/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக மகசூலுக்கு காஞ்சி ரக வெள்ளை கத்தரி
/
அதிக மகசூலுக்கு காஞ்சி ரக வெள்ளை கத்தரி
PUBLISHED ON : ஜூலை 30, 2025

கா ஞ்சி ரக வெள்ளை நிற கத்தரி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து வருகிறேன். வரிசை நடவு முறையில், காஞ்சி ரக வெள்ளை நிற கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.
ரசாயன உரங்களை பயன்படுத்தி, கத்தரி காய்கறி சாகுபடி செய்யும் போது, மூன்று மாதங்கள் வரையில் காய்கள் அறுவடை மட்டுமே செய்ய முடியும். இயற்கை உரங்களை பயன்படுத்தி, அதே கத்தரிக்காய் சாகுபடி செய்யும் போது, ஆறு மாதங்களுக்கு மேலாக காய் அறுவடை செய்யலாம்.
பிற ரக கத்தரிக்காய் செடிகளை காட்டிலும், காஞ்சி ரக வெள்ளை நிற கத்தரிக்காய் செடி இயற்கை உரங்களை உள்வாங்கி அதிக மகசூல் அளிக்க வழிவகுக்கும்.
குறிப்பாக, ஒவ்வொரு முறையும் கத்தரிக்காய் அறுவடை செய்த பின், இயற்கை உரங்களை துாவி விட்டு நீர் பாய்ச்சும் போது, முதலில் அறுவடை செய்ததில் கிடைக்கும் மகசூல் போல கடைசி அறுவடைக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
-சு.ரமேஷ், 81109 44475.

