
ஊரிலிருந்து அப்பாவை பார்க்க அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக வந்திருந்தனர். நான்கு ஆண்டுகளாக எந்த உணர்வும் இல்லாமல் படுக்கையில் ஜடமாகப் படுத்திருக்கும் அப்பாவிடம் சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியே வந்தனர்.
''என்ன விஷயம் ரகு. நீயும், ராமுவும் திருச்சி, கோயமுத்துாரிலிருந்து ஒண்ணா புறப்பட்டு வந்திருக்கீங்க?''
''இதென்னம்மா கேள்வி, உன்னையும் அப்பாவையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம்,'' என்றான், ராமு.
அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தவள், ''வாங்க சாப்பிடலாம்,'' மகன்களை அழைத்தாள்.
''சிக்கன் கிரேவி ரொம்ப நல்லாயிருந்துச்சும்மா. உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு. உன் கை சமையலுக்கு ருசி அதிகம்,'' என, ரகு சொல்ல, அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
''சரிம்மா, நீ சாப்பிட்டுட்டு ஹாலுக்கு வா... உன்கிட்டே சில முக்கியமான விஷயம் பேசணும்,'' என்றான், ராமு.
காரணத்தோடு தான் இருவரும் சேர்ந்து வந்திருப்பதாக நினைத்து, எதுவும் சொல்லாமல் சமையலறை சென்றாள்.
முந்தானையில் ஈரக்கையைத் துடைத்தபடி, ''என்னப்பா விஷயம் சொல்லுங்க,'' என, அருகில் அமர்ந்தாள்.
''பாவம்மா நீ... நாலு வருஷமா அப்பாவோடு சிரமப்படறே. அவர்கிட்டே எந்த மாற்றமுமில்லை. எந்த உணர்ச்சியுமில்லாத ஜடமாகப் படுத்திருக்காரு,'' என்றான், ராமு.
''என்னப்பா பண்றது... கடவுள் சில விஷயங்கள் இப்படித்தான் நடக்கணும்ன்னு முடிவு பண்ணியிருக்கும் போது, நாம் அதை ஏத்துக்க தானே வேணும். எனக்கு எந்த கஷ்டமுமில்லப்பா.
''சமையலுக்கு ஆள், அப்பாவை கவனிக்க ஒரு ஆள்ன்னு இருக்காங்க. என் பங்குக்கு நானும் அவரை நல்லபடியாக கவனிச்சுக்கிறேன். அவ்வளவுதான்.''
ராமுவும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''இதே மாதிரி உணர்வு இல்லாமல், தான் யாருங்கிறது கூட தெரியாமல் வியாதியில் படுத்தவங்களை பராமரிக்க எத்தனையோ நல்ல, 'ஹெல்த்கேர்' நிறுவனங்கள் இருக்கும்மா... மாசா மாசம் பணம் கட்டினால் போதும் பொறுப்பா கவனிப்பாங்க.
''அம்மா... நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே, யதார்த்தத்தைச் சொன்னேன். அவருக்கு, தான் யாரு, எங்கே இருக்கோம், பக்கத்தில் இருந்து கவனிப்பது யாரு. இப்படி எதுவுமே தெரியாமல் உணர்ச்சியற்ற கட்டையாகக் கிடக்கிறாரு.
''அவரைப் பராமரிக்க இத்தனை ஆள்... அப்பாவை ஹோமில் சேர்த்துட்டு, நீ எங்களோடு வந்து இரும்மா. வீட்டை வாடகைக்கு விடலாம். நீயும் சிரமப்படாமல் இருக்கலாம். உனக்கும் வயசாகுது. உன் உடம்பை கவனிக்க வேண்டாமா?
''உன் நல்லதுக்குதான் நானும், தம்பியும் சேர்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கோம். என்னம்மா சொல்ற?'' என்றான், ராமு.
''நீங்க சொல்றது சரிதான். அப்பா ஒருத்தருக்காக நிறைய செலவாகுது. ஆனா, இதெல்லாம் அவர் சம்பாதித்தது. இந்த வீடு அவருடைய உழைப்பு. செலவுக்கு பணம் அவர் சேமிப்பும், அவருக்கு வருகிற பென்ஷனும் தான். எந்த விதத்திலும் உங்களை நாங்க சிரமப்படுத்தலையே?''
''என்னம்மா இது, இப்படி பேசற. நாங்க சொல்ல வந்ததை நீ சரியா புரிஞ்சுக்கலை.''
''முதலில் நான் சொல்றதை நீங்க புரிஞ்சுக்கங்க. அவருக்கு உணர்வுகள் மறுத்து போயிருக்கலாம். நான் யாருங்கிற நினைப்பு கூட இல்லாமல் இருக்கலாம். ஒரு பொம்மையாக, கட்டையாக, ஜடமாக படுக்கையில் கிடக்கலாம். ஆனால், அவர் என்னை தொட்டு தாலி கட்டியவர். இந்தக் குடும்பத்துக்காக உழைத்தவர்.
''இரண்டு பிள்ளைகளை பெத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். என்னோடு, 40 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியவர். அவருக்கு என்னை, அவர் மனைவின்னு அடையாளம் தெரியலைன்னாலும், அவர் என் கணவர்ங்கிறது எனக்கு தெரியும்பா. உயிரோடு கலந்த அந்த உன்னதமான உறவை, உணர்ச்சியற்ற ஜடம்ன்னு என்னால நினைக்க முடியாது.''
கண்களில் வரத்துடிக்கும் கண்ணீரை அடக்கி, விழி உயர்த்தி இருவரையும் பார்த்து, ''அவர் உங்களைப் பெற்றவர். வளர்த்து ஆளாக்கியவர். உங்களுடைய அப்பாங்கிறதை தாண்டி, உங்க கண்ணுக்கு அவர் உணர்வில்லாத மனுஷனா தெரியலாம். என்னால் அப்படி மனதால் கூட நினைக்க முடியாது.
''என் உடம்பில் உயிர் இருக்கும் வரை, அவருக்காக பணிவிடை செய்வேன். இதில் எனக்கு எந்த சங்கடமும், கஷ்டமும் இல்லை. அவர் காலத்திற்குப் பிறகு, நீங்க என்ன சொல்றீங்களோ, அதுபடி நடந்துக்கிறேன்.
''தயவுசெய்து, இனி இதுபற்றி எதுவும் பேச வேண்டாம். நான் போய் அப்பாவுக்கு காபி கலந்து தரணும். நீங்க இரவு தங்கறதா இருந்தா டிபன் செய்ய சொல்றேன்,'' என்றபடியே அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் சமையலறையின் உள்ளே போக, இருவரும் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.
பரிமளா ராஜேந்திரன்