போதும், மன மகிழ்ச்சி பெறுவீர்கள். நாம் எழுதும் போது, நம் மூளையில் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும், 'டோபமைன்' ஹார்மோன் சுரப்பது இதற்கு காரணம்...' என்கிறார், ஹார்வர்டு பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர், டாக்டர் அலஸ்.
உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் கொஞ்ச நேரமாவது கையால், பேனா அல்லது பென்சில் கொண்டு எழுதுங்கள். கற்கவும், அதை நினைவில் வைக்கவும் உதவுவதாக கூறுகின்றனர், டோக்கியோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள். காகிதத்தில் எழுதுவதால், மாணவர்களின் மூளை செயல்பாடு, சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது என்கின்றனர்.
ஒரு விஷயத்தை கற்க, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை விட, கையால் அதை எழுதி கற்பதே, மற்றவைகளை விட, 25 சதவீதம் மேலானது.
ஒரு மணி நேரம் ஒரு விஷயத்தை கற்க வைத்த பரீட்சார்த்த போட்டியில், அந்த விஷயத்தை தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் எழுதும் போது, 14 நிமிடங்கள் ஆனது. அதுவே கையால் எழுதும்போது, 11 நிமிடங்கள் ஆனது. அதாவது, தொழில்நுட்ப உபகரணங்களை விட, கையால் எழுதும் போது விரைவில் எழுத முடிகிறது என்பது தான்.
மூளையின் ஆரோக்கியம் காக்கவும், அதன் நினைவுத் திறனை மேம்படுத்தவும், தினமும் உங்கள் கைப்பட பேப்பரில் கொஞ்ச நேரம் எழுதுங்கள் என்கின்றனர், மூளை நரம்பியல் விஞ்ஞானிகள். நீங்கள் படித்ததில் பிடித்ததை அல்லது உங்களுக்கு தோன்றும் புதிய சிந்தனைகளை குறிப்பு எடுத்து, எதிலாவது சில பக்கங்களை எழுதுங்கள். அது, உங்கள் மூளைக்கு தரும் நல்ல பயிற்சி.
பேப்பர், பேனாவில் எழுதும் சிறுவர்களுக்கு ஞாபக சக்தியும், புரிந்து கொள்ளும் திறனும் அதிகம் என, மூளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய, நார்வே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் இதே திறன் ஏற்படுகிறது.
சிலர், அன்றாடம் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை, தங்களது டைரியில் இரவில் எழுதி வருவர். இந்த பழக்கம், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் அவர்களின் ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், நல்ல துாக்கம் வரவும் உதவுகிறது என்கின்றனர்.
கையால் அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருவது குறைவு என்றும் கண்டறிந்துள்ளனர், சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்.
அன்பு, கோபம், ஏக்கம், பிரிவு, வெற்றி மற்றும் தோல்வி என, அனைத்தும் சேர்ந்தது தான் வாழ்க்கை. கடினமான சூழல் வந்தாலும் சமாளிக்க வேண்டும்.
பதற்றமான சூழலில் உங்கள் எண்ணங்களை, உணர்ச்சிகளை ஒரு பேப்பரில் எழுதுங்கள். சிறிது நேரத்தில் தேவையற்ற பதற்றம் குறையும், தெளிவு பிறக்கும் என்கிறார், வாரன் பல்கலைக்கழக உளவியல் வல்லுனர், டாக்டர் ஆடம் கிரான்ட்.
கையால் எழுதுவது என்பது, மூளையுடன் தொடர்புடைய ஒரு திறமை. மேலும், வாழ்க்கையின் வெற்றிக்கு கையெழுத்து ஒரு திறவுகோல். இதை நீங்களும் புரிந்து, உங்கள் குழந்தைகளுக்கும் தெளிவுபடுத்துங்கள். அவர்கள் கைப்பட எழுத ஊக்குவியுங்கள்.
கோவீ. ராஜேந்திரன்

